ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ரத்த சாட்சி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழின் முன்னணி எழுத்தாளரும் ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களின் வசனகர்த்தாவும் ஆகிய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ என்னும் சிறுகதையை தழுவித்தான் இந்த ‘ரத்த சாட்சி’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்குவதில் பிரபலமான பல தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயமோகனின் கூற்றுப்படி, இந்த ‘ரத்த சாட்சி’ படம் உருவான கதையையே இன்னொரு சினிமாவாக எடுக்கலாம்..!
“ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குநர் என்னை அணுகி ‘கைதிகள்’ கதையைப் படமாக்க விரும்பினார். இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பிரபல இயக்குநர் மணிரத்னமும் இக்கதையை கேட்டார். தொடர்ந்து கதையின் உரிமையைப் பெற இயக்குநர் வெற்றிமாறனும் என்னை அணுகினார். கதையை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுத்துவிட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்” என்கிறார் ஜெயமோகன்.
இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். ஜாவேத் ரியாஸ் இசை சேர்த்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துவுள்ளார்.
ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இப்படம் சான்றாகும்.
இந்தப் படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர்.
திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘ஆஹா தமிழ் OTT’ தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.









