சின்னத்திரையில் நாளுக்கு நாள் புதுப்புது தொடர்கள் வெளியாகின்றன. இதில் பல தொடர்கள் ஒன்றைப்போலவே இன்னொன்று இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் இந்த தொடர்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் புதிய கதைக்களத்தில் திகில், மர்மங்கள் நிறைந்த தொடராக உருவாகிறது ‘சுப்ரமணியபுரம்’.
வி. சங்கர்ராமன் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரை ஹரீஷ் ஆதித்யா இயக்குகிறார். இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கும்மாளம்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், மேலும் ‘திருடா திருடி’, ‘மலைக்கோட்டை’ ஆகிய படங்களிலும், சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
அதன் பின் சின்னத்திரை தொடர்களில் இயக்கம் செய்வதில் கவனத்தைத் திருப்பிய இவர் தற்போது இந்த ‘சுப்ரமணியபுரம்’ தொடரின் மூலம் இயக்குநராக மாறியுள்ளார்.
இது சுப்ரமணியபுரம் என்கிற ஊரை பற்றிய கதை. அந்த ஊரில் உள்ள கோயிலில் உள்ள சிலை ஒன்று காணாமல் போகிறது. அதனால் அந்த ஊர் சாபத்திற்கு ஆளாகிறது. அதையடுத்து அந்த ஊரில் நடக்கும் மர்மங்களும், அதை நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.
கதாநாயகன் தேர்வு நடைபெற்று கொண்டிருக்குறது. கதாநாயகியாக ககனா நடிக்கிறார்.
மர்ம கதைகளுக்கு பெயர் போன எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்தான் இந்த தொடருக்கு கதை எழுதியுள்ளார். சரவணக்குமார் ஒளிப்பதிவை கவனிக்க விவேக் சங்கர் வசனம் எழுதுகிறார்.
“இங்கே வழக்கமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்த விரும்பாததால் இந்த தொடரின் படப்பிடிப்பு முழுதும் கர்நாடகாவில் உள்ள வனப் பகுதியில்தான் நடைபெறுகிறது.
கதைக்கேற்ற கிராமமும் கோவிலும் அந்தப் பகுதியிலே கிடைத்தது அதிர்ஷ்டம்…” என்கிறார் இயக்குநர் ஹரீஷ் ஆதித்யா.
வரும் செப்டம்பர் முதல் ஜெயா டிவியில் இந்தத் தொடரை சின்னத்திரையில் கண்டுகளிக்க தயாராகுங்கள்…!











