ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் நடிகைகள் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
‘96’ படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.
இந்தப் படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பேசுகையில், “இந்தியாவில் முதன்முறையாக ஆழ் கடல் சாகசங்களும், ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக இப்படம் தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் இவர்களைத் தவிர மற்ற நடிகர்கள் ,நடிகையர்களின் தேர்வும், தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது…” என்றார்.
இதனிடையே இதே ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொரில்லா ’என்ற காமெடி படம் வரும் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.