full screen background image

”கல்வித் துறையில் இருக்கும் பிரச்சினைகள்தான் ‘வாத்தி’ படம்” – இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு

”கல்வித் துறையில் இருக்கும் பிரச்சினைகள்தான் ‘வாத்தி’ படம்” – இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ்  சார்பில்  நாகவம்சி.S – சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’.

சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரிஸ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திட்ட வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா, படத் தொகுப்பு – நவீன் நூலி, ஒளிப்பதிவு – J.யுவராஜ், இசை – G.V.பிரகாஷ் குமார், சண்டைப் பயிற்சி – வெங்கட், தயாரிப்பாளர்கள் – நாகவம்சி.S – சாய் சௌஜன்யா, எழுத்து – இயக்கம் – வெங்கி அட்லூரி, தயாரிப்பு நிறுவனம் ; சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ், வெளியீடு – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் K.அஹ்மத்.

தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

‘வாத்தி’ படம் பற்றி இயக்குநர் வெங்கி அட்லூரி பேசும்போது, “2020-ம் ஆண்டில் கொரோனா தாக்கம் துவங்கிய பிறகு கிடைத்த இடைவெளியில் அடுத்தப் படத்திற்கான சில ஐடியாக்களை யோசிக்க துவங்கினேன்.

அந்த சமயத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாததால் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கினார்கள். ஆனால் கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு பதிலாக முன்பைவிட அதிக அளவில் உயர்த்தினார்கள். பள்ளிப் பேருந்துகளை இயக்காமலேயே பேருந்துக்கான கட்டணங்களை வசூலித்தார்கள்.

1990-களின் இறுதியில்  ஐடி கம்பெனிகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உருவாக ஆரம்பித்த சமயத்திலேயே அரசாங்கம் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்தியது. சில பேர் இதை பயன்படுத்தி கோச்சிங் சென்டர், தனி பயிற்சி வகுப்புகள் என பயனடைய ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளின் கட்டணமும் மிகப் பெரிய அளவில் உயர்ந்தது. 

கல்வி என்பது எப்போதும் மக்களின் உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயமாகவே இருக்கிறது. தங்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை தரவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதனால் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பி நடுத்தர வர்க்கத்து பெற்றோர்கள்கூட, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள்.

அதேசமயம் அரசு பள்ளிகளிலும் கொஞ்சம் தரம் குறைய ஆரம்பித்தது. ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறமையில்லை என்பதால் அல்ல.. அவர்களுக்கான சரியான ஊதியம் தரப்படவில்லை என்பதுதான் முக்கியமான காரணம்.

கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால் தற்போது அதை வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம் அறக்கட்டளை துவங்கி படிப்புக்கு உதவி செய்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். கல்வியை அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பட்டவர்த்தனமான வியாபாரமாக்கிவிட்டார்கள்.

இந்தக் கல்வி வியாபாரத்தைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இதையே முழுப் படமாக சொல்லாமல் அதேசமயம் மக்களுக்கு சொல்ல வேண்டிய சில செய்திகளையும் சேர்த்து ஒரு பொழுதுபோக்கு படமாகவே சொல்லியிருக்கிறேன். ஏனெனில் நான் எப்போதும் பொழுது போக்கு படங்களையே விரும்புகிறேன்.

இந்தப் படத்தில் கல்வி முறை மாற வேண்டுமா? அல்லது பெற்றோர்கள் மாற வேண்டுமா? என்பதைவிட இதற்கு ஒரு நல்ல தீர்வு ஒன்றை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்.

இது துவக்கத்தில் இருந்தே இரு மொழி படமாகவே துவங்கப்பட்டது. கொரோனா முதல் அலை முடிவுக்கு வந்த சமயத்தில் 2021-ல் என்னுடைய ரங்தே’ படம் ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து இரண்டாவது அலையும் துவங்கியது. அந்த சமயத்தில் நான் உருவாக்கி வைத்திருந்த இந்தக் கதைக்கு ஒரு பெரிய ஹீரோவை அணுகும் எண்ணமே என் மனதில் இல்லை.

ஆனால், தயாரிப்பாளர் வம்சி இந்த கதையின் மீது ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்தார். தனுஷை சந்தித்து கதை சொல்லும்படி ஊக்குவித்து அதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தார். இப்படி ஒரு மிகப் பெரிய வாய்ப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

ஆனால் அவரை சந்தித்து கதை சொன்ன பின்னர் அவர் தனக்கு கதை பிடித்து இருப்பதாகவும் “எப்போது என்னுடைய தேதிகள் உங்களுக்கு வேண்டும்?” என்று கேட்டபோது என்னால் அதை நம்பவே முடியவில்லை.  தனுஷும் ஒரு இயக்குனர் என்பதால் எங்களுக்கு அவருடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே எளிதாக இருந்தது.

“நேரம் பொன்னானது.. உங்களுடைய நேரத்தை நானோ என்னுடைய நேரத்தை நீங்களோ வீணடிக்காமல் வேலை பார்ப்போம்” என்று தெளிவாக கூறிவிட்டார் தனுஷ்.

படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட நாட்களில் அவரது காட்சி படமாக்கி முடிக்கப்பட்டாலும் கூட கேரவன் பக்கம் அவர் போகவே இல்லை. எங்களுடனேயே அவர் இருந்து அடுத்த காட்சிக்கான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

தமிழ் எங்களுக்கு புதிது என்பதால் படத்தின் வசனங்களில் மிகுந்த கவனம் செலுத்தினார் தனுஷ். தமிழில் ஏதாவது வசனங்களை மாற்றம் செய்ய வேண்டுமானால் கூட அவற்றை எங்களுக்கு தெலுங்கில் எழுதிக் காட்டி இறுதி செய்து அதன் பிறகு தமிழில் அந்த வசனங்களை பேசினார்.

சமுத்திரக்கனி இந்தப் படத்தில் படத்தில் பள்ளிகள் மற்றும் கோச்சிங் பயிற்சி நிறுவனங்களை நடத்துபவராக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனியிடம் இந்தக் கதையைப் பற்றி கூறியபோது மீண்டும் ஒரு நெகட்டிவான கதாபாத்திரமா என்று ஆரம்பத்தில் தயங்கினார். ஏனென்றால் அவர் எப்போதுமே இப்போதைய கல்வி முறை குறித்து பல படங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்.

இருந்தாலும் இந்த கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. தனுஷுக்கும் அவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஏற்கனவே தந்தை, மகன் கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் இவர்கள் எதிர் எதிராக நடித்துள்ளது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும்.

அரசு பள்ளியில் பணி புரியும் உயிரியல் ஆசிரியராக சம்யுக்தா நடித்துள்ளார். தனது பள்ளிக்கு உதவி செய்ய நினைத்தாலும் தனக்கான சில எல்லைகள் கட்டுப்பாடுகள் காரணமாக எதுவும் செய்ய முடியாத ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

இந்தக் கதை 1997-ல் இருந்து 2000-ம் ஆண்டு வரையுள்ள காலக்கட்டத்தில் நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் படம் துவங்கப்பட்ட சமயத்தில் தமிழ்நாட்டில் தளர்வுகள் அதிகம் வழங்கப்படாததால் பெரும்பாலும் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப் படத்திற்காக 1990-களின் காலகட்டத்தை உணர்த்தும்விதமாக செட் அமைத்து படமாக்கினோம்.

படத்தின் கதைக் கரு, களம் என தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஒன்றுதான் என்றாலும் சில விஷயங்களில் கொஞ்சம் மாறுதல்களை செய்துள்ளோம்.  அந்த வகையில் தெலுங்கு படத்தைவிட தமிழ் படத்தின் நீளம் இரண்டு நிமிடங்கள் கூடுதலாகவே இருக்கும்.

1990-களில் கல்வி முறையில் நடைபெற்ற சில விஷயங்களை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருந்தாலும், இப்போதுவரை அந்த விஷயங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்வேன்” என்றார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

Our Score