குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப் படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலிதான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப் படங்கள்தான் வந்திருக்கின்றன.
இந்த முறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ள படம்தான் புதுமுக இயக்குநரான மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கு சக்கரம்’.
இந்த சங்கு சக்கரம்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப் போலவே இந்தப் படம் இருப்பதையும் உணர முடிகிறது.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற நகைச்சுவையும் கிண்டல், கேலியும் நிறைந்த படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் சினிமா வாலா பிச்சர்ஸ் நிறுவனத்தின் கே.சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த ‘சங்கு சக்கரம்’ படத்தை தயாரித்துள்ளார்கள்.
திலீப் சுப்பராயன், கீதா, ஜெர்மி ரோஸ் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஷபீர் இசையமைத்திருக்கிறார். திலீப் சுப்பராயன் இந்த படத்துக்காகவே ஒரு வருடமாக முடி வளர்த்து நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பத்துக்கும் மேற்பட்ட குட்டீஸ்கள் நடித்துள்ளனர், பத்து பேரும் பத்து ரகம். இவர்கள் எல்லோரையும் சமாளித்து சமர்த்தாக வேலை வாங்கி அவர்களது சுட்டித்தனங்களை திரையில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் மாரிசன்.
ஃபேண்டஸி ஹாரர் காமெடியாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் குட்டீஸ்கள் செய்யும் சில வீர தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் காட்டியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் நாயகி கீதா படத்தில் பேயாக நடித்துள்ளார். இதற்காக அவர் படப்பிடிப்பில் பாதி நாட்கள் 20 நாட்களுக்கும் மேல் தரையில் இருந்ததைவிட கயிறு கட்டி அந்தரத்தில் தொங்கிய நேரம்தான் அதிகமாம். ஆனாலும் அந்த கேரக்டரின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வலியை பொறுத்துக் கொண்டு நடித்துள்ளார். அதேபோல படத்தில் குட்டிப் பேயாக நடித்துள்ள பெண்ணும் தினசரி நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.
“சஸ்பென்ஸ், திரில், சுவாரஸ்யம், கிண்டல் எல்லாம் கலந்த ஒரு சுழலில், அதாவது தீபாவளிக்கு ‘சங்கு சக்கரம்’ விடுகிற மாதிரியான சந்தோஷத்தில். படம் பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள். அதனால்தான் படத்துக்கு ‘சங்கு சக்கரம்’ என்று தலைப்பு வைத்துள்ளோம்…” என்கிறார் இயக்குனர் மாரிசன்.
இந்தப் படத்தின் இயக்குநராந ரஞ்சித், மறைந்த தனது தந்தை மாரியின் நினைவாக தனது பெயரை ‘மாரிசன்’ என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.