‘ராஜா ராணி’, ‘தெறி’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களை இயக்கிய அட்லீ ஒரு தயாரிப்பாளராக திகிலும், நகைச்சுவையும் கலந்த ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பிற்கு பஞ்சமே இருக்காது.
அட்லீயின் சொந்த பட நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம், பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் கதாநாயகன் ஜீவா. இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா.
இவர்களுடன் ராதாரவி, ராதிகா சரத்குமார், சூரி, கோவை சரளா, தம்பி ராமையா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரனாகிய ஐக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது இவருக்கு முதல் படமாகும்.
பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான விஜய்சிங் படம் பற்றி கூறும்போது, “சங்கிலி புங்கிலி கதவ தொற’ கோடைகால விடுமுறைக்கு ஏற்ற படமாக இருக்கும். நகைச்சுவை கலந்த திகில் படத்திற்கு கிடைக்கும் மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைக்கும்.
திறமையான நட்சத்திரங்கள், திறமையான இளம் இயக்குநர், வெற்றி இயக்குனர் அட்லீயின் மேற்பார்வை என்று ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ ஒரு உத்தரவாதமுள்ள வெற்றி படமாக என் கண்ணுக்கு தெரிகிறது…” என்றார்.
தயாரிப்பாளர் அட்லீ கூறுகையில், “சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படம் வருகின்ற 19-ம் தேதி வெளியாகிறது என்பதை மிக பெருமையுடன் அறிவிக்கிறேன். இந்த படத்தின் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மிகவும் உற்சாகமூட்டுகிறது.
இதுவரை இந்த படத்தை பார்த்தவர்கள் கூறிய பாராட்டு உரைகள் அனைத்தும் இளம் இயக்குநர் ஐக் அவர்களையே சாரும். ஜீவா தனக்கே உரிய பாணியில் மிக சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
என்னுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வெற்றியை தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது…” என்று கூறினார் அட்லீ.