அழகிகளின் தேசமான கேரளாவில் இருந்து தமிழ்ச் சினிமாவுக்கு அடுத்த அழகியாக இறக்குமதியாகியிருப்பவர் அர்த்தனா.
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ படத்தின் மூலம் தமிழ் இவர் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
‘செம’ திரைப்படம் வரும் மே 25-ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை அர்த்தனா பேசுகையில், “ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும்போது ஒரு சக நடிகையாக அல்லாமல், ஒரு ரசிகையாக அந்த தருணத்தை உணர்ந்தேன். நாங்கள் இப்போது நல்ல நண்பர்களாகிவிட்டோம்.
அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். இசையில் அவரது படைப்புகள் என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக பின்னணி இசையில் அவர் ஒரு மாஸ்டர்.
‘செம’ படத்தின் இயக்குநர் வள்ளிகாந்த் என்னிடம் கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழகத்தின் பின்னணியில், ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
மகிழினி அவள் பெயருக்கேற்றார்போல உண்மையானவள். நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குநர் வள்ளிகாந்துக்கு நன்றி…” என்றார்.
அர்த்தனா நடிக்கும் அடுத்த இரண்டு படங்களும்கூட கிராமத்து படங்கள்தான். கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’, விக்ராந்த்தின் ‘வெண்ணிலா கபடி குழு-2’ என்ற இரண்டு கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார் அர்த்தனா.
“இந்த இரண்டு படங்களிலுமே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், தமிழ் கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
என்னுடைய திரை வாழ்வை ‘செம’ திரைப்படம் செம்மையாக தொடங்கி வைத்திருக்கிறது. மே 25-ம் தேதிக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து ‘செம’ படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்….” என்றார் அர்த்தனா.