கன்னடத்தில் 2016-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘நானி’ என்ற திரைப்படம்.. தற்போது தமிழில் ‘சிவகாமி’ என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவர உள்ளது.
மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில்… தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக… ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக… ஹாரர் கலந்து கலக்க வருகிறது இந்த ‘சிவகாமி’ திரைப்படம்.
இந்தப் படத்தில் மணீஷ் ஆர்யா நாயகனாகவும், பிரியங்கா ராவ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சுஹாசினி, ஜெய் ஜெகதீஷ், பேபி சுஹாசினி, ரமேஷ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். குரு கிரண் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் சுமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், MD Cinemas நிறுவனத்தின் A.M.சௌத்ரியுடன் இணைந்து வெளியிடவிருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், A.M.சௌத்ரி, இணை தயாரிப்பாளர்கள் தங்கராஜ், முத்துகுமார் உட்பட விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் பேசும்போது, “என் நண்பன் சௌத்ரிதான் முதன் முதலாக இந்தப் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு நம் முதல்வர் அந்நாளை ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக’ அறிவித்துள்ளார்கள். ‘இப்படம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிப் பேசும் படம். அதனால் கண்டிப்பாக இந்தப் படத்தை செய்யுங்கள்’ என்று சொன்னேன். இந்தப் படத்தை நல்ல முறையில் A.M.சௌத்ரி கொண்டு வந்துள்ளார். நீங்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் A.M.சௌத்ரி பேசும்போது, “ஜே.எம்.பஷீர் சாருக்கு நன்றி அவரால்தான் இந்தப் படத்தை நான் வெளியிடுகிறேன். அவர் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளார். எனக்கும் செய்துள்ளார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிப் பேசும் படம் இது. அதனால்தான் இந்தப் படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறேன். அரசாங்கம் பெண் குழந்தை பாதுகாப்பு நாளை அறிவித்துள்ளது. அதற்கு அவர்களுக்கு எனது நன்றிகள்..” என்றார்.
நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் பேசும்போது, “நான் படங்களில் நடிக்கும் முன் ராதாரவி அண்ணனிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது என்னைக் கடுமையாக திட்டிவிட்டார். பொறாமையில் சொல்கிறார் என்று நினைத்து நான் நடிக்க போய்விட்டேன். ஆனால் அவர் சொன்னது நல்லதற்குதான் என்பது எனக்கு பின்புதான் தெரிந்தது.
கஷ்ட காலங்களில் நிறைய நல்ல அறிவுரை தருவார். நான் சினிமாவில் 40 கோடிகளை இழந்திருக்கிறேன். மீடியாவில் என்னைப் பற்றி நிறைய தவறான தகவல்கள் வந்துவிட்டது. பரவாயில்லை. நான் எல்லாவற்றிலும் ஜெயித்து வருவேன்.
இங்கு ரஜினி சாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரம் கட்சி ஆரம்பியுங்கள். என்னையும் அந்தக் கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள். என்னை துணை முதல்வர் ஆக்கிவிடுங்கள். இல்லையென்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள்.
இந்த ‘சிவகாமி’ படம் பார்க்க நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற படக் குழுவுக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.
நடிகர் ராதாரவி பேசும்போது, “இங்கு வந்திருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வாழ்த்துகள். என்னை திட்டுவதும் வாழ்த்துவதும் பத்திரிக்கை நண்பர்கள்தான். அவர்களுக்கு நன்றி.
இந்த “சிவகாமி” படம் மிக அருமையான படம். காட்சிகள் மிக பிரமாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்துள்ள எனது டப்பிங் குடும்ப நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.
இசை வெளியீட்டில் அரசியல் பேசினால் அது வைரலாகி விடுகிறது. இந்த “சிவகாமி” படம் சமூகத்திற்கு தேவையான படம். பெண் பாதுகாப்பு தற்போதைய காலகட்டத்தில் அவசியமான தேவையாக இருக்கிறது. இந்தபடத்தில் சுஹாசினி தவிர அனைவரும் புதுமுகங்கள். ஆனாலும் படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்கள். கதாநாயகி அழகாக இருக்கிறார். சாமி மாதிரியே இருக்கிறார்.
இப்படத்தில் பணிபுரிந்துள்ள இயக்குநர் தேவதானம் ஒரு கிறிஸ்துவர். இத்திரைப்படம் இந்து கடவுள்களைப் பற்றிய படம். ஜே.எம்.பஷீர் எனும் முஸ்லிம் மனிதரின் உதவியில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். மூன்று மதமும் ஒன்று சேரும் படமாக இப்படம் இருக்கிறது. ‘பெண் குழந்தைகளைக் காக்க வேண்டும்’ என இந்தப் படம் சொல்கிறது. எல்லோரும் இந்தப் படத்தை பாருங்கள்.. படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்…” என்றார்.