அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் V.S. சசிகலா பழனிவேல் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘சாயா’.
இந்தப் படத்தில் படத்தில் புதுமுகம் சந்தோஷ் கண்ணா ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் நடிகை சோனியா அகர்வால் ஒரு அதிரடி நாயகியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். மற்றும் ஆர்.சுந்தர்ராஜன், கொட்டாச்சி, Y.G.மகேந்திரன், பாய்ஸ் ராஜன், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, மனோகர், பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை – ஜான் பீட்டர், சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட், நடனம் – ரமேஷ் கமல், மக்கள் தொடர்பு – ஏ.ஜான், தயாரிப்பு மேற்பார்வை – மதுபாலன், தயாரிப்பு நிர்வாகம் – ஆத்தூர் ஆறுமுகம், தயாரிப்பு – வி.எஸ்.சசிகலா பழனிவேல், கதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை – V.S. பழனிவேல்.
சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3-ம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது.
இது பற்றி பேசிய இயக்குநர் வி.எஸ்.பழனிவேல், “இந்த ‘சாயா’ படம் தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாக பேசுவதோடு, இன்றைய கல்வி நிலையங்களின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டும் படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாடம் சொல்லிக் கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது ‘சாயா’.
மக்களுக்கு அடிப்படை உரிமையான கல்வி இன்று மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் அதற்குப் பலியாகிறாள். அதன் பின் நடப்பதெல்லாம் இறந்து போன அந்த ஆத்மாவின் விளையாட்டு.
பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான்இருக்கும். ஆனால் முதன்முறையாக அந்த பயமுறுத்தல்களே இல்லாமல் பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது இந்த ‘சாயா’ திரைப்படம்.
‘பைரவா’ படத்துடன் வந்துவிடலாம் என்றுதான் முடிவெடுத்துக் களமிறங்கினோம். அப்போது தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போது வழி பிறக்கும் என்று தெரியவில்லை.
மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டு மொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது நான் எப்படி படத்தை வெளியிடுவேன்..? அதனால் மீண்டும் தள்ளி வைத்தேன்.
இப்போதும் ‘போகன்’ வருகிறது என்கிறார்கள். வரட்டும். ஆனால் இது சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துள்ள படம். மக்களுக்கான படம். அதனால் அதனுடன் போட்டியிடும்விதமாக பிப்ரவரி 3-ம் தேதி தைரியமாக வெளியிடுகிறேன்…” என்கிறார் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல்.
படம் வெற்றி பெற பெரிதும் வாழ்த்துகிறோம்.









