சினிமா ரசிகர்களின் இதயங்கவர்ந்த திரையரங்கம் என்கிற பெயரை PVR சினிமாஸ் ஏற்கெனவே பெற்றுவிட்டது. தனது எல்லைகளையும் வியாபாரத்தையும் மக்கள் சேவையையும் எப்பொழுதும் விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் PVR சினிமாஸ் தற்பொழுது சென்னை மீனம்பாக்கம் பகுதியில் தனது அடுத்த சினி பிளெக்ஸை தொடங்கியுள்ளது.
கலை அற்புதத்திற்கு எடுத்துக்காட்டாக வடிவமைத்துள்ள இந்த சினி பிளெக்சில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமரக் கூடிய வகையில் 5 திரையரங்கங்கள் உள்ளன. ஜூன் 21 அன்று இத்திரையரங்கங்கள் தொடங்கப்பட்டன.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தனது அடுத்த படமான ‘நிபுணன்’ படத்தின் கதாநாயகி வரலக்ஷ்மி சரத்குமார், இயக்குநர் அருண் வைத்தியநாதன் மற்றும் அதன் இசையமைப்பாளர் நவீனுடன் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
ஆக்ஷன் கிங் அர்ஜூனும், வரலக்ஷ்மி சரத்குமாரும் முதல் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கி இத்திரையரங்களை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் PVR-ன் இருபது வருட திரையரங்கு சேவை பற்றிய ஏழு நிமிட பிரம்மாண்டமான ஒளி, ஒலி சித்திரம் திரையிடப்பட்டது.
விழாவில் நடிகர் அர்ஜூன் பேசுகையில், ”இந்த பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளேன். திரையிடப்பட்ட PVR-ன் ஒளி, ஒலியை கண்டு வியப்படைந்தேன்.
இது போன்று புதிய திரையரங்கங்கள் தொடங்குவது சினிமாவின் வளர்ச்சிக்கு பலம் சேர்த்து, திருட்டு சிடி மற்றும் சினிமாவை அழிக்க நினைக்கும் வேறு சில சக்திகளையும் கட்டுப்படுத்த பெருமளவு உதவும்.
எங்களது ‘நிபுணன்’ திரைப்படம் வரும் ஜூலை 7-ம் தேதியன்று வெளியாக உள்ளது. பெரும் உழைப்பையும் நம்பிக்கையையும் முதலீடு செய்து எடுத்துள்ள இப்படத்தை மக்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்…” என்றார்.
இந்நிகழ்வில் ‘நிபுணன்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டு ஊடகங்கள் மத்தியிலும் மற்ற பிரமுகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
PVR சினிமாஸின் பிராந்திய பொது மேலாளர்[தென்னிந்தியா] திரு. ராஜிந்தர் சிங் வரவேற்புரை வழங்கினார். PVR சினிமாஸின் தென்னிந்தியாவின் பிராந்திய விற்பனை தலைவர் திருமதி மீனா சாபிரியா நன்றியுரை வழங்கினார்.