full screen background image

“ஸ்மைல் மேன் புதுவிதமான கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம்” – சரத்குமார் பேச்சு!

“ஸ்மைல் மேன் புதுவிதமான கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம்” – சரத்குமார் பேச்சு!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் நடிப்பில் 150-வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ஸ்மைல் மேன்'(The Smile Man).

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ‘மெமரீஸ்’ படப் புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் இப்படத்தை தயாரிக்கிறார். தீபா சலீல் இணை தயாரிப்பு செய்கிறார். ‘எட்டுத் தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் ‘மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக் கூட்டணி இப்படத்தை இயக்குகின்றனர். திரைக்கதை வசனத்தை கமலா ஆல்கெமிஸ் எழுதியுள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத் தொகுப்பு செய்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ரவி பாண்டியன் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்கிறார், மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் செய்ய, புரடக்சன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பை சதிஷ் செய்ய, பத்திரிக்கை தொடர்பு பணிகளை சதீஷ் AIM குழுவினர் செய்கின்றனர். விளம்பர டிசைன் பணிகளை ரிஷி செய்கிறார்.  

இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக் குழுவினர் நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் பேசும்போது, “இது தயாரிப்பில் என் முதல் தமிழ்ப் படம், முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்துக்கு ஆதரவு தாருங்கள். நன்றி..” என்றார்.

திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ் பேசும்போது, “எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார்தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 படங்களுக்கும் மேல் இருக்கும் திரை அனுபவம், அறிவு எங்களை திகைக்க செய்தது.

ஷ்யாமுக்கும் எனக்குமான நட்பு தனித்துவமானது. எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம். கதை இருந்தால்தான் ஞாபகங்கள் இருக்கும், ஞாபகங்கள்தான் எந்த ஒரு உயிரின் பரிணாம வளர்ச்சிக்கும் தேவை. இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் தந்து, இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். பார்த்து ஆதரவு தாருங்கள், மிகச் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்..” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன் பேசும்போது, “சரத் சாரின் 150-வது படம் செய்கிறோம் என்பது மிகப் பெருமையாக இருந்தது. அவருடன் ஒவ்வொரு நாளும், வேலை செய்யும்போது, நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது. அவரோட எனர்ஜி லெவல் சூப்பராக இருக்கும். ஷ்யாம் நல்ல நண்பர். ஷ்யாம், பிரவீன் கற்பனையைத் திரையில் கொண்டு வர முழுமையாக உழைத்துள்ளேன். நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ரைட்டர், மியூசிக் டைரக்டர் பற்றிக் கண்டிப்பாகப் படம் வந்த பிறகு பேசுவார்கள். ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். பார்த்து ஆதரவு தாருங்கள்..” என்றார்.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசும்போது, “இது என்னுடைய மூன்றாவது படம். எல்லோருடைய கேரியரிலும், உந்துகோலாக ஒரு படம் வரும், இந்த ‘ஸ்மைல் மேன்’ படம் எனக்கு அப்படிப்பட்ட படமாக அமையும் என நம்புகிறேன். சின்ன வயதில் ‘சூரியன்’ படத்தில், சரத் சாரைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் கார் தூக்கும் சீனுக்கு சில்லறையைச் சிதற விட்டிருக்கிறேன். இப்போது அவரோடு இரண்டு படம் வேலை பார்க்கிறேன்.

ஒரு படத்தில் கம்பீரமான போலீஸ், இந்தப் படத்தில் அல்சைமர் வியாதி உள்ள நிதானமான போலீஸ். இரண்டிலும் அப்படி வித்தியாசம் காட்டியிருக்கிறார். அவருடன் வேலை பார்த்தது ரொம்ப சந்தோசமான விசயம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். எனக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்த ஷ்யாம் மற்றும் பிரவீனுக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி…” என்றார்.

நடிகர் குமார் நடராஜன் பேசும்போது, “இயக்குநர் ஷ்யாமிடம் என்னை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டேன், அந்தகாரம் பார்த்து உங்களைப் பிடித்தது என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் நிறைய உழைத்திருக்கிறோம். படம் மிக நன்றாக உள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.

நடிகை சிஜா ரோஸ் பேசும்போது, “சரத்குமார் சாருடன் அவரது 150-வது படத்தில் நடித்தது மிகப் பெருமையாக உள்ளது. இப்படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இதற்கு முன்னாடி என்னை நிறைய ஹோம்லி கேரக்டராகத்தான் அழைப்பார்கள். இப்படத்தில் சரத்குமார் சார் டீமில் இன்வஸ்டிகேடிவ் செய்யும் பெண்ணாக நடித்துள்ளேன். என்னை இந்த கேரக்டரில் நடிக்க வைத்ததற்கு நன்றி. எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்..” என்றார்.

இயக்குநர் பிரவீன் பேசும்போது, “மெமரீஸ்’ படம்தான் எங்கள் முதல் படம் அதற்கு நெகடிவ், பாஸிடிவ் என கலவையான விமர்சனங்கள் வந்தது. அடுத்து என்ன படம் பண்ணலாம் என விவாதித்தோம். ஆல்கெமிஸ் பிரதருடன் பேசி, ஒரு நல்ல திரில்லர் கதையை உருவாக்கினோம்.

சரத்குமார் சாரிடம் பேசினோம். அவருக்குப் பிடித்திருந்தது. ஐந்து மாதங்கள் கழித்துதான் ஷூட் செய்தோம், ஆனால் கதையில் ஒரு ஃபுல் ஸ்டாப் விடாமல், ஞாபகம் வைத்திருந்தார். நாங்கள் புது டீம் என்றாலும் முழு ஒத்துழைப்பு தந்தார். தொழில் நுட்ப கலைஞர்கள் டீம் அனைவரும் அவர்கள் படமாக நினைத்து, கடினமான உழைப்பைத் தந்தார்கள். இது ஒரு பக்காவான திரில்லர் படம். ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும்..” என்றார்.

இயக்குநர் ஷ்யாம் பேசும்போது, “பிரவீன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். நான் நன்றி மட்டும் சொல்கிறேன். தயாரிப்பாளர் முழு ஒத்துழைப்பு தந்தார். அவருக்கு நன்றி. இந்தக் கதையில் சரத்குமார் சார் வேடம் நிதானமானது, அவர் ஆக்சன் படம் செய்பவர். அதனால் அவரிடம் பேசத் தயங்கினோம். சரத்குமார் சார் கதை கேட்டதும் ஆர்வமாகி, உடனே ஒப்புக்கொண்டார். அவரே டைரக்சன் டீம் மாதிரிதான் வேலை பார்த்தார். அவருடைய 150-வது படத்தை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி.

கமலா ஆல்கெமிஸ் எழுத்தாளர் மட்டுமில்லை. இப்படத்தில் இணை இயக்குநரும்கூட. அவரின் அமேசான் தொடர் முடிந்த பின்னும் வந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டார். விக்ரம் மோகன் மிகப் பெரிய உழைப்பைத் தந்துள்ளார். எல்லோருமே பெரிய உழைப்பைத் தந்துள்ளார். நடிகர்கள் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். பிரவீன் 16 வருட நண்பர், அவருடன் இணைந்துதான் எப்போதும் படம் செய்வேன். இந்தப்படம் க்ரைம் மிஸ்டரி டிராமா, நல்ல அனுபவமாக இருக்கும்..” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் குழுவினர் அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் இப்படத்திற்கு மிகப் பெரிய முதுகெலும்பாக இருந்தார். நன்றி. பிரவீன், ஷ்யாம் மேடையில்கூட ஒன்றாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஒற்றுமைக்கு இதுதான் சான்று. அவர்களுக்கு வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர் விக்ரம் திறமையானவர். எழுத்தாளர் ஆல்கெமிஸ் புத்திசாலி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ராகவன் சார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் நன்றி. குழுவினர் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். நல்ல முயற்சி. சுரேஷும் நானும் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் இதை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர். நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி..” என்றார்.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகும் முன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கைக் கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்.

முழுக்க, முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ‘எட்டுப் தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் ‘மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக் கூட்டணி இப்படத்தை உருவாகியுள்ளது.

இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Our Score