full screen background image

“ஷங்கர் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்” – நடிகர் வடிவேலுவின் கோபம்

“ஷங்கர் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்” – நடிகர் வடிவேலுவின் கோபம்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராயநகர் அக்கார்ட் நட்சத்திர விடுதியில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு  பேசும்போது, “இப்போது என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. நான் அனுபவித்துள்ள துன்பத்தை வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது.

‘வைகைப் புயல்’ என என்னைத்தான் எல்லாரும் சொல்வார்கள். ஆனால் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் என் வாழ்வில் நான் ஒரு சூறாவளிப் புயலையே சந்தித்துவிட்டேன்.

என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என் மனதில் பட்டதை பேசுகிறேன். நான் அனுபவித்த துன்பத்தை போல் வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. என்னை அனைவரும் ‘வைகைப்புயல்… வைகைப்புயல்..’ என்று சொல்வார்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலையே சந்தித்துவிட்டேன்.

நோயாளி ஒருவர் டாக்டரை சந்தித்து, ‘எனக்கு மனசு சரியில்லை. தூக்கம் வரவில்லை. ஏதாவது மருத்துவம் பாருங்க..?’ என கேட்டார். அதற்கு மருத்துவர்,’ இன்று சனிக்கிழமை.. நாளை ஞாயிற்றுக்கிழமை.. நாளை மறுநாள் திங்கட்கிழமை வாருங்கள். உனக்கு வைத்தியம் பார்க்கிறேன்’ என்று பதிலளித்தார். அதற்கு அந்த நோயாளி,’ முடியவே முடியாது. எனக்கு இப்போதே மருத்துவம் பாருங்கள். என்னை காப்பாற்றுங்கள்.’ என கேட்டுக்கொண்டார். அதற்கு மருத்துவர்,’ நிச்சயம் நீங்கள் திங்கட்கிழமை வாருங்கள். உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்.’ என பதிலளித்தார். மறுபடியும் நோயாளி, ‘தனக்கு தூக்கம் வரவில்லை.’ என சொல்ல, மருத்துவர், ‘பேசாமல் ஒன்று செய்யுங்கள். பக்கத்தில் ஒரு சர்க்கஸ் நடக்கிறது. அந்த சர்க்கஸில் உள்ள பபூன் பிரமாதமாக காமெடி செய்வார். அதை பார்ப்பதற்காக எனக்கும் என் மனைவிக்கும் என இரண்டு டிக்கெட்களை எடுத்திருக்கிறேன். என்னுடைய மனைவிக்கான டிக்கெட்டை நான் உங்களிடம் தருகிறேன். நீங்களும், நானும் அந்த சர்க்கஸிற்கு சென்று பபூன் செய்யும் காமெடியை பார்ப்போம். அந்தக் காமெடியை பார்த்தால் உனக்கு உன்னுடைய துன்பம் எல்லாம் பறந்துவிடும். தூக்கமும் வரும்.’ என்றார். அதற்கு அந்த நோயாளி டாக்டரிடம்,’ அந்தப் பபூனே நான்தாங்க’ என சொன்னார். கிட்டத்தட்ட நானும் அந்த பபூன் அளவில் தான்  தற்போது இருக்கிறேன்.

கடந்த நான்காண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுளின் ஆசிதான் காரணம்.

கடந்த இரண்டு வருடத்தில் கொரோனா அனைவரின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. மகன் – தாயை பார்க்க முடியவில்லை. மகள் – தந்தையை பார்க்க முடியவில்லை. கணவன் -மனைவியை பார்க்க முடியவில்லை. மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தாலும்கூட, அவர்களுக்கு விசா கூட கிடைக்காது. அடுத்த தெருவில் மட்டுமல்ல.. தன்னுடைய வீட்டில் கணவன் இறந்தாலும் கூட, மனைவி மாடியில் நின்று கொண்டு, ‘அவரை சீக்கிரம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். என் பிள்ளைகளுக்கும் அந்த கொரோனா வந்துவிடும்’ என என கவலையுடன் தெரிவித்த காலகட்டம் அது.

கொரோனா வந்து என்னுடைய பிரச்சனையை சாதாரண பிரச்சினையாக்கி, மற்றவர்களின் பிரச்சனையை பெரிசாகி விட்டது. கொரோனா எல்லோரையும் அச்சுறுத்தி, மிரள வைத்து விட்டது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் தூக்கமே இல்லாமல் செய்துவிட்டது. இது போன்ற நேரத்தில் என்னுடைய காமெடி மக்களுக்கு மருந்தாக பயன்பட்டதை நினைத்து, என்னை நானே ஆறுதல்படுத்திக் கொண்டேன்.

இந்த தருணத்தில் என்னை மீண்டும் நடிக்க வைப்பதற்காக முயற்சி எடுத்த சுபாஷ்கரன் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அவர் மக்கள் மத்தியில் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.

இனி என்னுடைய பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும். அனைவரையும் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்த வேண்டும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே நடிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

நான் மட்டும்தான் பாதிப்படைந்தேன் என எண்ணியிருந்தேன். திரையுலகமும் பாதிக்கப்பட்டிருந்தது. திரையுலகம் மட்டுமல்ல உலகமே  பாதிக்கப்பட்டிருந்தது. இந்த தருணத்தில் எனக்கு ஊக்கமளித்து நடிக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இந்த வாய்ப்பினை எனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறேன்.

மறைந்த நடிகர் விவேக் எனக்கு அருமையான நண்பன். அவரது இறப்பு எனக்குப் பெரும் வேதனையை தந்தது. அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

எனக்கு END -ஏ கிடையாது. இடைப்பட்ட காலத்தில் கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடியாக அமைந்தது. எனக்கு ரெட் கார்ட் போடப்பட்டது என்பதே பொய். வாய்மொழியாக கூறப்பட்ட வார்த்தை அது. என் மூலம் நட்டம் ஏற்பட்டதாக இயக்குநர் ஷங்கர் சொன்னது எல்லாம் பொய். சங்கரின் சாவகாசமே இனி எனக்கு வேண்டாம். சங்கர் இருக்கும் ஏரியா பக்கமே இனி போக மாட்டேன்.

முன்பு நடித்ததைவிட இனி நிறைய பெரிய படங்களில் நடிப்பேன். அதே சமயம் வரலாற்று படத்தில் நடிப்பதற்கு இனிமேல் வாய்ப்பில்லை. பலரிடமிருந்தும் நடிப்பதற்கான அழைப்பு வந்து கொண்டேயிருக்கிறது. லாரன்ஸ், அர்ஜூன் போன்றவர்களும் புதிய படம் பண்ண முடிவாகியுள்ளது. இதுவரையிலும் நான் எந்தவொரு இணையத் தொடரில் நடிக்கவில்லை.

தமிழ்ச் சினிமாவில் எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் சந்திரபாபு, தங்கவேலு,  தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன். சூரி, யோகிபாபுவும் நன்றாகவே நடிக்கின்றனர். 

உதயநிதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். தற்போதைய தி.மு.க. ஆட்சி நன்றாக இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.

இப்போதெல்லாம் சோஷியல்  மீடியாக்களில் மீம்ஸ் மூலம் உடனுக்குடன் கவுண்டர் கொடுக்கிறார்கள். மீம்சில் இருந்து யாரும் தப்ப முடியவில்லை.

‘நாய் சேகர்’ கதாபாத்திரத்தை உருவாக்கிய மூளை என்னுடையதுதான். அந்தப் படத்தில் திரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு சொன்னதாலே இதில் நயன்தாரா நடிக்கிறார் என்பதெல்லாம் உண்மையில்லை. இந்தப் படத்தில் கதாநாயகியே கிடையாது. இந்தப் படத்தில் இரு பாடல்களில் ஒரு பாடலை நானே பாடுகிறேன்.

இப்போதுள்ள மன நிலையில் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்..’ என்று பாடத் தோன்றுகிறது…” என்று கூறினார் வடிவேலு.

Our Score