நடிகை ஜெயப்பிரதாவின் அக்காள் மகனான சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘உயிரே உயிரே’. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சமீபத்தில் அடையார் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் நாயகன் சித்து, நாயகி ஹன்ஸிகா மோத்வானி, தயாரிப்பாளர் நடிகை ஜெயப்பிரதா, இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர், “தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம். தெலுங்கில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஜெயப்பிரதா மேடம் என்னை அழைத்து ‘இந்தப் படத்தை தமிழில் நாம் கண்டிப்பாக ரீமேக் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது நான் அவரிடம் வைத்த ஒரேயொரு வேண்டுகோள்.. ‘ஹன்ஸிகாதான் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும்’ என்பதுதான்.
படத்தின் நாயகியான ஹன்ஸிகா மோத்வானி, வெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார். இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே அழகு..? அந்த வேலையை இந்தப் படத்தில் கச்சிதமாக செய்திருக்கிறேன்.
இளமையும் காதலும் வழிந்தோடுகிற இப்படத்தில் ‘ஜோடின்னா இப்படியிருக்கணும்டா…’ என்று எல்லா இளசுகளையும் ஏங்க வைப்பதுபோல் சித்துவும், ஹன்சிகாவும் இதில் நடித்திருக்கிறார்கள்.
மும்பை வழியாக சென்னை வரும் விமானம் வழியில் கோவாவில் இறங்குகிறது. அங்குதான் இவர்களுக்குள் இருக்கும் பிரண்ட்ஷிப் காதலாகிறது. அந்த காதலை ஒரு டூயட்டில் சொல்லிவிட்டு போகாமல், இஞ்ச் பை இஞ்ச் ரசிகர்களின் மனதில் மழைத் தூறல் போல இறக்கி வைத்திருக்கிறேன்..
படத்தில் ஒரு முக்கியமான திருப்பு முனை காட்சியொன்று இருக்கிறது. அதை இங்கே சொல்லியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஹன்சிகாவும், சித்துவும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள். அதுவரையிலும் மாடர்ன் டிரஸ்சிலேயே வலம் வரும் ஹன்சிகாவை பட்டுப் புடவை கட்டிக் கொண்டு வரச் சொல்கிறார் சித்து.
அவரது விருப்பத்தை நிறைவேற்றுகிற ஹன்சிகா, பட்டுப் புடவை அணிந்து, தலை நிறைய மல்லிகைப் பூ சகிதம் அந்த மண்டபத்திற்குள் நுழைகிறார். ஹன்ஸிகாவை பார்த்ததும் அவரது அழகில் சொக்கிப் போன சித்து அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். அதே நேரம் அந்த கல்யாண மண்டபத்திலிருக்கிற ஐயாயிரம் கண்களும் ஹன்சிகாவை பார்க்க.. அதற்கப்புறம் சித்துவுக்கு ஒரு உண்மை புரிகிறது. ஹன்சிகாவை தான் மட்டும் சைட் அடிக்கவில்லை. ஒட்டு மொத்த ஆண் வர்க்கமே சைட் அடிக்கிறது என்று.
ஐயோ… தன் காதலிக்கு கண் திருஷ்டி பட்டுவிட்டால் என்னாவது என்று நினைத்து ஓடோடி வரும் சித்து, தன் கை விரலால் ஹன்சிகாவின் கண்ணின் இமையில் இருந்த மையிலிருந்து கொஞ்சத்தை தொட்டு எடுத்து… கன்னத்தில் வைப்பார் என்றுதானே நினைப்பீர்கள்.. அதுதான் இல்லை. அப்படியே மெல்ல இறங்கி… இறங்கி… இறங்கி… வெண்ணையாய் வழிந்து, விளக்கு போல ஜொலிக்கும் ஹன்ஸிகாவின் இடுப்பில் பசக்கென்று ஒட்ட வைக்கிறார்.
திருஷ்டிப் பொட்டை அவர் ஏன் அங்கு வைத்தார் என்று கேட்பவர்களுக்கு… ‘எல்லாருடைய கண்களும் அதற்கு முன்பு அங்குதானேய்யா இருந்தது.. அதனால்தான் அங்கே வைத்தேன்’ என்பார். இப்படியாக விரியும் அந்த ரொமான்ஸ் காட்சி, படம் பார்க்கும் ரசிகர்களை வெகுவாக கவரும்.
கேரளாவின் ஆலப்புழையில் மாலை 4 மணிவரையில் இருக்க்க் கூடிய சூரிய வெளிச்சத்தில் ‘ஓ பிரயா’ என்ற பாடல் காட்சியை படமாக்கினோம். ஹன்ஸிகாவின் அதீத ஒத்துழைப்பு இல்லாமல் அந்தப் பாடல் காட்சி அவ்வளவு சீக்கிரமாக என்னால் படமாக்கியிருக்கவே முடியாது.
காதல் என்பது காதலிப்பவர்களுக்கு மட்டுமன்றி.. அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் கரு..” என்றார் இயக்குநர்.
நடிகை ஜெயப்பிரதா பேசும்போது, “இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமையும். எங்களது தயாரிப்பு நிறுவனத்தில் பல்வேறு மொழிகளில் நாங்கள் படங்களை தயாரித்துள்ளோம்.
இந்தப் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் எனது மகன் சித்துவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறோம். எனக்கு தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பு வேறு எங்கும் கிடைக்காதது. என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் இந்தத் துறைக்கு வந்தால் அது தமிழில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பது என் கனவு. அது இந்தப் படம் மூலமாக நிறைவேறியுள்ளது.
லெஜண்ட்ரி இயக்குநரான சத்யஜித்ரே ஒரு முறை என்னிடம், ‘இப்போது இருக்கும் நடிகைகளில் மிக அழகான பெண் நீதான்’ என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்தப் பாடலாசிரியர் விவேகா, ஹன்ஸிகாவை ‘அழகின் அழகே’ என்று வர்ணித்தது எனக்கே சற்று பொறாமையாகத்தான் இருந்தது…” என்றார்.