சஹாரா எண்டர்டைன்மென்ட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஷாகீர் ஜேன் தயாரித்திருக்கும் படம் ‘புதுசா நான் பொறந்தேன்.’
இந்த படத்தில் பியோன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘தென்காசிபட்டிணம்’ படத்தில் சின்ன வயது சரத்குமாராக நடித்தவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட நாற்பது படங்களுக்கும் மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு மலையாளப் படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக கல்யாணி நாயர் நடிக்கிறார். மற்றும் கலாபவன் மணி, கராத்தே ராஜா, விஜயன், நரேஷ், சார்மிளா, பெஞ்சமின், மாபியா, சசி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – தாமஸ், இசை – கணேஷ் ராஜா, பின்னணி இசை -வி.தஷி, எடிட்டிங் – அபிலாஷ், கலை – உண்ணி, நடனம் – அக்ஷயா ஆனந்த், சண்டை பயிற்சி – மாபியா சசி, பாடல்கள் – கணேஷ், தயாரிப்பு மேற்பார்வை – பிஜு, பேச்சிமுத்து, தயாரிப்பு – ஷாகீர் ஜேன், கதை, திரைக்கதை, வசனம் – பாலு, இயக்கம் – மஜீத் அபு. இவர் ஏராளமான படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குநர் மஜீத் அபு பேசும்போது, “சமீபத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணி, இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கியபோது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதனால் நாங்கள் வேறொரு நாளில் படைபிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால் அவரோ, ‘வேண்டாம். இப்போதே நடிக்கிறேன்’ என்று சொல்லி நடித்துக் கொடுத்தார்.
நாங்கள் புது யூனிட்டாக இருந்தும்கூட அவர் எங்களுக்கு அந்த சூழ்நிலையிலும் மறுக்காமல் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம்.
இப்படிப்பட்ட ஒரு நல்ல கலைஞன் பிரிந்து சென்றது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.. அவர் கடைசியாக நடித்தது எங்கள் படம்தான்… வரும் ஜூலை 8-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும்போது அவர் இல்லாதது எங்க யூனிட்டுக்கு ரொம்பவே வருத்தம்..” என்றார் பெரும் சோகத்துடன்.









