A.P.K. பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உறுதி கொள்.’
இந்த படத்தில் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மேகனா நடித்துள்ளார். மற்றும் ‘காளி’ வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் வினிகர், படத் தொகுப்பு – எம்.ஜேபி, பாடல்கள் – மணிஅமுதன், சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எஸ்.ஸ்ரீதர், தயாரிப்பு – பி.அய்யப்பன், சி.பழனி, எழுத்து, இயக்கம் – R.அய்யனார்.
இவர் இயக்குநர் கிருஷ்ணாவிடம் ‘நெடுஞ்சாலை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குநர் அய்யனார் பேசும்போது, “பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது. சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல், பருவ மாற்றம் ஏற்படுகிற காலக்கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சிதானே தவிர… அது காதல் இல்லை.
காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிப் போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள். இதை காதல், மோதல் செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம். விரைவில் படம் வெளியாக உள்ளது…” என்றார்.