திரை வர்த்தகத்தில் புகழ் பெற்ற அபிராமி திரை அரங்கு நிறுவனத்தினர் 2016 ஆண்டை சற்று பலமாகவே துவக்கி உள்ளனர்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ‘தெய்வ தரிசனம்’, ‘சுற்றுலா வாங்க’ ஆகியவற்றையும், பஞ்சாமிர்தம் படத்தையும் தயாரித்தவர் அபிராமி திரையரங்குகளின் உரிமையாளரான திருமதி நல்லமை ராமநாதன். இவர் தற்போது ‘உன்னோடு கா’ என்கிற புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ‘நெடுஞ்சாலை’ ஆரி ஹீரோவாக நடிக்கிறார். பல் மருத்துவரும், ‘டார்லிங்-2’ படத்தின் நாயகியுமான மாயா நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, ஊர்வசி, பால சரவணன், மிஷா கோஷல் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – சக்தி சரவணன், இசை – சத்யா, அபிராமி ராமநாதன் கதை எழுத, புதிய இயக்குநரான ஆர்.கே. திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை அபிராமி மெகா மாலில் பூஜையுடன் துவங்கியது.
திரை உலகில் மிக மதிக்க கூடிய மூத்த மனிதரும், 300 படங்களுக்கு மேல் விநியோகம் செய்த அனுபவஸ்தருமான அபிராமி ராமநாதன் ரஜினிகாந்த் நடித்த ‘ராஜாதி ராஜா’ முதல் சமீபத்தில் வெளி வந்த ‘ரஜினி முருகன்’வரை பல வெற்றி படங்களை வாங்கி வெளியிட்டவர்.
இவருடைய வெற்றிப் பட்டியலில் கமலஹாசன் நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்’, சூர்யா நடித்த ‘அயன்’ ஆகிய படங்களும் அடக்கம். திரை அரங்குகளின் நவீன நிர்மாணத்திலும், வெளி நாட்டில் இருக்கக் கூடிய சிறந்த பொழுது போக்கு அமசங்களையும் கொண்ட அபிராமி வணிக வளாகத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியிலும் அவருடைய உழைப்பு பிரதிபலித்து வருகிறது.
விநியோகத் துறையில் தனக்கென ஒருத் தனிப் பாதையை வகுத்துக் கொண்ட இவர் தேசிய அளவில் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களில் முக்கியமானவர் ஒருவர்.
“உன்னோடு கா’ படத்தின் கதையை அபிராமி ராமநாதன் சார் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய அனுபவமும், நகைச்சுவை திறனும் வெளிப்பட்டு இருக்கிறது. அவரிடத்தில் சேமித்து வைத்திருந்த அனுபவம் இப்போது பொக்கிஷமாய் ரசிகர்களுக்கு கிடைக்கிறது.
இந்த கதை குடும்பத்தாருடன் உற்சாகமாய் பார்த்து மகிழ வேண்டிய படமாகும். ‘உன்னோடு கா’ படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு நடிக்க சரியான கதை களமும், இனிமையான பாடல்கள் தர இசை அமைப்பாளர் சத்யாவுக்கு உகந்த காட்சி அமைப்பும், ஒரு இயக்குநருக்கு காட்சி அமைப்பை விஸ்தாரமாய் யோசிக்க அருமையான கதை அமைப்பும் இருக்கும்.
துடிப்புடன் வித்தியாச சிந்தனையுடன் அறிமுகமாகும் இயக்குநர் ஆர்.கே. தலைமையில் திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் உறுதுணையாக என்னுடன் இருப்பதில் எனக்கு மட்டற்ற பெருமை..” என்று உற்சாகத்துடன் கூறினார் தயாரிப்பாளர் நல்லமை ராமநாதன்.