ஒரு படத்தின் தலைப்பு ரசிகர்களை ஈர்க்கும்விதமாகவும் இருக்க வேண்டும். கதைக்கும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தலைப்பிடப்பட்ட படம்தான் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’.
மிகுந்த பொருட்செலவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தை இயக்குபவர் ராம்பிரகாஷ் ராயப்பா. ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் P.K.ராம்மோகன் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின், மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் பிரபல இயக்குநரான சுசீந்திரனும் நடிக்கவுள்ளார் என்பது சிறப்பு செய்தி.
கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், ”விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்.
ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுது ஒரு திகிலான ‘கிரைம்’ சம்பவம் நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே இந்த கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து விறுவிறுப்போடு பார்க்க வைக்கும் கதை இது..” என்றார்.