ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் அபி அண்ட் அபி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தேவராட்டம்’.
இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சூரி, சரவண சக்தி, பாலா, வினோதினி வைத்தியநாதன், அகல்யா வெங்கடேசன், போஸ் வெங்கட், சந்துரு, வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சக்தி சரவணன் இசை – நிவாஸ் கே.பிரசன்னா, படத் தொகுப்பு கே.எல்.பிரவீன், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – முருகன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது, எழுத்து, இயக்கம் – முத்தையா, தயாரிப்பாளர் – கே.ஈ.ஞானவேல்ராஜா, தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ கிரீன், அபி அண்ட் அபி.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாயகன் கவுதம் கார்த்திக், நாயகி மஞ்சிமா மோகன், நடிகை வினோதினி வைத்தியநாதன், நடிகர் சந்துரு, இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குநர் முத்தையா மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகரும், எழுத்தாளருமான ஆன வேல.ராமமூர்த்தி பேசும்போது, "இந்தத் தமிழ்த் திரையுலகத்தில் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை ‘கொம்பன்’ படம் மூலமாக ஏற்படுத்தித் தந்த தம்பி முத்தையாவிற்கு நன்றி.
அவர் தொடர்ந்து தன் படங்களில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பதிவு செய்து வருகிறார். இந்த ‘தேவராட்டம்’ படம் அக்கா-தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டது. அக்காவின் பாசம், அம்மாவின் பாசத்திற்கு ஈடானது.
இந்தப் படம் இரு பெருங்குடும்பத்தின் கதை. அந்தப் பெருங் குடும்பத்தின் ஆணி வேராக என் கேரக்டர் இருக்கிறது. என்னுடைய கதைகளுக்கு தமிழில் ஒரு ஹீரோ இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதைத் தீர்க்க வந்தவர் கவுதம் கார்த்தி. அவர் நடிப்பில் எல்லாத் தளங்களிலும் கலக்கி வருகிறார்.
இந்தப் படம் சாதி படம் அல்ல. ஆட்டக் கலைகளை பற்றிய தகவல்களை திரட்டியபோது ‘தேவராட்டம்’ என்ற ஆட்டத்தைப் பற்றி அறிந்தேன். ‘தேவராட்டம்’ என்றால் தேவர்கள் ஆடும் ஆட்டமல்ல. இது எல்லாச் சாதியினரும் ஆடும் ஆட்டம்..." என்றார்.
இசை அமைப்பாளர் நிவாஸ்.கே பிரசன்னா பேசும்போது, "இந்தப் படத்தில் நல்ல பாடல்கள் அமைய முக்கியக் காரணம் முத்தையா சார்தான். அவருக்கு நன்றி. என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி.
முத்தையா சாரிடம் கதை சொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கிறது. இந்தப் படத்தை ஆர்.ஆரில் பார்த்து விட்டுத்தான் இதைச் சொல்கிறேன். இந்தப் படத்திற்கு பின்பு கவுதம் கார்த்தி ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக வலம் வருவார். மஞ்சுமா மோகன் திரையில் அழகாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறேன்..." என்றார்.
நாயகி மஞ்சுமா மோகன் பேசும்போது, "இந்தத் ‘தேவராட்டம்’ திரைப்படம் எனக்கு மிக, மிக முக்கியமான படம். முத்தையா சார் முதலில் ஒரு படத்திற்காக கேட்டார். அப்போது டேட் இல்லாததால் என்னால் நடிக்க முடியவில்லை. அப்போது அவர் ‘மீண்டும் நான் உங்களை தேடி வருவேன்’ என்றார். சொன்னது போலவே இந்தப் படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார். கவுதம் நல்ல எனர்ஜியான நடிகர். படத்தில் என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி..." என்றார்.
படத்தின் நாயகனான கவுதம் கார்த்திக் பேசும்போது, "இந்தப் படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப் படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார்தான். முத்தையா சார்தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது.
படத்தில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு ‘பசப்புக் கள்ளி’ பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.
மஞ்சுமா மோகன் படப்பிடிப்பின்போது எனக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஸார், மதுரை மாநகரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். அதே நேரத்தில் என்னைவிடவும் மஞ்சுமாவைத்தான் மிக அழகாக காட்டி இருக்கிறார்.
நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்..." என்றார்.
படத்தின் விநியோகஸ்தரான சக்தி பிலிம் பாக்டரியின் சக்திவேலன் பேசுகையில், “தெரிஞ்சோ தெரியாமலோ நம் மீது சாதி, மொழி எல்லாம் திணிக்கப்படுது. அதை இந்தத் தேர்தலிலும் பார்த்தோம். நம் ஊரில் காலம் காலமாக சாமி இருக்குங்கிற அரசியலும் இருக்கு. சாமி இல்லேங்கிற அரசியலும் இருக்கு. அது அப்படித்தான் இருக்கும். அதை எதுவும் சொல்லவோ, செய்யவோ முடியாது. அதேபோல்தான், இந்தப் படத்தில் அந்தந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் முத்தையா.." என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, "இயக்குநர் முத்தையாவோடு எனக்கு இது இரண்டாவது படம். இந்தப் படம் ஒரே ஷெட்யூலில் எடுத்த படம். இவ்ளோ பெரிய ஆக்ஷன் படத்தை ஒரே ஷெட்யூலில் எடுத்து முடிப்பதென்பது சாதாரணமான விஷயம் இல்லை.
எங்களது சார்பில் படப்பிடிப்பிற்கு யாருமே செல்லவில்லை. எல்லாவற்றையும் தன் சொந்தப் படம் போல முத்தையாவே பார்த்துக் கொண்டார். கவுதமையும் மஞ்சுமாவையும் கிராமத்து படத்தில் காட்டுவது சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் முத்தையா ‘சரியாக வரும்’ என்றார். படம் பார்த்ததும் எனக்கு திருப்தியாகி விட்டது. இயக்குநர் சொன்னது போலவே செய்திருக்கிறார்.
படத்தில் எல்லாமே உறவு முறைகள் பற்றியது. இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் எனக்கு அக்கா இல்லையே என்ற ஏக்கம் வந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பின் அக்கா இல்லாதவர்கள் ‘நமக்கும் இவர்போல் ஒரு அக்காள் இல்லையே’ என்று நிச்சயமாக ஏங்குவார்கள். அக்கா இருப்பவர்கள் அவர்கள் மீது இன்னும் பாசமாக இருப்பார்கள்.
வினோதினி, போஸ் வெங்கட் கேரக்டர் படத்திற்கு பெரிய பலம். வேல.ராமமூர்த்தி சார் கலக்கி இருக்கிறார். கவுதம் கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார். தேவராட்டம் படத்திற்கு பின் தமிழ்த் திரையுலகத்தில் அவருக்கு பெரிய கேரியர் அமையும்" என்றார்.
இயக்குநர் முத்தையா பேசும்போது, "நான் படிப்பில் மிடில் கிளாஸ்தான். இந்தப் படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமராமேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல்தான்.
ஞானவேல்ராஜா சாரிடம் ‘கொம்பன்’ படம் நேரத்திலேயே கவுதம் கார்த்திக்கை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி.
கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். இந்தத் தேவராட்டம் திரைப்படம் சாதிப் படம் கிடையாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம்தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்துதான் ஆக வேண்டி இருக்கிறது.
வெளியில் வந்தால்தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவுதான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் ‘வெட்டவேண்டும்; கொல்ல வேண்டும்’ என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால்தான் அதைப் படத்தில் வைக்கிறோம். கோவத்தின் வெளிப்பாடுதான் ஹீரோவின் கேரக்டர்.
பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால்தான் கமர்சியல் விசயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன். தயவு செய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள்.
இந்தப் படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் படத்தில் உழைத்த அனைவரும்தான் காரணம். இந்தப் படத்தை முழுதும் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்..." என்றார்.