இந்தப் படத்தை ரங்கா பிலிம் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் ரங்கா தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரங்கா, ரியா, மேகா, இளங்கோ குமணன், சுமா, தாரணி, நிதின் மேஹ்தா, திலீபன், தன்ஷிவி, நித்யநாதன், வத்ஷன் எம்.நடராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து & இயக்கம் – ரங்கா, ஒளிப்பதிவாளர் – சரத்குமார்.எம், படத் தொகுப்பாளர் – இளங்கோவன் சி.எம்., பின்னணி இசை – ஜென் மார்டின், பாடல் இசை – சிவ பத்மயன், பாடல்கள் – ரங்கா, பாடியவர் – நரேஷ் ஐயர், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – மாரிமுத்து, வண்ணம் – சிட்டகாங், தயாரிப்பு – ரங்கா ஃபிலிம் கம்பனி, பத்திரிக்கை தொடர்பு – ஹேமானந்த்.
சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தென் சென்னையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் தேவராஜன் தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் உழைத்து தன் திறமையால் ஒரு ஹோட்டலை தனியாக உருவாக்குகிறார்.
மதுரையில் தான் சந்திக்கும் ஒரு அண்ணன், தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும் தன் குடும்பமாக வளர்த்து, தொழிலையும் சேர்த்து வளர்க்கிறார். அவர்களை தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார்.
அவர் மறைவுக்குப் பிறகு அந்த ஸ்தாபனத்தை நிர்வகிக்கிறார் அவரின் பேரன் நாயகன் ரங்கா. தாத்தாவிற்கு பிறகு அந்த ஹோட்டலைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நாயகனுக்கு வருகிறது.
இன்னோரு பக்கம் வில்லன் பாரில் வைத்து பல தில்லுமுள்ளுகளை செய்கிறார். பண மோசடியில் ஈடுபடும் வில்லனின் கையில் ரங்காவின் ஹோட்டல் போகும் நிலை ஏற்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு குழந்தையை நாயகன் ரோட்டில் கண்டெடுக்கிறார். அந்தக் குழந்தையின் மூலம் நாயகியையும் சந்திக்கிறார். அது யாருடைய குழந்தை? அவரது ஹோட்டல் தொழில் என்ன ஆனது? இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
முதலில் தென் சென்னையில் நடக்கும் கதை என்பதால் நமக்குள் பெரும் ஆசுவாசம் தருகிறது. நடுத்தர வர்க்க குடும்பத்தின் வாழ்வியலுக்குள் ஒரு பரபரவென த்ரில் அனுபவத்தை முதல் படத்திலேயே தந்து அசத்தியிருக்கிறார் நாயகன் ரங்கா. நாயகனாக நடிப்பிலும் இவருக்கு இதுதான் முதல் படம். ஆனால் அந்த தயக்கங்கள் எதுவுமில்லாமல் தனக்குத் தெரிந்தவரையிலும் நடித்துள்ளார்.
மருத்துவராக நாயகி ரியா. பார்வையில் அழகு. நடிப்பிலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நடித்துள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து, இப்போது செக்யூரிட்டி ஏஜன்ஸி நடத்தும் நிதின் மேத்தா தோற்றத்திலேயே பாதி ஜெயித்து விடுகிறார். தன் தேர்ந்த நடிப்பின் மூலம் வில்லன் பாத்திரத்தை வெகு சிறப்பாக செய்துள்ளார். இளங்கோ குமணனுக்கு சின்ன வேடம்தான். ஆனால் கவனிக்க வைக்கிறார். வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன் எல்லோரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் சரத்குமார் காட்சிகளை பட்ஜெட்டைத் தாண்டி சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
சிவ பத்மயன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக வந்துள்ளது. ஒரு முறை கேட்கலாம்தான். படத்திற்கு மிகப் பெரிய பலமாக பின்னணி இசை அமைந்துள்ளது. ‘டாடா: பிளடி பெக்கர் படத்துக்கு இசையமைத்த ஜென் மார்டின் பின்னணி இசை அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகள் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை பார்க்கும் உணர்வைத் தருகிறது.
புது நடிகர்கள், புது கலைஞர்களை வைத்துக் கொண்டு, கதை, திரைக்கதை, அதை நகர்த்தியவிதம் என எல்லாவற்றிலும் அறிமுக இயக்கத்தை தாண்டி ஜெயித்திருக்கிறார் அறிமுக இயக்குநரான ரங்கா.
திரைக்கதையை மட்டும் இன்னும் மெருகேற்றி, சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தால் இந்த தென் சென்னை சிறப்பான படைப்பாக ஈர்த்திருக்கும்.
RATING : 2 / 5