full screen background image

“தமிழ்ச் சினிமா மோசமாக இருக்க தமிழக அரசுதான் காரணம்.” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு!

“தமிழ்ச் சினிமா மோசமாக இருக்க தமிழக அரசுதான் காரணம்.” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு!

எம்.என்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில், எம்.நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ்.மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக் களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்’.

இப்படத்தில் எம்.நாகரத்தினம் நாயகனாக நடிக்க, இலக்கியா நாயகியாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ கே ஆல்ட்ரின்  இசையமைத்துள்ளார். ராஜேந்திர சோழன் படத் தொகுப்பு செய்ய, இடி மின்னல் இளங்கோ சண்டைப் பயிற்சி செய்துள்ளார்.

கிராமத்துப் பின்னணியில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அழகான கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் எஸ்.மோகன்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக் குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் நாகரத்தினம் பேசும்போது, “எங்களை வாழ்த்த வந்துள்ள கலைத்துறை ஜாம்பவான்களுக்கு நன்றி, எத்தனையோ ஜாம்பவான்கள் கோலோச்சிய இந்த கலைத் துறையில் நானும் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு உங்கள் ஆதரவைத் தந்து வாழ்த்துங்கள் நன்றி..” என்றார்.

இயக்குநர் V.சேகர் பேசும்போது, “வள்ளிமலை வேலன் படத்தை வாழ்த்த வந்திருக்கும் உள்ளங்களுக்கு நன்றி.  வள்ளிமலை வேலன்  படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள்.  இப்போது முருகன்தான் சீசன் போல.. அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது. சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இந்தப் படத்திற்கேற்ற மாதிரி கதாநாயகன், காதாநாயகி பொருத்தமாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் எல்லோரும் நன்றாகச் செய்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இப்போது படம் எடுப்பது பாதி வேலைதான். அதை புரமோட் செய்வதுதான் முக்கிய வேலையாக உள்ளது. அதைச் சரியாகச் செய்ய வேண்டும். நாங்கள் படம் எடுக்கும்போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 தியேட்டருக்கு மேல் தர மாட்டார்கள், ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி 1000 திரையரங்குகளில் பெரிய  படம் மட்டும்தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும். இது மாற வேண்டும். படத்தை நல்ல தியேட்டர் பார்த்து ரிலீஸ் செய்யுங்கள்.  வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “வள்ளிமலை வேலன் பாடல்களைப் பார்த்தேன். அப்பா பாடல் மிக அருமையாக இருந்தது. சுரேந்தர் பாடியுள்ளார் என் படத்தில் பாடல்  பாடியவர். நண்பர்கள் நாங்கள். சினிமா பல அழகான உறவுகளைத் தருகிறது.

இயக்குநர் V சேகர், இப்போது சினிமா இருக்கும் மோசமான நிலையை அருமையாகப் பேசினார். இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது. சினிமா மோசமாக இருக்க அரசுதான் காரணம். அரசுதான் முறையாக எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

அந்த காலத்தில் கதை அவ்வளவு ஈஸியாக எல்லாம் ஓகே ஆகிவிடாது ஒரு படம் எடுத்தால் விநியோகஸ்தர் வரை கதை சொல்ல வேண்டும். இப்போது யாராவது கதை சொல்கிறார்களா?, சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும். சின்னப் படங்களை தவமிருந்து கொண்டு வருகிறார்கள், ஆனால் தியேட்டர் கிடைப்பதில்லை. தயாரிப்பாளர்கள் இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் முடுவெடுக்க வேண்டும்.

இப்போது சினிமா என்றால் என்னவென்றே தெரியாத தயாரிப்பாளர்கள்தான் இன்று நிறைய இருக்கிறார்கள். பெரிய படங்களைவிட சின்னப் படங்கள்தான் நிறைய ஓடுகிறது ஆனால் அதற்கான வாய்ப்பைத் தர வேண்டும். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை. சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்தது. எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.

இசையமைப்பாளர் ஆல்ட்ரின் பேசும்போது, “இது கிராமத்துப் படம், 2 பாடல்கள் உள்ளது. கதையோடு வரும் பாடல்கள் தான் இரண்டுமே, வெஸ்டர்ன் மியூசிக் இல்லாமல் முழுக்க கிராமத்து இசையில் பாடல்களை உருவாக்கியுள்ளோம். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.

நாயகி இலக்கியா பேசும்போது, “எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எனக்குக் கிடைத்த முதல் மேடை. காவிரி பாய்ந்தோடும் மண்ணில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, உங்கள் முன்னால் நாயகியாக நிற்கிறேன். நானெல்லாம் ஹிரோயின் ஆவேனா என நினைத்துள்ளேன்.

நான் சினிமாவுக்கு வந்து, 4 வருடங்கள் ஆகிவிட்டது, சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இப்போது ஹீரோயினாக நடித்திருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி. சினிமாவில் நிறையப் பேர் குறுக்கு வழியில் முன்னேறுகிறார்கள்.  ஆனால் உண்மையாக உழைக்கும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உண்மையான திறமையாளர்களுக்கு சினிமா கலைஞர்கள் அனைவரும் வாய்ப்பு தர வேண்டும்.

எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் மிக மிக எளிமையாக இருப்பார். எனக்கு அருமையாகச் சொல்லித் தந்து நடிக்க வைத்தார். எல்லோரும் குடும்பமாகப் பழகினோம்.  நாகரத்தினம் சார் இந்த காலத்தில் இப்படி ஒரு ஆளா என்று ஆச்சரியப்பட வைத்தவர். அவர் ஊர் மக்கள் அவரை தலைவராக நேசிக்கிறார்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி..” என்றார்.

Our Score