நடிகை ஊர்வசி சமீபத்தில் சிவன் என்பவரை பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
கே.பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’வில் அறிமுகமாகி இன்றுவரையிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் சேர்த்து 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. இவர் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை 2000-மாவது ஆண்டு திருமணம் செய்தார். இருவருக்கும் தேஜாலட்சுமி என்ற பெண் இருக்கிறாள்.
திடீரென்று இருவருக்குமிடையில் பிரச்சினை வலுத்து அது கோர்ட் படியேறியது. 2008-ம் ஆண்டு இருவருக்கும் பரஸ்பர விருப்பத்தில் பேரில் விவாகரத்து கிடைத்தாலும் மகள் தேஜாலட்சுமி யாருடைய கஸ்டடியில் இருப்பது என்பது குறித்து பிரச்சினை இருந்து வந்தது.
இது தொடர்பாக நீண்ட வழக்கு விசாரணையெல்லாம் நடந்து கடைசியாக 2012-ம் ஆண்டு தேஜாலட்சுமி அவருடைய விருப்பப்படி மனோஜ் ஜெயனிடமே வளரலாம் என்று கோர்ட் மூலம் உத்தரவை பெற்றுக் கொண்டார் மனோஜ்.
அதன் பின் மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியே ஒதுங்கிவிட்டார். தேஜாலட்சுமி இப்போதும் தனது அப்பா மனோஜிடம்தான் வளர்கிறாள். ஊர்வசி மட்டும் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலைமையில் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்தை நடத்திவரும் சிவன் என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஊர்வசி தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஊர்வசி அளித்திருக்கும் பேட்டியில், “எங்கள் குடும்ப நண்பரான சிவபிரசாத் எங்க வீட்டு நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் வருவார். 2009-ல் குடும்பத்தோடு நாங்க திருவண்ணாமலை ரமணாஸ்மரமம் சென்றோம். உடன் சிவனும் வந்திருந்தார். அங்கே பூஜைகள் நடந்தன. அப்போது அங்கே வந்த பூசாரி இரண்டு மாலைகளைக் கொண்டு வந்து ஒரு மாலையை என்னுடைய கழுத்திலும் இன்னொரு மாலையை சிவனின் கழுத்திலும் போட்டுவிட்டார். சிவன் அதிர்ச்சியடைந்தார்.
மாலையை கழுத்திலிருந்து கழற்ற முயல.. அருகில் இருந்த என் தாத்தா வேண்டாம் என்று கூறிவிட்டார். பூஜை முடியும்வரை இருவரும் கழுத்தில் மாலையுடன் இருந்தோம். அதற்கு முன்புவரை திருமணத்தைப் பத்தி நான் சிந்திக்கவே இல்லை. அன்றைக்கு இருவர் மனதிலும் இனம் புரியாத சந்தோஷம். அதன் பிறகு நான்கு வருடங்கள் காத்திருந்தோம். பினனர்தான் திருமணத்தைப் பதிவு செய்தோம்.
நூறு சதவிகிதம் இது பேசி முடிவு செய்த திருமணம். திருவண்ணாமலையில் எதேச்சையாக நடந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி தாத்தாதான் என்னைத் திரும்ப கல்யாணம் பண்ணச் சொன்னாரு..
திருமணத்திற்குப் பின் நானும் சிவனும் சேர்ந்து பழநி, காளஹஸ்தி, மூகாம்பிகா, மதுர காளியம்மன் கோவில், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்குப் போய் வந்தோம். ஆனால் எங்களை வாழ்க்கையில் இணைத்து வைத்த திருவண்ணாமலைக்குச் செல்லும் பாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை..” என்று சொல்லியிருக்கிறார்.