full screen background image

ரெட்ரோ – சினிமா விமர்சனம்

ரெட்ரோ – சினிமா விமர்சனம்

லவ் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை 2-டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.

இந்த ‘ரெட்ரோ’  திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், விது, சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், கஜராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கியிருக்கிறார்.

தூத்துக்குடியில் தாயில்லாமல் வளர்ந்து இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையையும் இழந்த பாரி, அதே ஊரைச் சேர்ந்த ஜோஜூ ஜார்ஜ் சுவாசிகா தம்பதியினரின் வளர்ப்பு மகனாகிறார்.

வளர்ப்பு மகன் என்றாலும் பாரி மீது ஜோஜூ ஜார்ஜுக்கு எந்த ஒரு பிடிப்பும் இல்லை. பாசமும் இல்லை. ஆனால் அம்மா சுவாசிகாவோ மகனை பெரும்பாடுபட்டு வளர்க்கிறார்.

என்ன காரணமோ பாரி சின்ன வயதிலிருந்து சிரிக்கவே தெரியாதவனாக இருக்கிறான். எவ்வளவோ முயற்சி செய்தும் அவனுக்கு கொஞ்சமும் சிரிப்பு வரவில்லை. ஒரு இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு படித்து வளர்கிறான்.

இப்பொழுது வளர்ந்து வாலிபனாகி இருக்கும் பாரி அவனுடைய அப்பாவின் அடியாள் வேலையையும், கடத்தல் வேலையையும் திறம்பட செய்கிறான்.

ஒரு கட்டத்தில் இந்தியாவிலிருந்து கடத்தப்படும் தங்க மீன் என்ற கடத்தல் பொருளை சொன்ன இடத்திற்கு அனுப்பாமல் மறைத்து வைக்கிறான் பாரி.

இதனால் கோபம் அடையும் ஜோஜூ ஜார்ஜ், பாரியின் திருமணத்தன்று பெரும் ரகளை செய்கிறார். இந்த ரகளை பெரும் சண்டையாகிவிடுகிறது.

இயல்பாகவே முரடனான பாரி தனது தந்தை என்றும் பார்க்காமல் ஜோஜூ ஜார்ஜின் கையை துண்டித்துவிட்டு, இன்னும் இருவரை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறார்.

திருமணம் நின்றுவிட்டதால் அவருடைய காதலியான மிருக வைத்தியர் பூஜா ஹெக்டே தூத்துக்குடியில் இருந்தே காணாமல் போகிறார். பாரியை சிறையிலும் அடித்துக் கொடுமைப்படுத்தி “அந்தக் கடத்தல் பொருட்கள் எங்கே இருக்கின்றன?..” என்று விசாரிக்கிறார்கள். ஆனால் பாரி எதையும் சொல்ல மறுக்கிறான்.

தன் காதலி பூஜா ஹெக்டே எங்கே இருக்கிறாள் என்பதை சிறையில் இருந்தபடியே தேடுகிறான் பாரி. கடைசியாக பூஜா அந்தமானில் இருப்பதாக செய்தி வந்தவுடன் சிறை அதிகாரிகள் உதவியோடு சிறையிலிருந்து தப்பிக்கிறான் பாரி.

காதலியை சந்திப்பதற்காக சிரிப்பு டாக்டர் ஜெயராமை மிரட்டி அழைத்துக் கொண்டு அந்தமானுக்குள் கால் வைக்கிறான் பாரி. அதே சமயம் கடத்தப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும் என்கின்ற வெறியுடன் ஜோஜூ ஜார்ஜும் பாரியை விரட்டிக் கொண்டே செல்கிறார்.

அங்கே அந்த அந்தமான் மண்ணில் ஒரு பெரும் கூட்டமே ஒரு இரட்சகனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. மைக்கேல் என்பவனும் அவனது தந்தையான நாசரும் அந்தப் பகுதி மலைவாழ் மக்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஆதிவாசிகளின் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அவர்களை நாசர் கொலை செய்து விடுவதும், பெண் குழந்தை பிறந்தால் மட்டுமே தப்பித்து வளர்ப்பதுமாக இருக்க.. அந்த ஆதிவாசி மக்கள் அடிமைத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அந்தமானில் பாரிக்கும், அந்த அடிமை கூட்டத்துக்கு இடையிலான ஒரு தொடர்பு திடீரென்று தெரிய வருகிறது.

இதன் பிறகு என்ன நடக்கிறது?.. பாரியை ஜோஜூ ஜார்ஜ் கண்டு பிடித்தாரா?.. இல்லையா?.. அந்த அடிமை வாழ் மக்களை பாரி விடுவித்தாரா/.. இல்லையா?… பாரியும் அவனது காதலியும் ஒன்று சேர்ந்தார்களா?… இல்லையா?… என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

“எதன் பொருட்டு சூர்யா இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்?..” என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்தப் படம் பல்வேறு தளங்களை தொட்டு சென்றிருப்பதோடு, இதுவரையிலான பல கமர்சியல் திரைப்படங்களின் பாதிப்பு இருந்தாலும்.. படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும்… நம்ப முடியாததாக இருக்கிறது என்பதுதான் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகனின் நிலைமை.

சூர்யா மிகவும் கஷ்டப்பட்டுத்தான் நடித்திருக்கிறார். சிக்ஸ் பேக் எல்லாம் வைத்திருக்கிறார். முரட்டுத்தனமான ஒரு ரவுடி தலைவன் கதாபாத்திரத்தை செய்திருந்தாலும் அதில் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லை என்பதால் நம்மாளும் அந்தக் கேரக்டரை முழுமையாக ரசிக்க முடியவில்லை

அதே சமயம் இடைவெளிக்கு பின்பு அவர் தான் யார் என்பதை உணர்ந்த பின்பு அடிமைத்தனத்தை உடைத்தெறிய நடக்கும் போராட்டத்தில் அவருடைய பங்களிப்பு வன்முறையாகவே இருப்பதால் ஒரு கமர்சியல் ஹீரோ என்ன செய்வாரோ அதைத்தான் இவரும் செய்திருக்கிறார் என்ற நமக்கு நாமே சமரசம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

சண்டைக் காட்சிகளில் பொளந்து கட்டியிருக்கிறார் சூர்யா. தொழில் நுட்பத்தின் உதவியோடு மிகப் பிரமாண்டமான முறையில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதால் சூர்யாவின் பாடி கட்டும்.. வெயிட்டும், ஸ்டைலும்.. அவருடைய இளம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கலாம்.

பூஜா உடனான கண்மூடித்தனமான காதலை மறக்க முடியாமல் தவிப்பதும், காதலுக்காக தவித்தபடியே அந்தமானில் பூஜாவின் பின்னாடியே சுற்றும் போதும் சூர்யாவைப் பார்க்க பாவமாகத்தான் உள்ளது. ஆனால், இவருடைய காதல் எப்படி துவங்கியது என்பது நமக்கு சொல்லப்படாமல் காதல் மட்டுமே பிரதானமாக இருப்பதால் நமக்கும் அந்த காதல் பீலிங் வரவில்லை.

சூர்யாவின் டிரேட் மார்க் சிரிப்பும், ரகளையும் இந்தப் படத்தில் நிறையவே மிஸ் ஆகி இருப்பதால் அவருடைய வழமையான ரசிகர்கள் என்ன நினைப்பார்களோ தெரியவில்லை.

ஆனாலும் சூர்யா சிரிக்க ஆரம்பித்தவுடன் தன்னைத் தேடி வரும் வளர்ப்பு அப்பா ஜோஜூவை சிரிப்போடு வந்து பாட்டு பாடி வரவேற்கும் அந்தக் காட்சி கை தட்டல் வாங்குகிறது..!

பூஜா ஹெக்டே பக்கத்து வீட்டு பெண் போல மிகவும் எளிமையாக இருக்கிறார். எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமலேயே மிக அழகாக அவரை ரசிக்க முடிகிறது. தன் கணவன் ரவுடித்தனத்தை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையில் தன்னுடன் இருப்பான் என்று நினைத்ததெல்லாம் நொறுங்கிப் போக அந்த தருணத்தில் பெரும் ஏமாற்றத்தைக் காண்பிக்கும்போது தன்னுடைய இயல்பான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

பாடல் காட்சிகளில் மான்டேஜ் சாட்சிகளாக காதலை உணர்த்துகின்ற இடத்திலும் இப்படியும் ஒரு எளிமையான நடிகை இருக்கிறாரே என்று மற்றைய இளம் நாயகர்களுக்கு உணர்த்தி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

நாசரின் மகனாக, சைக்கோ கொலைகாரனாக நடித்திருக்கும் விது, தன்னுடைய உச்சகட்ட வெறித்தனத்தை காட்டி இருக்கிறார். அவருடைய கொலைகார சிரிப்பும், நடிப்பும், மிருகத்தனமும் சேர்ந்து யார் இந்த நடிகர் என்று நம்மைக் கேட்க வைக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின் எச்சமாக காலனி ஆதிக்கத்திற்கு அடுத்தபடியாக கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தலைவனான நாசரின் நடிப்பும், அவருடைய முடிவும் சுவாரசியமானது.

அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் கருப்பின பெண்களும், ஆண்களுமாக அத்தனை பேருமே தங்களுடைய சோகத்தை துயரத்தை தங்களுடைய முகத்திலேயே காட்டி இருக்கிறார்கள்.

ஒரு துளிகூட சிரிப்பை காட்டாமல் எந்த ஒரு நகைச்சுவைக்கும் சிரிக்கவும் தெரியாமல் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வரும் அந்தக் கூட்டத்தின் மீது பரிதாபமும், பச்சாபதமும்  ரசிகனின் மனதுக்கு எட்டாத அளவுக்கு இயக்குநர் செய்திருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய டிராஜெடி.

படத்தில் நடித்திருக்கும் மற்றவர்களும் இயல்பாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் எந்த குறையும் இல்லை.

ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் சிறப்பு ஒளிப்பதிவு படம் முழுவதும் வியாபித்திருக்கிறது. அந்தமானின் இயற்கை அழகை அப்படியே கேமராவில் பதிவு செய்திருக்கிறார். மற்றபடி சண்டை காட்சிகள் அனைத்துமே கேமராவின் கை வண்ணத்தில் திகைக்க வைக்கிறது. திடுக்கிடவும் வைக்கிறது.

சந்தோஷ நாராயணன் சையில் கனிமா பாடல் விட்டுவிட்டு ஒலித்தாலும், இசையும், நடனமும் ரசிக்க வைக்கிறது. கண்ணாடிப் பூவே பாடல் எமோஷன்ஸை கூட்டுகிறது. பின்னணி இசையிலும் அடித்து அடி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். காதுகளை கிழிக்கும் அவருடைய இசை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னமும் இசைஞானியின் இசையில் ஒரு சதவீதத்தைத்கூட இவராலும் தொட முடியவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இசைஞானியின் அந்த ஒரு பாடலைப் பயன்படுத்தியவிதம் அழகு என்று சொல்லலாம்.

படத் தொகுப்பாளர் தன்னுடைய அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி ஓரளவுக்கு படத்தினை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனாலும் திரைக்கதையில் சுவாரசியமே இல்லை என்பதால் நாமும் தேமே என்ற அமைதியாக அமர்ந்து கடைசிவரைக்கும் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தப் படத்தின் மிகப் பெரிய பிரச்சனையே, இதன் நம்ப முடியாத திரைக்கதைதான். அதுவும் 1960-ல் துவங்கி 1999-ற்கு வந்து அதற்குப் பிறகு எந்த வருடம் பாரி தப்பிக்கிறார்…? இப்போதைய காலக்கட்டமா..? என்பதெல்லாம் சரியாக சொல்லப்படாததால் படம் பார்ப்பவர்களுக்குப் பெரும் குழப்பமே ஏற்படுகிறது.

அந்தமான் பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் சேர்க்கப்பட்டு இத்தனை ஆண்டுகளான பின்பும் இப்போதும் அங்கே இப்படியொரு ஆண்டான் – அடிமை கலாச்சாரம் நடந்து வருவதாக இந்தப் படம் சொல்வது நம்ப முடியாததாக இருக்கிறது. உண்மைக்குப் புறம்பான ஏற்க முடியாத விஷயத்தை நடக்கிறது என்று சொல்லி வைத்திருப்பதால் நம்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்திலேயே இந்த அடிமை கலாச்சார காட்சிகள் மொத்தத்தையும் நம்மால் ரசிக்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் அந்த அடிமை மக்களின் வாழ்க்கைக் கதைக்கும், சூர்யாவுக்குமான தொடர்பை இணைத்திருக்கும் திரைக்கதையும், அதை சூர்யா தெரிந்து கொள்ளும் காட்சியும் சிறப்பு. கடைசியாக ஜெயராம் சொல்லும் அந்தக் கடத்தல் பொருள் பற்றிய உண்மையில் இருக்கும் நகைச்சுவை, நம்மை உண்மையில் சிரிக்கவே வைத்துவிட்டது.

அதே சமயம் அளவுக்கு அதிகமான வன்முறையும், ரத்த சிதறலும்  மனதை பலவீனப்படுத்தும் காட்சிகளாக இருப்பது, நிச்சயம் படம் பார்க்கும் குழந்தைகளின் மனதை புண்படுத்தும். சூர்யாவுக்கு மிக இளம் வயது இளைஞர்களும், குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர். அவர்களை மனதில் வைத்தாவது வன்முறைக் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

கார்த்திக் சுப்புராஜ் தெலுங்கு பட ஹீரோகளுக்கு கதை சொல்லி மிகப் பெரிய இயக்குநராக வலம் வர நினைக்கிறாரோ என்னவோ.. இவருடைய முந்தைய திரைப்படமும் அளவுக்கு அதிகமான வன்முறை வெறியாட்டமாக இருந்தது. இந்தப் படமும் அதேபோல் வெறியாட்டமாகவே இருக்கிறது.

நடிகர் சூர்யா மிகச் சிறந்த நடிகர். அவர் இன்னும் பல பரிமாணங்களை தன்னுடைய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தலாம். ஆனால் அதற்கான சரியான கதைக் களம் அமைய வேண்டும். அந்தக் கதைக் களம் அமைவது ஒரு சிறந்த கதாசிரியர் கம் இயக்குநரால்தான் முடியும்.

கார்த்திக் சுப்புராஜ் பக்காவான கமர்சியல் இயக்குநர். அவருக்கு இதுதான் தோன்றும். ஆனால், சூர்யா அப்படி அல்ல! நல்ல வகையான கமர்சியல் படங்களை சூர்யா மனம் வைத்தால் தனது ரசிகர்களுக்குக் கொடுக்கலாம். தன்னுடைய நடிப்புக்கு ஏற்ற வகையில் அனைத்து தரப்பு மக்களாலும் கடைசிவரையில் அமர்ந்து பார்க்கின்ற வகையில் ஒரு நல்ல கதையில் தாராளமாக தேர்வு செய்த நடிக்கலாம். சூர்யா செய்ய வேண்டியது இதுதான்..! காத்திருக்கிறோம்..!

RATING : 3 / 5

Our Score