நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில், புதிய இயக்குநரான ஆர்.கே. இயக்கும் ‘உன்னோடு கா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை, மற்றும் ‘மாயா’ படங்களில் கதாநாயகனாக நடித்த ஆரி இதில் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக ‘டார்லிங்-2’ படத்தின் கதாநாயகி மாயா நடிக்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.
பசுமை பொங்கும், அமைதியான இந்த ஊரில் நடு ரோட்டில் ஹீரோவும், ஹீரோயினும் சண்டையிட்டுக் கொள்வதுபோல காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். முதலில் வாய் சண்டையாக இருந்த இந்த சண்டை போக போக உக்கிரமாகி, அந்த இடத்தையே ஒரு போர்க் களமாக்கி விட்டதாம்.
இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக மறைவான கேமிரா மூலமாக இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது ஏதோ நிஜமாகவே இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று நினைத்து ஊர்க்காரர்களே நடுவில் புகுந்து பஞ்சாயத்துக்கு வந்திருக்கிறார்கள்.
படம் பற்றி பேசிய நடிகர் ஆரி, “இந்த அருமையான ஊரில் படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு வழங்கிய அபிராமி ராமநாதன் சாருக்கு என்னுடைய நன்றி. பூலாங்குறிச்சி என்ற இந்த அழகு கொஞ்சும் ஊர் அவருடைய சொந்த ஊர். இந்த ஊருக்கு அவர் பல நலத் திட்டங்களை செய்திருக்கிறார். இந்த ஊரையே அவர் தத்து எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவருக்கு ஊரார் கொடுக்கும் மரியாதையில் தெரிகிறது.
குடும்பத்தோடு படம் பார்க்க வருவோர் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு அருமையான படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது இந்த ‘உன்னோடு கா’ திரைப்படம்.
பிரபு சாரும், ஊர்வசி அம்மாவும் மிக பிரமாதமாக நடித்து இருக்கிறார்கள். அவர்களது நடிப்பு ரசிகர்களின் விலா நோக சிரிக்க வைக்கும் என்பது நிச்சயம்.
எங்கள் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் பிரபு சார் தன்னுடைய செலவில் மிகப் பெரிய விருந்து வைத்தார். படப்பிடிப்பு நடந்த நாட்கள் அத்தனையும் இனிமையான நாட்கள். ‘உன்னோடு கா’ எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இனிமையான படமாக இருக்கும் என்பது நிச்சயம்..” என்றார் ஆரி.