நேற்றைக்கு நடைபெற்ற 36 வயதினிலே படத்தின் நன்றி அறிவுப்பு கூட்டத்தில் ‘கேள்வி-பதில்’ சீஸனில் சூர்யா, ஜோதிகாவிடம் கேள்விகள் பறந்து வந்து விழுந்தன.
“இந்தப் படத்தில் நடிக்க ஜோவுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தீர்கள்..?” என்று சூர்யாவிடம் கேட்டதற்கு, “இப்ப இருக்கிற டாப் நடிகைகள் என்ன சம்பளம் வாங்குறாங்களோ.. அதே சம்பளத்தை ஜோவுக்கும் தரணும்னு முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் இன்னும் கொடுக்கல.. சீக்கிரமே கொடுத்துவிடுவேன்…” என்றார்.
“உங்க வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்திருக்கிறீர்களா..?” என்று கேட்டதற்கு, “நாங்க குடியிருக்குற வீட்டின் மொட்டை மாடி எங்களுக்கு சொந்தமில்லை. எனவே அனுமதி கேட்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் காத்திருக்கிறோம்..” என்றார் சூர்யா.
“2-டி தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக இதனைத் தயாரித்ததின் பின்னணியில் வேறேதும் காரணம் இருக்கிறதா..?” என்ற கேள்விக்கு “2-டி என்னுடைய இரண்டு பசங்களின் முதல் எழுத்துக்களே. அதனால் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் படம் அவர்களின் அம்மா நடிக்கும் படமாகவே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் இந்தப் படத்தைத் தயாரித்தோம்..” என்றார்.
“ஜோதிகா தன் ரசிகர்களுக்கு தெரிவித்த நன்றியைக்கூட உங்களின்(சூர்யா) ட்விட்டர் கணக்கில்தான் எழுதியிருந்தார். ஒரு ட்விட்டர் கணக்கை வைத்திருக்கக்கூட ஜோவுக்கு நீங்கள் அனுமதி தரவில்லையா..?” என்று சூர்யாவிடம் கேட்டதற்கு, “அப்படியெல்லாம் இல்லை. அவங்களே இப்போதான் அதைப் பத்திக் கத்துக்கிட்டு வராங்க. எனக்கே முழுதாக ட்விட்டர் பற்றி தெரியாது. அதுனால இதுல எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை…” என்று சிரித்தபடியே சொன்னார் சூர்யா.
“பெண்கள் தன்னுடைய இலட்சியத்தை அடையாமல் போவதற்கு என்ன காரணம்..?” என்று கேட்டபோது, “குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது உங்கள் மனைவியோடு நேரம் ஒதுக்குனீங்கன்னா அவங்களோட எண்ணங்கள் என்னன்னு உங்களுக்கே தெரிய வரும்..” என்றார் சூர்யா.
இந்தக் கேள்விக்கு சூர்யாவிடம் இருந்து மைக்கை வாங்கி ஜோ பேசும்போது, “கல்யாணத்திற்குப் பிறகான மனைவிகளின் வாழ்க்கைக்கு கணவர்கள்தான் காரணம். உங்களின் மேல் பாசமாக இருக்க உங்கள் மனைவி இருக்கிறார்கள். அதேபோல் அவர்களுடைய விருப்பங்கள் என்ன என்பது பற்றி அவர்களிடம் பேசினீங்கன்னா தெரிந்துவிடும். அவர்களுக்கு ஆதரவா இருந்தீங்கன்னா கண்டிப்பாக அவர்களும் சாதிப்பார்கள்..” என்றார்.
இந்த ‘36 வயதினிலே’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் மற்றுமொரு நிகழ்வும் நடந்தேறியது.
இந்தப் படத்தில் பெண்கள் எப்படி முன்னேற வேண்டும் என்று சொன்னார்களோ.. அதுபோல நிஜத்திலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சூர்யாவின் அகரம் நிறுவனம் சார்பாக 25 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான உதவிகளையும் இந்த விழாவில் செய்து கொடுத்தது ’36 வயதினிலே’ டீம்.
அதில் ஒரு பெண்ணிற்கு இரண்டு கால்களுமே கிடையாது. அவருக்கு சென்னையில் பெண்கள் அழகு நிலையம் வைக்க அகரம் பவுண்டேஷன் உதவி செயதுள்ளது. அதுபோல, அனைத்துப் பெண்களையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கான உதவிகளையும் செய்து உதவினார் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா.