இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள ‘திரு.மாணிக்கம்’ திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் சாம்ஸ் பேசும்போது, “இம்மாதிரி ஒரு நல்ல படத்தைத் தயாரித்ததற்காக ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இப்படத்திற்குப் பிறகு என் நண்பர் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்கள் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லிஸ்டில் இடம் பிடிப்பார். மிக அழகான சூட்சமத்தைப் பிடித்துவிட்டார். அவர் தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.
சில பேர் மட்டும்தான் நேர்மையான நல்ல விசயத்தைப் பேசப் பொருத்தமாக இருப்பார்கள். சமுத்திரகனி அதற்குப் பொருத்தமானவர். அவர் மிக நன்றாக நடித்துள்ளார். அடுத்ததாக பாரதிராஜா சார். அவர் ஒரு முறை சிவாஜி சாரிடம் தான் நடிக்க வந்ததாக சொன்ன போது, உங்க ஊரில் கண்ணாடியே இல்லையா? எனக் கேட்டதாகச் சொல்வார்கள். அவரே இப்போது இருந்திருந்தால் பாரதிராஜா சார் நடிப்பைப் பார்த்து உச்சி முகர்ந்திருப்பார்.
விஷால் சந்திரசேகர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் எனக்கும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தாருங்கள் நன்றி..” என்றார்.
நடிகை வடிவுக்கரசி பேசும்போது, “இப்படத்தைப் பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. எப்போதும் என்னுடைய கேரக்டர் எல்லாம் போனிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால் இயக்குநர் நந்தா பெரியசாமி, “நான் வீட்டுக்கு வந்து கதை சொல்கிறேன்” என்றார். எப்போது யார் என்னிடம் கதை சொல்ல வந்தாலும் “நான் படத்தில் யாருக்கு அம்மா? யாருக்கு பாட்டி?” என்றுதான் கேட்பேன்.
ஆனால், இவர் வந்து கதை சொன்னதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். ஏன் அந்த ஹீரோ அவ்வளவு நேர்மையாக கஷ்டப்பட வேண்டும் எனக் கேட்டேன். என் கேரக்டர் சின்னதுதான். ஆனால், என் குரு பாராதிராஜா சாருக்கு ஜோடி என்றதும் அவ்வளவு சந்தோசம். சமுத்திரக்கனி சாரைப் பார்த்து எனக்கு அவ்வளவு பொறாமையாக இருக்கும். தெலுங்கில் வில்லனாகக் கலக்குகிறார். இங்கு இப்படி அற்புதமாக நடிக்கிறார்.
இந்தப் படம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. மிக மிக எதார்த்தமான கதை, எல்லோரும் மிக நன்றாக நடித்துள்ளார்கள். நந்தா என்னை மீண்டும் தட்டெல்லாம் கழுவ வைத்தார் அவ்வளவு வேலை வாங்கினார். ஆனால் படத்தை அவ்வளவு அற்புதமாக எடுத்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். என் குருவோடு நடித்தது இன்னும் சந்தோசம். நேர்மையான நேர்மையோடு பார்த்துப் பாராட்டுங்கள் நன்றி…” என்றார்.
கவிஞர் சொற்கோ பேசும்போது, “இயக்குநர் நந்தா பெரியசாமி தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் எனக்கு ஒரு பாட்டு எழுத வாய்ப்புத் தருவார். இந்தப் படத்திலும் தந்துள்ளார். இந்த மேடையில் இருப்பதே பெருமையாக உள்ளது. இந்தப்படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு கண்டிப்பாகத் தேசிய விருது கிடைக்கும். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தேசிய விருது கிடைக்கும். நான் எழுதிய பாடலுக்கும் தேசிய விருது கிடைக்கும். அனைவருக்கும் நன்றி..” என்றார்.
ஒளிப்பதிவாளர் சுகுமார் பேசும்போது, “இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி..” என்றார்.
இயக்குநர் விக்ரமன் பேசும்போது, “பொதுவாக மலையாளத்தில் நல்ல படம் வருகிறது எனச் சொல்வோம், ஆனால் தமிழில் இந்த வருடம் மிகச் சிறந்த படங்கள் பல வந்துள்ளன. ‘வாழை’, ‘லப்பர் பந்து’ படங்களைவிட இந்த ‘திரு.மாணிக்கம்’ படம் மிகச் சிறந்த படமாக இருக்கும். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் நெகடிவ் இல்லை. நமக்கு என்னானது ஏதானது என்றே புரியாமல் வருவோம். அதுதான் இப்படத்தின் வெற்றியாக இருக்கும். தமிழ் சினிமாவின் சிறந்த படமாக இருக்கும். இந்தப் படத்தை நாம் கௌரவப்படுத்த வேண்டும். இயக்குநராக நந்தா பெரியசாமியை ஜெயிக்க வைக்க வேண்டும்..” என்றார்.
இயக்குநர் கணேஷ் பாபு பேசும்போது, “சின்ன வயதில் நம்மைப் பெற்றோர் நேர்மையாக இருக்க வேண்டும் எனச் சொல்லி வளர்த்திருப்பார்கள். ஆனால் நாம் வளரும்போது மற்றவர்களைப் பார்க்கும்போது, நேர்மை தப்போ எனத் தோன்றும் ஆனால் நம்மால் நேர்மைமையை விட்டு வாழ முடியாது. நேர்மையாக இருப்பதுடைய சிறப்பை, நேர்மையாக இருந்து கிடைக்கும் செல்வம், மரியாதை, புகழ், வாழ்க்கை போதும் எனும் அருமையான விசயத்தைச் சொல்லியுள்ளது இந்தப் படம்.
ஏற்கெனவே இந்தியில் ஜெயித்து காட்டிவிட்டார் நந்தா பெரியசாமி. இந்தப் படம் மூலம் இங்கும் ஜெயிப்பார். கட்டபொம்மனைச் சொன்னால் சிவாஜி ஞாபகம் வரும். இனிமேல் நேர்மையானவன் என்று யாராவது சொன்னால் சமுத்திரத்கனி நமக்குள் ஞாபகத்திற்கு வருவார். அந்தளவு அருமையான நடிப்பை இந்தப் படத்தில் வழங்கியுள்ளார். நேர்மையைப் பேசும் இந்த படைப்பு கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும்..” என்றார்.
தயாரிப்பாளர் ராஜா செந்தில் பேசும்போது, “இந்தப் படத்தின் கதைக்கு முன் 20 கதைகளைக் கேட்டிருப்பேன். நந்தா பெரியசாமி சாரிடம் ஒரு ஹீரோயினுக்குத்தான் கதை கேட்டேன். கொஞ்ச நேரத்தில் அழுதுவிட்டேன். உடனே ரவி சாரிடம் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. உடனே ஒரே நாளில் படத்தை செட் செய்து விட்டோம். நேர்மையாக எல்லோரும் வாழ வேண்டும் எனும் விசயம் இப்படத்தில் உள்ளது. இப்படம் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “இது மனதுக்கு மிக நெருக்கமான படம். இயக்குநர் நந்தா பெரியசாமியின் கதைகள் கருவில் உயிர் பெறும்போதே எனக்கு வந்துவிடும். ஒவ்வொரு கட்டத்திலும் கதை வளர வளரச் சொல்வார். நேரம் காலமில்லாமல் அவர் சொல்கிற காட்சியை அத்தனை விவரங்களோடு கேட்க அருமையாக இருக்கும். இந்தக் கதையை உருவாக்க அவர் எடுத்துக்கொண்ட கடின உழைப்பு பிரமிப்பானது.
நேர்மை என்பதுதானே அறம். நேர்மையாகத்தானே வாழ வேண்டும். ஆனால், அதைப் படமாக எடுத்துச் சொல்ல வேண்டிய, இடத்தில், நேர்மையாக இருப்பதையே கொண்டாட வேண்டும் என்கிற நிலையில் நாம் இருப்பது சோகம்.
நல்லவனுக்கு வாழ்க்கையே இல்லை எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில்தான் நேர்மையாக வாழ வேண்டிய அவசியத்தை, மனிதத்தைச் சொல்ல வருகிறது இந்தப் படைப்பு. இதை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்..” என்றார்.
நடிகர் ரவிமரியா பேசும்போது, “நானும் நந்தாவும் நண்பர்கள். எல்லோரும் இங்கு படம் பார்த்துவிட்டுத்தான் பாராட்டிப் பேசுகிறார்கள். என்னைப் படம் பார்க்கக் கூப்பிட்டபோது, “அமீரே படம் பார்த்து அழுதுவிட்டார்” எனச் சொன்னான் நந்தா. “அமீரே அழுது விட்டாரா?” எனக் கேட்டேன். படம் பார்த்த பிறகுதான் புரிந்தது. இப்படைப்பிலிருந்த உண்மையும், நேர்மையும்தான் உங்களை அழ வைத்துள்ளது.
நந்தா படம் பார்க்கும் எல்லோரையும் அழ வைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டான். அவன் எழுத்து அத்தனை அற்புதமானது. இந்தப் படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. சமுத்திரக்கனி அட்வைஸ் பண்ற ஆள் என சொல்வீர்களே? அது இந்தப் படத்தில் இல்லை. ஆனால் படம் பார்க்கும் எல்லோரும் அடுத்தவருக்கு அட்வைஸ் செய்வீர்கள். அந்த நிலைமையை இப்படம் ஏற்படுத்தும்.
பாராதிராஜா சார் எமோசனை கொட்டி நடித்துள்ளார். வடிவுக்கரசி அம்மா வசனமே இல்லாமல் அற்புதமாக நடித்துள்ளார். நேர்மைதான் வெற்றியின் ரகசியம். இப்படத்திற்காக நேர்மையாக உழைத்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இப்படத்தைப் பற்றி தூக்கத்தில் எழுதினால்கூட உங்களால் நேர்மைக்கு மாறாக எழுதிவிட முடியாது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்றார்.
இயக்குநர் சரண் பேசும்போது, “இந்தப் படத்தில் மிக அருமையான கதை இருக்கிறது. இந்தப் படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். நான் இயக்கிய ஒரு படத்தில் வில்லன் கேரக்டருக்கு ‘சமுத்திரக்கனி’ என்றுதான் பெயர் வைத்தேன். காலம் பாருங்கள். இப்போது அவர் பிரபலமான வில்லன் ஆகிவிட்டார். இந்தப் படத்திலும் அவர்தான் வில்லன். படம் பாருங்கள் புரியும்…” என்றார்.
நடிகை அனன்யா பேசும்போது, “மிக மிகச் சந்தோசமாக உள்ளது. இந்தப் படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பு. நந்தா சார் இந்தக் கதையைச் சொன்னபோதே பிடித்திருந்தது. அவர் எனக்கு மட்டுமல்லாமல், நடித்த ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன விசயங்களைக்கூடச் சொல்லித் தந்தார். அது எனக்கு நடிக்க மிக உதவியாக இருந்தது.
சமுத்திரக்கனி சார்தான் என்னைத் தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தினார். அவருடன் நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். இயக்குநர் மிக அழகாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். எல்லோரும் சொல்வது மாதிரி மிக நேர்மையான படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள்…” என்றார்.
நடிகர், இயக்குநர் தம்பி ராமைய்யா பேசும்போது, “நான் பேசுவதைவிட, இங்கு படம் பார்த்தவர்கள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி நந்தாவிடம் கதையைத் தோன்றியவுடன் எடுத்து விடு. இம்மாதிரி கதை கிடைக்காது எனச் சொல்வேன். தம்பி லிங்குசாமிக்கு எப்படி ஆனந்தம் படம் அமைந்ததோ அது போல நந்தா பெரியசாமிக்கு இந்தப் படம் இருக்கும்.
சமுத்திரக்கனி நடந்து கொள்வது எல்லாம் ஆரம்பத்தில் பார்த்தால் நல்லவனாக நடிக்கிறாரோ என நினைப்பேன். ஆனால் ஒருவனால் தொடர்ந்து நடிக்க முடியாதே. அவன் இயல்பிலேயே நல்ல மனதுக்காரன். இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறான். இது அற்புதமான படம். சமுத்திரக்கனியை நாயகனாக வைத்து எடுக்கும் ஒரு நல்ல படைப்புக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக அற்புதமான படைப்பாக மக்களைச் சென்றடையும்…” என்றார்.
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பேசும்போது, “இந்த மேடையில் இந்த தருணத்தில் இருப்பதைப் பெருமையாக உணர்கிறேன். ‘பொம்மக்கா’ நான் எழுதிய பாடல். இன்றைய மனிதர்களுக்கு, இன்றைய வாழ்விற்குத் தேவையான ஒரு விசயத்தை நந்தா பெரியசாமி அழகாக பேசியுள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு கண்டிப்பாக நந்தா பெரியசாமி ஒரு பெரிய இயக்குநராக வருவார். இசையமைப்பாளரும், இயக்குநரும் பேசியபோது, ஒரு கேட்சியான வார்த்தையை வைத்து இந்தப் பாடலை உருவாக்கலாம் என்றனர். ‘பொம்மக்கா’ எனும் அழகான வார்த்தையை வைத்து, இந்தப் பாடலை உருவாக்கினோம். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். தண்ணீர் மற்றும் உணவைப் போல சமூகத்திற்குத் தேவையான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும்..” என்றார்.
தயாரிப்பாளர் ரவிக்குமார் பேசும்போது, “ஆந்திர தேசத்திலிருந்து இங்கு வந்து இப்படம் எடுத்துள்ளேன். என் நண்பன் ராஜா செந்தில்தான் இயக்குநரை அறிமுகப்படுத்தி இப்படத்தைப் பற்றிச் சொன்னார். இக்கதையைக் கேட்டபோது நானும் அழுது விட்டேன். அன்றே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து விட்டோம். படம் பார்த்தவர்கள் படம் பற்றிச் சொன்னார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். டிசம்பர் 27-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி..” என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “சென்னைக்கு வந்த புதிதில், நான் தங்கியிருந்த அறையில், என் நண்பனாக உடனிருந்தவர் நந்தா. வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் என எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அப்போதே என்னை ஆதரித்தவர் நந்தா. ஆனந்தம் படம் எழுதியபோது முழுக்க, முழுக்க என் உடனிருந்தவர் நந்தா.
சிலருக்கு முதல் படத்திலேயே வெற்றி பெரிதாக அமைந்துவிடும். சிலருக்கு லேட்டாகும். ஆனால் தொடர்ந்து போராடுவது இருக்கிறது இல்லையா.. அதுதான் மிகப் பெரிய விசயம். அதை நந்தா சாதித்துள்ளார்.
எல்லோரும் படம் பார்த்து மிகச் சிறப்பாக இருப்பதாகச் சொன்ன போதும் உண்மையாகச் சொல்கிறார்களா? நட்புக்காகச் சொல்கிறார்களா? எனத் தயங்கினேன். ஆனால் எல்லோரும் மனதார பாராட்டினார்கள். உண்மையான நேர்மையான படைப்பு.
சமுத்திரக்கனி அற்புதமான நடிகன். ‘விசாரணை’ படத்தில் அப்படி நடித்திருப்பார். கேமரா வைத்தால் 100 சதவீதம் கதாபாத்திரமாக மாறிவிடுவார். அனன்யா, வடிவுக்கரசி அம்மா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா செந்தில் என் படத்தில் நடிப்பு வாய்ப்பு கேட்டவர். ‘வாரியர்’ படத்தில் சின்ன ரோல் செய்தார். இப்படத்தைத் தயாரித்துள்ளார். நந்தா குடும்பமே இங்கு வந்துள்ளது, இது சரியான தருணம். இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தரும். எல்லோரும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்..” என்றார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது, “இந்த ‘திரு.மாணிக்கம்’ திரைப்படம் ஊர் கூடி இழுத்த தேர். இங்கு உள்ள எல்லோரும் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். இந்தக் கதையை முதன்முதலில் ‘திருப்பதி பிரதர்ஸ்’ சுபாஷ் சந்திரபோஸிடம்தான் சொன்னேன். அவர் முதன்முதலில் பாராட்டிய கதை இதுதான். லிங்குசாமி முதல் எல்லோரும் கேட்டுவிட்டு இது படமாக்கப்பட வேண்டிய கதை என்று ஊக்கம் தந்தார்கள்.
ரவிக்குமார் சார் இந்தக் கதையைக் கேட்டு ஆரம்பித்தார். சமுத்திரக்கனி அண்ணன் கதை கேட்டு “உடனே ஷூட்டிங் போகலாம்” என என்னை நம்பி வந்தார். அவரால்தான் இந்தப் படம் உருவாகியது. அமீர் அண்ணன் “எனக்குப் படம் காட்டுங்கள்” என்றார். அவர் படம் பார்த்துப் பாராட்டியது பெருமை. பாராதிராஜா ஐயாவை நான் இயக்கியது எனக்குப் பெருமை.
சொன்ன கதையைப் படம் பிடித்துத் தந்த சுகுமாருக்கு நன்றி. உயிர் கொடுத்த விஷால் சந்திரசேகருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. ரவிக்குமார் சார், ராஜா செந்தில் இப்படத்தைத் தைரியமாக எடுத்ததற்கு நன்றி. ஒரு நல்ல தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறார் ரவிக்குமார் சார். அவருக்குத் தமிழ் மக்கள் பத்திரமாகக் கரை சேர்க்க வேண்டும்..” என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “இதுவொரு மிக மகிழ்ச்சியான தருணம். தனித்தனியாக எல்லாம் படத்திற்காக உழைப்பதில்லை, எல்லா படத்திற்கும் ஒரே உழைப்புதான். எல்லோரும் வெற்றிக்காகத்தான் உழைக்கிறோம். ‘பருத்தி வீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ போல் நாம் கண்ட வெற்றியைத் தாண்டத்தான் உழைக்கிறோம். ‘அப்பா’வுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து இந்தப் படம் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் நல்ல மனதுக்காரர்கள் இணைந்தார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தானாக அமையும். நந்தா இந்தக் கதையைச் சொன்னபோது, “அய்யா பாரதிராஜாவிடம் போய் சொல். அவர் ஓகே சொன்னால் ஆரம்பித்துவிடலாம்” என்றேன். அவர் கதை கேட்டு உடனே “ஓகே” சொன்னார். அப்புறம் ஒவ்வொருத்தராக வந்தார்கள்.
தயாரிப்பாளர் மிக இனிமையானவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். நல்ல கதையைப் படமாக்குகிறோம் என்பது மட்டும்தான் அவர் மனதிலிருந்தது. இயல்பாக இருப்பதுதான் நேர்மை, எனக்கும் அமீர் அண்ணனுக்குமான உறவும்கூட, அப்படித்தான் ஆரம்பித்தது. சசியுடனும் அப்படித்தான் ஆரம்பித்தது. உண்மைதான் நேர்மை. நேர்மை என்பதுதான் இயல்பு.
முன்பெல்லாம் “கெட்டவனிடம் சேராதே; வம்புல இழுத்து விட்டுவிடுவார்கள்…” என்று வீட்டில் நம்மை எச்சரிப்பார்கள். இப்போது நல்லவர்களைப் பார்த்தும் அப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நந்தா எப்போதும் திடீர், திடீரென அழைப்பார். எப்போது அழைத்தாலும் போவேன். நந்தா என்னைவிட நல்லவன். சிலருக்குக் காலம் வெற்றியைத் தரும் அவருக்கு நல்ல காலம் வந்துவிட்டது.
அனன்யா நான் கண்டுபிடித்த பெண் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அம்மா வடிவுக்கரசி அசத்தியிருக்கிறார். அப்பா பாரதிராஜா என்னைப் பார்த்துப் “பண்பட்ட நடிகனாகிட்டே” என்று பாராட்டினார். அவரோடு பணிபுரிந்த ஐந்து நாட்கள் எனக்குக் கிடைத்த வரம். குழந்தைகள் மிக நன்றாக நடித்துள்ளனர்.
முன்பெல்லாம் சுகுமாரிடம் பதட்டம் தெரியும். ஆனால், இப்போது மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டார் மகிழ்ச்சி. இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக வெல்ல வேண்டும். ‘திரு.மாணிக்கம்’ களத்தில் நிற்கும் வெகுஜனத்தை கவரும். இப்படத்தை வெல்ல வைக்க வேண்டியது உங்கள் கடமை…” என்றார்.
இயக்குநர் அமீர் பேசும்போது, “எனக்கு நந்தாவுக்கு முன்னால் அவரது அண்ணனைத் தெரியும். அவரது ‘ஒரு கல்லூரியின் கதை’ படம் வருவதற்கு முன்னாலே அந்தப் படம் பற்றி நல்ல பேச்சு இருந்தது. அப்போதே என் கம்பெனிக்கு படம் செய்யுங்கள் என 2 லட்சம் தந்தேன்.
‘யோகி’ படம் நான் செய்யும்போது அதை வேண்டாம் என சொன்னது நந்தாதான். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். ‘மாத்தி யோசி’ என்றே டைட்டில் வைத்து படமெடுத்தார். நந்தாவிடம் உழைப்பு, முயற்சி, தேடல் இருந்து கொண்டே இருக்கும். சமுத்திரக்கனியிடம் இதைப் பார்த்துள்ளேன். அதே மாதிரி நந்தாவிடம் பார்த்தேன்.
இந்தப் படம் பார்த்தேன். இரண்டு காட்சிகளில் உண்மையில் கண்கலங்கிவிட்டேன். படம் வெற்றி பெறுகிறது.. இல்லை… என்பது வேறு விசயம். ஆனால், நாம் அடைய நினைத்ததை செய்துவிட்டோமா என்பதுதான் முக்கியம். அதை இந்தப் படம் செய்துள்ளது. ‘வாழை’க்குப் பிறகு எனக்கு மிக நெருக்கமான படைப்பு இத்திரைப்படம்.
இந்தக் காலத்தில் நேர்மையாக வாழ்வது என்பதே கடினமாகிவிட்டது. இது நேர்மையைப் பற்றிப் பேசும் படைப்பு. வறுமையில் நேர்மையாய் வாழ்வது கடினம். அதை சொல்லித் தருகிறது இந்தப் படம்.
கமல் சாரையும், சிவாஜி சாரையும் எதிர்த்து நடித்த ஒரே ஆளுமை வடிவுக்கரசி, இதில் பாராதிராஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அசத்தியுள்ளார். பாராதிராஜா சார் சின்ன பாத்திரம் என்றாலும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். அனன்யாவும் சிறப்பாக நடித்துள்ளார்.
ஒரு நிறைவான படைப்பு. சுகுமார் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு நல்ல படைப்பு, தரமான படைப்பு. நந்தா தனக்கான இடத்தை அடைந்து விட்டார். மனித சமூகத்திற்கான படைப்பு. சமுத்திரகனி இந்த கதாப்பாத்திரத்தை இவனை சிறப்பாக யாருமே செய்துவிட முடியாது. தேர்ந்த நடிகனாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள்..” என்றார்.
ZEE தொலைக்காட்சி நிறுவனம் இந்த ‘திரு.மாணிக்கம்’ திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்.
‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி, இந்த திரு.மாணிக்கம் திரைப்படத்தை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.
ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.
இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்திலும் கவரவிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை வைத்து ஹங்கேரியில் பின்னணி இசையை இரவு பகல் பாராது உயிரோட்டத்துடன் உருவாக்கியுள்ளார்.
பாடலாசிரியர்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் கேள்வி கேட்கும் அற்புதமான இத்திரைப்படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
















