இயக்குநர் மிஷ்கினின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான Lone Wolf Productions சார்பில் அவரே தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சவரக்கத்தி’.
இந்தப் படத்தில் மிஷ்கின், இயக்குநர் ராம், பூர்ணா, அஸ்வதி, மோகன், ஆதேஷ், கார்த்திக் ஜெமினி, ருத்ரு, கீதா ஆனந்த், சங்கீதா பாலன், ஹாரிஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வி.ஐ.கார்த்திக், இசை – அரோல் கரோலி, பாடல்கள் – தமிழச்சி தங்கப்பாண்டியன், கலை இயக்கம் – சதீஷ், சண்டை இயக்கம் – தினேஷ் குமார், ஒப்பனை – பாலாஜி, ஸ்டில்ஸ் – ஹரிசங்கர், படத் தொகுப்பு – எஸ்.ஜூலியன், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.எஸ்.வெங்கட், வெளியீடு – KRIKES CINE CREATIONS, திரைக்கதை, தயாரிப்பு – மிஷ்கின், இயக்கம் – ஜி.ஆர்.ஆதித்யா.
‘சவரக்கத்தி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதியன்று உலகம் முழவதும் வெளியாகிறது. இதையொட்டி படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவரும் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
படத்திற்கு திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் இந்தப் படம் பற்றி விரிவாகப் பேசினார்.
மிஷ்கின் பேசுகையில், “சவரக்கத்தி’ என்ற வார்த்தையே எனக்கு மிகவும் பிடித்தது. நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு முடி வெட்டுநர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். அவர்ளை பற்றி ஓரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். அதுதான் இந்தப் படம்.
க்ரைம், திரில்லர் போன்று விரைவான கதையம்சம் கொண்ட படம்தான் ‘சவரக்கத்தி’. முதல்முதலாக என்னுடைய தம்பி ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இரண்டு இயக்குநர்கள் நடித்திருந்தாலும் ஆதித்யா மிகவும் சிறப்பாக இயக்கம் செய்துள்ளார்.
இப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஓரு நகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இது ஓரு நாளில் நிகழும் கதையும்கூட..!
படத்தில் ராம் ‘பிச்சை’ என்கிற முடி வெட்டுநர் கேரக்டரில் நடித்துள்ளார். பொய்யை கட்டிப் பிடித்து கொண்டு வாழ்கின்ற ஓரு கதாபாத்திரம். நான் ‘மங்கா’ என்ற கேரக்டரில் கோவத்தைக் கட்டிப் பிடித்து வாழ்கின்ற ரவடி கதாபாத்திரம். இப்படி பொய்யையும், ரவடித்தனத்தையும் கொண்டு வாழும் எங்கள் இருவருக்கும் பாடம் கற்பிக்கும் காது கேட்காத சுமத்ரா என்கிற கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்துள்ளார்.
பூர்ணா காது கேளாத குறைபாட்டுடன் ‘சுமத்ரா’ என்ற கேரக்டரில் ராமின் மனைவியாக, 2 கைக் குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.
நானும், ராமும் சந்தித்து கொள்ளும் காட்சியும், அதற்கு பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில்தான் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இப்படத்தில் ராம் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் நான் ‘மங்கா’ கேரக்டரில் ரவடியாக நடித்துள்ளேன்.
ராம் கையிலும் கத்தி இருக்கும். என் கையிலும் கத்தி இருக்கும். ‘கத்தி எதுக்குதான்..? தொப்புள்கொடி வெட்டத்தான்’ என்பதைத்தான் இந்தப் படத்தில் காட்டியுள்ளோம்.
புதிதாய் பிறக்கும் குழந்தையுடன் நாங்களும் எப்படி புது மனிதர்களாக அந்த நொடியில் பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டதுதான் ‘சவரக்கத்தி’.
படம் நீண்ட காலம் தள்ளி போய்க்கொண்டே இருந்தாலும், தற்பொழுது பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. சென்சாரில் படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதில் எங்களுக்குப் பெருமைதான்…” என்றார்.
படத்தில் முடி வெட்டுநராக நடித்திருக்கும் இயக்குநர் ராம் பேசுகையில், “தங்க மீன்கள்’ படத்திற்கு பிறகு இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை ஆதித்யா அணுகினார்.
இந்தப் படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். எனக்கும் காமெடிக்கும் ரொம்ப தொலைவு இருந்தாலும் இப்படத்தில் ‘முடி வெட்டுநர்’ கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும் என்பது தெரிந்தது. அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
படத்தில் ஹீரோ, வில்லன் என்பதெல்லாம் இல்லை. இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். இப்படத்தில் இசையமைப்பாளர் அருள் கொரலி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது..” என்றார்.
படத்தின் இயக்குநரான G.R. ஆதித்யா பேசும்போது, “நான் இயக்குநராக வேண்டும் என்றுதான் சினிமாவிற்கு வந்தேன். முதலில் பார்த்திபன் ஸார் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன்.
இந்தச் ‘சவரக்கத்தி’ படத்தின் கதை ஒரு முடி வெட்டுநரின் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. முடி வெட்டுநர் கதாப்பாத்திரத்தை வைத்து என்ன பண்ணலாம் என்று பேசியபோது ஓரு சிறிய கதைக் களம் கிடைத்தது. அதிலிருந்துதான் இந்தப் படம் துவங்கியது.
இப்படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை. ஓரு முடி வெட்டுநரின் ஒரு நாள் வாழ்க்கையில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் திரைக்கதை.
அந்த கடைதான் அவனுக்கு உலகம். செவ்வாய்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் அன்றைக்கு மட்டும் சரக்கு அடித்து விட்டு நன்றாக தூங்குவான். இதுதான் அவனது கதாபாத்திரம். ஓரு சமயம் மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டு விடுகிறான். பின்பு எப்படி அவன் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டான் என்பதுதான் மீதி கதை.
படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களில் யார், யார் நடிக்க வேண்டும் என்பதை முன்பேயே முடிவு பண்ணிவிட்டேன். படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்காக பல நடிகைகளிடம் கதையைக் கூறினேன். படத்தின் கதைப்படி மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டியிருந்ததால், யாருமே முன் வரவில்லை. கடைசியாக பூர்ணா மட்டும் இது ஒரு நடிகைக்கு மிகவும் சவாலான கதாப்பாத்திரம் என்பதை உணர்ந்து படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்திலும் மிக சிறப்பாக நடித்துள்ளார்.
மேலும், படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். ராம், மிஷ்கினின் நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம். படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ராம் அவர்களுக்கு காலில் அடிப்பட்டது. இருந்தாலும் அதையும் பொறுத்துக் கொண்டு மிக சிறப்பாக நடித்து முடித்தார்.
இந்தப் படம் 48 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் சென்னையில்தான் படமாக்கப்பட்டது. சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘சவரக்கத்தி’ ஒரு புதுமையான அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை…” என்றார் படத்தின் இயக்குநரான G.R.ஆதித்யா.