சினிமா சிலருக்கு ரத்த சம்பந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ள எவரோ ஒருவர் திரை உலகில் இருந்து இருப்பதால், அவர்களது திரைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து. பிரபலமானவரின் உறவு என்றால் அவர்களின் வழி தடம் எளிதாக இருக்காது, மாற்றாக கடினமானதாகவே இருக்கும்.
தெலுங்கு திரைப்படவுலகின் மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் தம்பி நடிகர் நாகேந்திர பாபுவின் மகளான நிஹாரிகா கோனிடேலா தற்போது தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’’ படத்தில் நிகாரிகா கோனிடேலா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை 7C’s Entertainment Private Limited நிறுவனம் மற்றும் ‘Amme Entertainment’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஆறுமுக குமார் இயக்குகிறார்.
இந்தப் படம் குறித்து நிஹாரிகா பேசுகையில், ”தமிழ் மொழி மீது என்றுமே பற்றுள்ளவள் நான். எனது குடும்பத்தில் எல்லோருமே நன்றாக தமிழ் பேசுவார்கள். இந்தச் சூழலில் தமிழில் எனது முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிறந்த கதை, சிறந்த கூட்டணி எனக்கு கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது அரிது. அவர்களுடன் பணிபுரிந்து ஒரு அருமையான அனுபவம். இப்படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் அல்ல. எனது இந்த கதாபாத்திரம் இரண்டு பெயர்களில் வரும். ஏன் இரண்டு பெயர்கள் என்பதை படம் பார்க்கும்பொழுது நீங்களே அறிவீர்கள்.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தையும், அதில் எனது கதாபாத்திரத்தையும், எனது நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்..” என்றார் பெரும் எதிர்பார்ப்போடு..!