திரையுலக வாழ்க்கையில் இருபது ஆண்டுகள் கடந்தாலும், தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா.
அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும்போது அவற்றை அவர் தவறவிட்டதும் இல்லை.
எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதைவிட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர் பூமிகா. அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம்தான் அவர் நடித்து, நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் ‘யு-டர்ன்’ திரைப்படம்.
இந்தப் படம் நட்சத்திர பட்டாளத்தையும் தாண்டி, மிகச் சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பதுதான் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை பூமிகா சாவ்லா பேசும்போது, “இந்த ‘யு டர்ன்’ திரைப்படத்தில் என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்ல. என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
சமந்தா ஒரு பிரமாதமான நடிகை, படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன். மேலும் இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. அதில் இந்த யு டர்ன் திரைப்படமும் ஒன்று.
நான் 1999-ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானேன். இப்போதுவரையிலும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. ஆனால், கதை மற்றும் படக் குழுவும் சரியாக அமைய வேண்டும். அப்போதுதான் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சேரும் என்று நினைத்து நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.
என் பெற்றோர் வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக அணுகுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி எதுவும் என்னை பாதிப்பதில்லை..” என்று தன்னம்பிக்கையோடு முடித்தார் பூமிகா சாவ்லா.