தற்போது தமிழகத்தையே பதைபதைத்துக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு பிரச்சினை மேலும், மேலும் தீவிரமாகிக் கொண்டே போகிறது.
மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களிலும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள். இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை தமிழகத்தின் கலாச்சாரப் பண்பாட்டு பிரச்சினை என்பதால் இது நமது ஊனோடு கலந்தது என்கிற உணர்வோடு இன்றைய இளைய தலைமுறையினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழக அரசு நேற்று இரவு நடத்தி அமைதிப் பேச்சுவார்த்தை பலனிக்காமல் போனது. மத்திய அரசு இன்னமும் பாராமுகமாகவே இருப்பதால் நாளைய தினம் தமிழகம் முழுவதும் அமைதியான வழியில் பந்த் நடத்துவதாக அனைத்து மாணவர் அமைப்புகளும் அறிவித்துள்ளன.
இதையொட்டி தமிழ்த் திரையுலகத்தினரும் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதன்படி சின்னத்திரை, பெரிய திரைகளின் படப்பிடிப்புகள் எதுவும் நாளை நடத்தப்பட மாட்டாது என்று பெப்ஸி அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலைமையில் தமிழக முதல்வர் நாளை காலை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை இது தொடர்பாக சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.