அதிசயித்திலும் அதிசயம்.. முதல்முறையாக இசையமைக்கும் பணியில் இறங்கியியுள்ள நடிகர் சிம்பு படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம்.
நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக உருவானவர். அப்போதே பாடல் பாடிய பெருமைக்குரியவர். பின்பு நடிகராகி, பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போதுதான் முதல் முறையாக ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார்.
பிரபல ‘சித்தப்பா’ நடிகரான விடிவி கணேஷ் தனது விடிவி புரொடெக்சன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். சேதுராமன் படத்தை இயக்குகிறார்.
சந்தானத்தை காமெடியனாக அறிமுகப்படுத்தியதே சிம்புதான் என்பதால் சிம்புவாக விரும்பி இதில் இசையமைத்தாரா அல்லது சந்தானமே சிம்புவை இழுத்துவிட்டாரா என்பதெல்லாம் ஆராய வேண்டிய விஷயம்தான்.
ஆனால் ஹீரோவாக நடிக்கும் தன்னுடைய சொந்தப் படத்திற்கே சரியான நேரத்திற்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் சிம்பு, இந்த இசையமைப்பாளர் பணியை மட்டும் கச்சிதமாக முடித்துக் கொடுத்துவிட்டாராம்.
படத்தில் இடம் பெறும் 5 பாடல்களுக்குமான இசையையும் பதிவு செய்து கொடுத்துவிட்டார் சிம்பு என்பதுதான் இன்றைய அதிர்ச்சி தகவல்.
இந்தப் படத்தில் மிக முக்கியமான பாடலாக ‘வா முனிம்மா வா’ என்ற பேட்டை ராப் பாடலை சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தரும், உஷா ராஜேந்தரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
படத்தில் ஹீரோ சந்தானம் அறிமுகமாகும் துவக்கப் பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாடியிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘காதல் தேவதை’ பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
மேலும் பிரபல பாடகரான உன்னி கிருஷ்ணனின் மகனான வாசுதேவ் கிருஷ்ணனையும் சிம்பு இந்தப் படத்தில் பாடகராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் வசனக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு வரும் மார்ச் 15-ம் தேதி முதல் நடத்தப்படவுள்ளன. சென்னை, ஊட்டி, பெங்களூரில் 3 பாடல்கள் படமாக்கப்படவுள்ளன. மேலும் 2 பாடல்கள் அமெரிக்காவில் படமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.