full screen background image

பொ.செல்வனில் வரும் பூங்குழலிதான் ‘தளபதி’ படத்தின் ஷோபனா..! -மணிரத்னம் சொன்ன ரகசியம்

பொ.செல்வனில் வரும் பூங்குழலிதான் ‘தளபதி’ படத்தின் ஷோபனா..! -மணிரத்னம் சொன்ன ரகசியம்

‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “இப்போதைய கால சூழலில் சினிமாவில் ஒரே படத்தில் கதையைச் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாமல் 2 பாகங்கள் எடு+க்கலாம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளார்கள்.

பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்க இது வசதியாக இருந்தது. இத்தனை வருடங்களாக இந்தக் கதையை படமாக்காமல் இருந்ததும் சரிதான் என்றும் தோன்றுகிறது. இந்தப் படத்தை 20 வருடங்களுக்கு முன்பு எடுத்து இருந்தால் புரோமோஷனுக்கான தட்டிகளை வைக்க போஸ்ட் கம்பங்களை தேடி கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

இப்படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும்போது ஒவ்வொருவரையும் இந்தப் பாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாக யோசித்துதான் முடிவு செய்தேன். அது சரியாகவும் வந்திருக்கிறது.

திரிஷா நன்றாக தமிழ் பேசினார். அன்று நந்தினி’ கதாப்பாத்திரத்திற்கு இந்தி ரேகாதான் சரியான தேர்வாக இருந்தார். இப்போது ஐஸ்வர்யா ராய்தான் சிறந்தவராக தோன்றினார்.

ரஜினியை நடிக்க வைத்தால் கல்கி மற்றும் ரஜினி இருவரின் ரசிகர்களிடமும் நான் மாட்டிக் கொள்ள நேரிடும். ஆகையால் அவரை வேண்டாம் என்று கூறி விட்டேன்.

பொன்னியின் செல்வனை நானும் படித்திருக்கிறேன். அதிலிருந்து என்னுடைய விளக்கத்தை கூறி காட்சிப்படுத்தி இருக்கிறேன். படம் எடுக்கும்வரை இத்தனை நாட்களாக எல்லோரும் புத்தகத்தைப் படித்துவிட்டு எங்கு இருந்தார்களோ, நானும் அங்கேயேதான் இருந்தேன்.

கல்கியின் இந்த கதைக்கு ஜெயமோகன், குமரவேல் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இப்படத்தின் வசனங்களை முதலில் தூய தமிழில்தான் அமைக்க முடிவு செய்தோம். ஆனால், சரளமாக பேச முடியவில்லை, உணர்வுகளையும் கொண்டு வர முடியவில்லை. எனவே, சுலபமாக பேசும் அளவிற்கு மாற்றிக் கொண்டோம். ஆனால், ஜெயமோகன் எழுதும்போது தூய தமிழில்தான் எழுதிக் கொடுத்தார்.

ஜெயமோகனின் தமிழ் மிக எளிமையாக இருக்கும்.. அந்த வசனத்தைப் பேசியபடியே எளிதாக நடிக்கவும் முடியும். சிறந்த contribution அவர். எழுத்தில் அனைத்தையும் சொல்ல முடியும். ஆனால், சினிமாவில் உடல் மொழி மற்றும் வசனங்களை வைத்துதான் ஒரு கதாபாத்திரத்தை கூற வேண்டும். அதை ஜெயமோகன் சிறப்பாக செய்திருக்கிறார்.

தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி’ என்ற பாடலை இப்படத்திற்கு ஒரு டிரைலராக வைத்துக் கொள்ளலாம். பொன்னியின் செல்வனில்’ வரும் பூங்குழலியின் வேடத்தைதான் அந்த பாடலில் பயன்படுத்தி இருப்பேன். அதைத் தவிர என்னுடைய முந்தைய படங்களில் வேறு எதையும் நான் எடுக்கவில்லை.

மேலும், பல காட்சிகளை புத்தகத்தில் இருப்பது போல காட்சிப்படுத்த முடியாது. அதை புரிய வைக்கவும் முடியாது. ஆகையால், சினிமாவிற்கு ஏற்றபடி காட்சிகளை சுலபமாக அனைவரும் புரிந்து கொள்ளுமாறு அமைத்திருக்கிறேன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த வரலாற்று படங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் ஆபரணங்கள் கிரேக்க நாட்டு முறையை சார்ந்தவை. ஆனால், நான் நிறைய படித்து ஆராய்ச்சி செய்துதான் இப்படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறேன். அக்காலத்தில் சண்டைக்கு செல்லும்போது வீரர்களிடம் ஆபரணங்கள் இருக்காது. உடைகளும் மெட்டல் இல்லாமல் தோல் உடைகள்தான் இருக்கும். அதன்படிதான் இப்படத்திலும் பயன்படுத்தி இருக்கிறேன்.

மணிரத்தினம் இப்படித்தான் படம் எடுப்பார் என்று என்னைப் பற்றி யாருமே கணிக்க முடியாத அளவிற்கு எனது படங்கள் இருக்க வேண்டும். ரசிகர்களின் அந்த மன நிலையில் இருந்து நான் வெளியேற வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

கொரோனா காலத்தில் நான் பயந்த ஒரே விஷயம் நடிகர், நடிகைகள் குண்டாகி விடுவார்களோ என்றுதான். ஏனெனில் அப்போது உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் நடிகர், நடிகைகள் தங்களது வீட்டிலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்து என்னைக் காப்பாற்றி விட்டார்கள்.

டிரையிலர் பார்த்து முழு படத்தையும் கணிக்கக் கூடாது. முழுப் படத்தையும் பார்த்துவிட்டுத்தான் நிறை, குறைகளை கூற வேண்டும். அதை மீறி வரும் எதிர்மறை விமர்சனங்களை கண்டு கொள்ளவே மாட்டேன்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. பின் தயாரிப்புப் பணிகள்தான் மீதம் இருக்கிறது…” என்றார்.  

Our Score