கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களில் பொதுவாகவே சண்டை காட்சிகளில் ஒரு ஸ்பெஷலாட்டி இருக்கும். படத்துக்கு படம் புதுமையான முறையில் சண்டை காட்சிகள் அமைக்க வேண்டும் என்று நினைப்பார் விஜயகாந்த். அவரது ரசிகர்களுக்கும் அதுதான் பிடிக்கும். அதிரடி ஆக்சன் நாயகனாக வலம் வந்த விஜயகாந்த், தனது மகனையும் அப்படியேதான் வளர்த்தெடுக்க விரும்பியிருக்கிறார்.
தற்போது விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ‘சகாப்தம்’ படத்தில் அறிமுகமாவது தெரிந்ததே.. புதுமுகம் என்றாலும் புதுமுகம் என்பதே தெரியாத அளவுக்கு படம் இருக்க வேண்டும் என்று மிக கவனத்துடன் படத்தைத் தயாரித்து வருகிறார்களாம். படத்தில் சண்டை காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதற்காக ஹீரோ சண்முகப்பாண்டியனுக்கு முறைப்படியான சண்டை பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தயார் செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டில் விஜயகாந்தின் மேற்பார்வையில் நடந்த ஷூட்டிங்கில் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன. தாய்லாந்தின் பட்டயா பீச்சில், அந்நாட்டின் பாரம்பரியம்மிக்க சாமுராய் வகை வாள் சண்டையில் அந்த நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களோடு மோதியிருக்கிறார் ஹீரோ. மேலும் ஆப்ரிக்கன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சவூதி அரேபியா, ஜப்பான் போன்ற நாடுகளை சேர்ந்த மார்ஷல் ஆர்ட்ஸ், லெக் ஜெம்ப், பாக்சிங், ரிவர்ஸ் ஆக்ஷன், பாடி பிளாக்கிங் போன்ற கலைகளின் தலைசிறந்த கலைஞர்களுடன் ஹீரோ சண்முகப்பாண்டியன் மோதும் சண்டை காட்சியை 6 நாட்கள் படம் பிடித்திருக்கிறார்கள். இந்தச் சண்டை காட்சியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 20 ஸ்டண்ட் வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சாவின் பயிற்சியில் உருவான இந்த சண்டை காட்சிக்கு மட்டும் 60 லட்சம் ரூபாய் செலவானதாம். இதில் நடிகர் ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றுள்ளார்கள்.
நியூஸா கொடுத்துக்கிட்டே இருக்கீங்களே கேப்டன்.. டிரெயிலரை எப்போ காட்டுவீங்க..?