எம்.என்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.நாகரத்தினம் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வள்ளி மலை வேலன்’.
இப்படத்தில் நாயகனாக தயாரிப்பாளர் நாகரத்தினமே நடிக்க, நாயகியாக இலக்கியா நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.மோகன், வசனம் சேத்து மற்றும் ராஜாமணி. ஒளிப்பதிவு – மணிகண்டன், இசை – ஏ.கே.ஆல்ரின், படத் தொகுப்பு – ராஜேந்திர சோழன், சண்டை இயக்கம் – இடி மின்னல் இளங்கோ, நடன இயக்கம் – ரேவதி பாலகுமாரன்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் மோகன் கூறுகையில், “இப்படம் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
நரசிம்மன், முத்தையா இருவரும் நெருங்கிய நண்பர்கள். நரசிம்மன் மண்ணை நேசிப்பவர், முத்தையா அந்த மண்ணால் தனக்கு என்ன வருமானம் கிடைக்கும் என நினைப்பவர். என்னதான் நண்பர்கள் என்றாலும் அரசியல் என்று வரும்போது பகை உருவாகும் அல்லவா?
அப்படித்தான் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நிற்கும் நெருங்கிய நண்பர்களான நரசிம்மனுக்கும், முத்தையாவுக்கும் இடையில் பகை உண்டாகிறது. இதில் எப்போதும் நரசிம்மன்தான் முத்தையாவை ஜெயிக்கிறார்.
தற்போது அதற்கு அடுத்த தலைமுறையாக நரசிம்மனின் மகன் வேலன், முத்தையாவின் மகன் சந்தோஷ், இருவரும் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்,
அதே நேரத்தில் வேலன் வீட்டுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு தொழிலாளியாக வள்ளி வருகிறாள். அப்போது வேலனுக்கும் வள்ளிக்கும் காதல் ஏற்படுகிறது..
இந்த காதலை முறியடிக்க முத்தையாவும் அவரது மகன் சந்தோஷும் திட்டம் தீட்டுகிறார்கள். அதிலிருந்து வேலன் மீண்டு எப்படி வள்ளி மயிலை திருமணம் செய்தான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை..” என்றார்.
இந்தப் படம் வள்ளி மலையை சுற்றி உள்ள வலசை, தேவலாபுரம், ஏகாம்பர நல்லூர், புதூர் மேடு பொன்னை, செங்கட்டானூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.









