full screen background image

“இடதுசாரி கருத்தை சொல்லும் படம் ‘புது  வேதம்” – திருமாவளவன் எம்.பி.பேச்சு..!

“இடதுசாரி கருத்தை சொல்லும் படம் ‘புது  வேதம்” – திருமாவளவன் எம்.பி.பேச்சு..!

விட்டல்‌ மூவிஸ்‌ தயாரித்து விரைவில்‌ திரைக்கு வரவிருக்கும்‌ படம்‌ ‘புது வேதம்’‌. 

இந்தப் படத்தில்‌ ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்திருந்த சிறுவர்களான விக்னேஷ்‌, ரமேஷ்‌  வருணிகா, சஞ்சனா மற்றும் இமான்‌ அண்ணாச்சி, சிசர்‌ மனோகர்,‌ 2 ரூபாய்‌ டாக்டர்‌ ஜெயச்சந்திரன்‌ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசை – ரபி தேவேந்திரன்,‌ இணைத்‌ தயாரிப்பு – மஞ்சுநாத்‌ புகழ்‌, எழுத்து, இயக்கம் –‌ ராசா விக்ரம்‌. பத்திரிக்கை தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன்.

இந்தப் புது வேதம்’ படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த நிகழ்வில்‌ இயக்குநர்‌ ராசா விக்ரம்‌ பேசும்போது, ”சமீப காலமாக ஜாதியைப்‌ பற்றிப்‌ பேசும்‌ படங்கள்‌ அதிகமாக வருகின்றன. அதில்‌ சில படங்கள்‌ வெற்றியும்‌ பெறுகின்றன. இந்தப் ‘புது வேதம்’‌ படத்தின்‌ கதைக் களம்‌ சற்று வித்தியாசமானது. மாறுபட்டது.

பிறப்பால்‌ உயர்ந்தவர்‌, தாழ்ந்தவர்‌ என்பது நமது தமிழ்க்‌ கலாச்சாரத்தில்‌ கிடையாது. ‘பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்’ என்பதுதான்‌ தமிழர்களின்‌ வேதம்‌.

பல்வேறு காரணங்களால்‌ பெற்றவர்களால்‌ கை விடப்படும்‌ அனாதை‌ சிறுவர்கள்‌ சிலர்‌ தங்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்காக, புறநகரில்‌ கொட்டப்படும்‌ கழிவுகளில்‌ உள்ள குப்பைகளைப்‌ பொறுக்கி, விற்று அங்கேயே சிறு, சிறு குடிசைகள்‌ போட்டு தங்களின்‌ வாழ்வை அமைத்துக்‌ கொள்கிறார்கள்‌.

சமூகத்தால்‌ புறக்கணிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு வாழ்கிறார்கள்‌. இவர்களின்‌ உழைப்பை சில பெரிய மனிதர்கள்‌ பயன்‌படுத்திக்‌ கொண்டு தங்கள்‌ வாழ்வை வளப்படுத்திக்‌ கொள்கிறார்கள்‌. ஆதாயத்துக்காக இவர்கள்‌ செய்யும்‌ காரியம்‌ மக்களை பாதித்து, பலர்‌ இறக்கவும்‌ நேரிடுகிறது .அதனால்‌ அரசு குப்பையை எடுத்து விற்க தடை விதிக்கிறது.

இதனால், பிறந்தது முதலே குப்பை மேட்டிலேயே வசிக்கும்‌ சிறுவர்கள்‌ கடுமையாக. பாதிக்கப்படுகிறார்கள்‌. இவர்கள்‌ மட்டும்‌ பெற்றோர்களால்‌ கை விடப்படாமல்‌ பாதுகாப்பாக இருந்திருந்தால்‌ படித்து பட்டம்‌ பெற்று பொறுப்பான வேலைக்கு சென்றிருப்பார்கள்‌ என்பதை யதார்த்தமாக சொல்வதுதான்‌ இந்த புது வேதம்’ படத்தின்‌ கதை…” என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது, “இந்த விழாவுக்கு நெல்லை சுந்தர்ராஜன் செய்த தொல்லையால்தான் வந்தேன். இங்கு வந்தது நல்லாதாகிவிட்டது எனது பழைய நண்பர்கள் இயக்குநர் வி.சேகர் போன்றவர்களை சந்திக்க முடிந்தது.

இங்கு இசை அமைப்பாளர் தேவேந்திரன் வந்திருக்கிறார். நிறைய பேருக்கு அவர் யாரென்று தெரியாது. அந்தக் காலகட்டங்களில் கல்யாண நேரத்தில் இசை நிகழ்ச்சி வைப்பார்கள். என் அக்கா கல்யாணத்துக்கு ஏ.எம்.ராஜா, ஜிக்கி இசை நிகழ்ச்சியை என் அப்பா வைத்தார். பின்னர் என் திருமணத்துக்கு சங்கர் கணேஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு என் தங்கை திருமணத்துக்கு அப்போது பிரபலமாக இருந்த இந்த தேவேந்திரனின் இசை நிகழ்ச்சி நடந்தது.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த வேதம் புதிது’  படத்துக்கு இசை அமைத்தவர் தேவேந்திரன். இன்றைக்கு அவரது மகன் இந்த ‘புது வேதம்’ படத்தில் பாடல் பாடியிருக்கிறார்.

‘புது வேதம்’ படத்தை ராசா விக்ரம்.இயக்கியுள்ளார் இவருக்கு இந்தப் பெயரை கலைஞர் வைத்திருக்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த பசங்க இதில் நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘காக்கா முட்டை’ என்று சொல்லும்போது ரியாலிட்டி ஃபீல் ஆகிறது. அப்போதே அவர்களை நான் பாராட்டியிருக்கிறேன். அதுபோல் ஒரு ரியாலிட்டியுடன் இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன்.

திருமாவளவன் இந்தப் படத்தை பார்த்திருக்கிறார் என்றால் நிச்சயமாக அடித்தட்டு மக்களுக்கான நியாயத்தை பேசும் படமாகத்தான் இது  இருக்கும் என்று கருதுகிறேன். இப்படம் ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்…” என்றார்.

இயக்குநர் வி.சேகர் பேசும்போது, “இந்தப் படம் பார்க்கும்போதே சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம் என்பது தெரிகிறது. சின்ன பட்ஜெட்டில் படங்கள் எடுத்து வெற்றி பெற்ற இயக்குநர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’ படமும் சின்ன பட்ஜெட் படம்தான் ஆனால் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதுபோல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 2 படங்கள் சின்ன படங்கள்தான். சின்ன படங்கள் எடுத்து  வெற்றி பெற்றவர்கள்தான் ஏராளம். சின்ன படங்களை ஏளனமாக பார்க்க வேண்டாம். முன்பு சின்ன படங்களுக்கு போட்டி கம்மி.  இப்போது போட்டி அதிகம் அதில் எப்படி ஜெயிப்பது என்று தெரிய வேண்டும். வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

இயக்குநர் பீம்சிங் இயக்கிய  முதல் படமே தோல்விதான். அதன் பிறகு அவர் 20-க்கும் மேற்பட்ட சில்வர் ஜூப்ளி படங்கள் தந்தார். பாரதிராஜா வெற்றி பெற்றார் என்றால் அவர் மட்டுமல்ல… அவருடன் பணியாற்றிவரும் அத்தனை பேருடைய உழைப்பும் அதில் இருக்கிறது. டீமாக உழைத்தால் ஜெயிக்கலாம்.

எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்கள் கூட்டு முயற்சியில்தான் படங்கள் செய்து வெற்றி பெற்றார்கள். ஒரு வெற்றி மட்டும் சினிமாவில் கொடுத்தால் காசு டேபிளில் வந்து விழும். நம்மை  உயரே தூக்கிக் கொண்டு போவார்கள். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பாளருக்கு லாபம் வருமா என்பதை அறிந்துதான் படம் செய்வார். கூட்டு முயற்சிதான் வெற்றி பெறும். உங்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும்..” என்றார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “இந்தப் புது வேதம்’ படத்தில் முக்கியமான வேடம் செய்திருக்கிறேன். காமெடியும் செய்துள்ளேன். படம் பார்த்து ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்…” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் எம்.பி. பேசும்போது, “இந்தப் ‘புது வேதம்’ படத்தை இயக்குநர் ராசா விக்ரம் எனக்கு திரையிட்டு காட்டினார். முழுமையாக பார்த்தேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வரியை அடிப்படையாக கொண்டு இப்படத்தை.இயக்கியிருக்கிறார்.

இமான் அண்ணாச்சி பேசும்போது. “எல்லோரும் இப்போது சமுதாயத்தை அடிப்படையாக கொண்டு மேல் தட்டு, கீழ் தட்டு என்று படம் எடுக்கிறார்கள்” என்ற வருத்தத்தை சொன்னார்.

அப்படிப்பட்ட இத்திரையுலகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்துடன் படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். ராசா விக்ரம் போன்றவர்கள் ‘சாதி வேண்டாம்.. மதம் வேண்டாம்.. எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்போம்’ என்ற ஐய்யன் திருவள்ளுவர் சொன்னதைக் காட்சிப்படுத்தும் புரட்சிகரமான, முற்போக்கான சிந்தனையாளர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு பெருமையையும், நம்பிக்கையையும்  அளிக்கிறது. ஆறுதலை அளிக்கிறது.

இந்த இயக்குநரின் பார்வை இடது சாரி பார்வையாக இருக்கிறது. முற்போக்கு பார்வையாக இருக்கிறது. ஜனநாயக, சமத்துவ பார்வையாக இருக்கிறது. எளிய மக்களை உற்று நோக்குகிற ஒரு பார்வையாக இருக்கிறது. அலட்சியப்படுத்தப்பட்டவர்கள் மக்களாகவும் நடத்தப்படவில்லை என்ற பார்வை இயக்குநரிடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் இருக்கும்போது நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை.

ஒருபுறம் சாதி பெருமை பேசுபவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறவர்களாக  இருந்தாலும் அய்யன் திருவள்ளுவர், அவ்வை பிரட்டி, சித்தர் பரம்பரையை சேர்ந்தவர்கள் வள்ளலார்,  அய்யா வைகுண்டநாதர்,  ்ரீ நாராயண குரு, பசவையா, புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு நாம் சிந்திக்கிறோம்.

மனித குலத்தைக் தாண்டி பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் அதுதான் கருணை. அதைத்தான் வள்ளலார் தனிப்பெரும் கருணை’ என்றார். ‘எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு’ என்ற ஆன்ம நேயத்தை போதித்தவர் வள்ளலார். காலம் நமக்கு அவ்வப்போது வள்ளலார்களை தந்து கொண்டேயிருக்கும்.

திரைத்துறையில் எத்தனை ஜாதி வெறியர்கள் வந்தாலும், மத வெறியர்கள் வந்தாலும், எப்படி படம் எடுத்தாலும் சமூகத்தை எப்படி பாழ்படுத்த நினைத்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்கிற சிந்தனையாளர்களை, இந்த சமூகம் தந்துகொண்டே இருக்கும்.

அந்தக் காலத்தில் வள்ளலார் கிடைத்தார். இந்தக் காலத்தில் தந்தை பெரியார் கிடைத்தார். அம்பேத்கர் கிடைத்தார். அவர்கள் தந்த கொள்கைகள் நம்மை வழி நடத்துகின்றன  என்பதற்கு சான்றாக இயக்குநர் ராசா விக்ரம் இருக்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’. அதுதான் ‘புது வேதம்’. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று சொல்வது வருமானத்துக்காக அல்ல… லாபத்துக்காக அல்ல.. வருமானத்துக்காக படம் எடுக்க வேண்டுமென்றால் வேறு மாதிரி படம் எடுக்கலாம்.

ஆனால், திரையுலகம் வாயிலாக முற்போக்கான அரசியலை மக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்து சமூகத்தில் கவனிக்கப்படாத சமூகத்தினர் குப்பை பொறுக்கும் மனிதர்கள் பற்றிய கதையாக இது உருவாகி உள்ளது.

வீடு இல்லாதவர்கள் இந்தியாவில் பல கோடி பேர் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கானவர்கள் பிளாட்பாரத்தில்  வாழ்கிறார்கள். ஆனால் நாம் இந்தியாவை வல்லரசாக்க  போராடிக் கொண்டிருக்கிறோம். முதலில் நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வசிக்க வீடு இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

வீடில்லாமல் வாழ்பவர்களில் குப்பை  பொறுக்குபவர்களின் கதையை இந்த புது வேதம் படத்தில் கூறியிருக்கிறார் இயக்குநர். அவர்களுக்கு சாதி கிடையாது அவர்கள்  உழைக்கும் தொழிலாளர்கள்.

உலகம் முழுவதும் இரண்டே சமூகம்தான்  உள்ளது. அதிகாரமுள்ள சமூகம், அதிகாரம் இல்லாத சமூகம். அதிகாரத்தோடு தொடர்பு இல்லாதவர்கள் நசுக்கப்படுகிறார்கள், சுரண்டப்படு கிறார்கள். அதிகாரம் படைத்தவர்களுக்குள் சாதி  பேதம் இருக்காது. அங்கு எல்லோரும் ஒன்றாக ஒரு உடன்பாடோடு இணைந்திருப்பார்கள்.

உடல் உழைப்பே இல்லாமல் ஒரு சமூகம் பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப சமுதாய அமைப்புதான்  இங்கு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், எல்லா உயிர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இடது சாரி சிந்தனை. அத்தகைய சிந்தனையோடு உருவாகியிருக்கும் இந்தப் புது வேதம்’ திரைப்படம் பெறும் வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

Our Score