ஸ்டுடியோ கீரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கதாநாயகன் சூர்யா, தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா, நாயகி கீர்த்தி சுரேஷ், நடிகை ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
“மது, புகை எச்சரிக்கை கார்டு தேவையில்லை”
விழாவில் சூர்யா பேசும்போது, “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேற வேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டரும் முக்கியமோ அதை போலவே என்னுடைய வாழ்க்கைக்கு ஓவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியம். அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் முக்கியம்.
இதைப் போல ஒரு முப்பது, முப்பத்தாறு படங்களில் நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும். அதற்கு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் நிச்சயமாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.
ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி. என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார்.
எனக்கு கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இந்த கூட்டணி இணைந்தது.
விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரி சாரிடம் கூறினேன். அதற்கு ‘நீங்கள் அவருடன் நிச்சயமாக படம் பண்ணவேண்டும்’ என்று அவர் கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் ‘அவருடன் படம் பண்ணவேண்டும்’ என்று கூறினார்கள்.
இத்திரைப்படம் 1987-ல் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது.
முதல் சந்திப்பில் இருந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று படத்தின் பெயர் வைக்கும்வரை சிறப்பாக அமைந்தது. உடன் பணிபுரிந்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணியாற்றினார்கள்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைத்துள்ளது. நான் நடித்த திரைப்படம் ஏழு வருடங்களுக்கு பிறகு ஒரு பண்டிகை தினத்தன்று வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் ‘புகை பிடிக்காதீர்’, ‘மது அருந்தாதீர்’ போன்ற ‘Disclaimer card’ இந்தப் படத்தில் இருக்காது. அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதற்காக சென்சார் அதிகாரிகள் எங்களை பெரிதும் பாராட்டினார்கள்…” என்றார் சூர்யா.
“கீர்த்தி சுரேஷ் என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம்..”
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும்போது, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் ‘Special 26’ படத்தின் உரிமையை வாங்கி. அந்தப் படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன்.
நான் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ போன்ற படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அந்த படம்தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா.
சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை ‘பிரதர்’, ‘பிரதர்’ என்று அழுத்தமாகச் சொல்லி அழைப்பார். கீர்த்தி சுரேஷ் எதற்கும் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடிய ஆற்றலை பெற்றவர். அனிருத்தின் இசை இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது…” என்றார்.
“இனிமேல் பிரச்சினையை உருவாக்கிக் கொள்ள மாட்டேன்..”
தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா பேசும்போது, “இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக் கொண்ட சூர்யா , விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி.
இன்றைக்கு இருக்கக் கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதைவிட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன்.
தானா சேர்ந்த கூட்டம் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார்.
ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பை போடாமல் சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் பிரெஷ்ஷான சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்…” என்றார்.