‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘தமிழ் பொண்ணு’, ‘மிட்டா மிராசு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ரவி ராகுல், தற்போது சிவரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘ரவாளி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஆர்.சித்தார்த் நாயகனாகவும், ஷா நைரா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கஞ்சா கருப்பு, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, ஜெயபிரகாஷ், ‘பூவிலங்கு’ மோகன், அப்புக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை எழுதி, ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் படத் தொகுப்பு செய்ய, இளைய கம்பன், கு.கார்த்திக் இருவரும் பாடல்களை எழுத, சந்திரிகா நடனம் அமைத்துள்ளார். ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்துள்ளார். பத்திரிகை தொடர்பு -கோவிந்தராஜ்.
தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடிப் போய் திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனை தேடும் கதைதான் இந்த ‘ரவாளி’ படம்.
கதைப்படி படத்தின் நாயகன் தமிழ் நாட்டில் வாழும் இந்திக்கார பையன் என்பதால், இயக்குநர் ரவி ராகுல், கதாநாயகன் சித்தார்த்க்கு நடிப்போடு, தமிழையும் கற்றுக் கொடுத்து, அவரையே டப்பிங்கும் பேச வைத்துள்ளார்.
இந்த ‘ரவாளி’ படத்தின் பாடல் இசையை இயக்குநர் கஸ்தூரி ராஜா வெளியிட்டார்.