திகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில் வல்லவரும், அதற்காகவே பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றவருமான கன்னட இயக்குநர் சுனில் குமார் தேசாய், இப்போது ஒரு பன்மொழி திகில் திரைப்படத்துடன் உங்களைச் சந்திக்க வருகிறார்.
தமிழில் ‘உச்சகட்டம்’ என்றும், ‘உத்கர்ஷா’ என மற்ற மூன்று மொழிகளிலும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
‘தி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.தேவராஜ், இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
‘சிங்கம்-3’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இத்திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.
இவருக்கு இணையாக சாய் தன்ஷிகா, ‘தடம்’ தன்யா ஹோப் என இருவரும் நடித்துள்ளனர்.
‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் இத்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், ‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ், மஞ்சுநாத், பிரபாகர் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் – ஆர்.தேவராஜ், கதை மற்றும் இயக்கம் – சுனில் குமார் தேசாய், ஒளிப்பதிவு – பிராஜன், விஷ்ணுவர்தன், பின்னணி இசை – சஞ்ஜோய் சவுத்ரி, படத் தொகுப்பு – பி.எஸ்.கெம்ப ராஜூ, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
ஒரு புத்தாண்டு தினத்தின் முந்தைய 48 மணி நேரத்தில் நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகள்தான் இத்திரைப்படத்தின் கதைக் கரு.
ஒரு உல்லாச விடுதியில் நடக்கின்ற ஒரு கொலை.. அது ஏற்படுத்துகின்ற பெருங்குழப்பங்கள்… இந்தச் சம்பவத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்று கதை விரிகிறது.
கொலை, துரோகம், காதல், காமம், மர்மம், அதிரடி சண்டை காட்சிகள் என முற்றிலுமாக சிலிர்ப்பூட்டும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
அடுத்தடுத்து மாறுகின்ற விறுவிறுப்பான காட்சிகள், பித்துப் பிடித்த கதாபாத்திரங்கள், கொலைக்கு பின் மறைக்கப்படும் நிகழ்வுகளும் அதன் நோக்கங்களும் என கதையும், வசனங்களும் கதையின் போக்கை இறுதி நிமிடம்வரையில் விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன.
சஞ்ஜோய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார். பழம் பெரும் இசையமைப்பாளரான சலீல் சவுத்ரியின் மகனான இவர் 1998-ம் ஆண்டு ‘என்னு சொந்தம் ஜானகி குட்டி’ எனும் மலையாளப் படத்தில் அறிமுகமாகி, ‘சர்ஃபரோஷ்’ எனும் ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.
கன்னட திரையுலகுக்கு பெருமை சேர்த்த முன்னணி இயக்குநர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்டவர் சுனில் குமார் தேசாய். குறிப்பிடத்தக்க வகையில் நான்கு முறை கர்நாடக அரசின் திரைப்பட விருதுகளைப் பெற்ற ஒரு அசலான இயக்குநர்.
இவரது முதல் திரைப்படமான ‘தர்கா’ இவருக்கு கன்னட அரசின் ‘சிறந்த இயக்குனர்’ மற்றும் ‘சிறந்த வசனகர்த்தா’ விருதுகளைப் பெற்றுத் தந்தது. ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் இத்திரைப்படம் தமிழில் ‘புரியாத புதிர்’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இதுவே முதல் திரைப்படமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர்சுளில் முற்றிலும் மாறுபட்ட கதைக் களம் அமைப்பதில் வல்லவர் என்பதும், எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமைப்புக்குள்ளும் சிக்காத ஒரு சிறந்த, திறமையான படைப்பாளி என்பதும் அவரது படைப்புகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவரது மிகச் சிறந்த படைப்புகளாக ‘தர்கா’, ‘உட்கர்ஷா’, ‘சங்கர்ஷா’, ‘நிஷ்கர்ஷா’, ‘பெலடிங்களபாலே’, ‘நம்மூரமண்டர ஹூவே’ மற்றும் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
திகில் கதைகள் படைப்பதில் அப்பழுக்கற்ற திறமை கொண்ட சுனில் குமார் தேசாய், இம்முறையும் ஒரு மிகச் சிறந்த சுவராஸ்யமிக்க திரைப்படத்தை திகில், மர்மம், எதிர்பாரா திருப்பு முனைகள், குறிப்பிடத்தக்க அதிரடி காட்சிகள் என படம் முழுவதும் தனது காட்சி அமைப்பில் முத்திரையைப் பதித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்திரைப்படம், வருகின்ற மார்ச் 22-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை உலகெங்கும் வெளியிட இருக்கிறது.