பிரபலங்களின் பாராட்டுக்களால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘மாலை நேரத்து மல்லிப்பூ’ திரைப்படம்..!
21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production நிறுவனத்தின் தயாரிப்பில் முழுக்க, முழுக்க புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மாலை நேர மல்லிப்பூ’.
பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார்.
சிறு வயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம் பெண்ணிற்கும், அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “இப்படத்தின் தயாரிப்பாளரான விஜயலெக்ஷ்மி அவர்கள் என் கல்லுரி விரிவுரையாளர் Mr.ராஜேந்திரன் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் என்னை சந்திக்க வந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சொல்லி அழைப்பு விடுத்தார்கள்.
பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கு நேரம் இருப்பதில்லை என்பதால் இந்தப் படத்தையும் முதலில் புறக்கணிக்கத்தான் நினைத்தேன். “படத்தின் தயாரிப்பாளர் யார்..?” என்று இயக்குநரிடம் கேட்டேன். “என் அம்மாதான்” என்று சொன்னார். “நீங்கள் பணக்காரர்களா..?” என்று கேட்டேன். அதற்கு இயக்குநர் “இல்லை சார்.. என் அம்மா எனக்காக அவர்களின் நகைகளை எல்லாம் விற்று படம் தயாரித்திருக்கிறார்…” என்று கூறினார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.
இயக்குநரின் அம்மாதான் இப்படத்தை முன்னெடுத்தவர். அதனால்தான் அவரை முன்னால் அமரச் சொல்லிக் கேட்டேன். இயக்குநர் பாலச்சந்தர் ‘அரங்கேற்றம்’ படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் ஒரு தாய்-மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.
இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும்போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும்போதும், அவரின் படைப்பைப் பார்க்கும்போதும் பிரமிப்பாக இருக்கிறது. இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பார்ப்பதற்கு கார்த்திக் சுப்புராஜ் போல இருக்கும் இந்த இயக்குநர், அவரைப் போலவே பெரும் புகழ் அடைய வாழ்த்துகிறேன்.
இயக்குநர் வசந்த் கூறியது போல், இங்கே காண்பிக்கப்பட்ட டிரெயிலரில் இருந்த ஒவ்வொரு காட்சியிலும் கனம் இருந்தது. கதைக் கருவிற்கு அந்தக் காட்சிகள் வலு சேர்க்கின்றன. நாயகி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இப்போதைய சூழலில் கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்கள்தான் அதிகமாக வளர்ந்து வருகின்றன. எனவே யார் மூலமாக இப்படத்தை வெளியிடுவது என்பதில் கவனமாக இருக்கவும். எனக்குத் தெரிந்து இதை ஓடிடி தளத்தில் வெளியிடுவதுதான் சிறந்தது” என்று அறிவுரை கூறினார்.