சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனத்தின் சார்பில் படத்தின் நாயகனான ஸ்ரீ இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, கோவை குருமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சிபு சுகுமாரன் இசையமைத்துள்ளார். இவர் சுமார் 12 மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம். சதிஷ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ‘அடங்க மறு’, ‘அண்ணாதுரை’ போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தினேஷ் காந்தி படத் தொகுப்பு செய்துள்ளார்.
2018-ம் ஆண்டு வெளியான ‘மங்கை மான்விழி அம்புகள்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் வினோ இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
டிரமாட்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப்பில் பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’-தான் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக பல பாகங்களாக வெளியாகும் படங்களில் முதல் பாகம் வெளியான பிறகுதான் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும். ஆனால், இப்படக் குழு சற்று வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு படத்தை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளார்கள். படத்தைப் போலவே படத்தின் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார்களாம்.
ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் இப்படத்தின் கதையில் இடம் பெறும் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒவ்வொருவரும் ஒரு குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, இவர்களிடம் இருக்கும் போட்டி குணமும் நம்மை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது.
பி.எஸ்.ஸி. கெமிஸ்ட்ரி படித்திருக்கும் நாயகன் ஸ்ரீ, படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் தண்ணீர் கேன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அங்கே ஏற்படும் சின்னப் பிரச்சினையால் அந்த வேலையும் பறிபோகிறது.
கடைசியில் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்ற நிலைமைக்கு வந்துவிடுகிறார் நாயகன். அப்போதுதான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக இருக்கும் வயதானவரான ராம்ஜியை பார்த்துக் கொள்ளும் வேலை நாயகனுக்குக் கிடைக்கிறது. மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார் நாயகன்.
அதே வீட்டில் வேலைக்காரியாக இருக்கிறார் வசுதா கிருஷ்ணமூர்த்தி. வயதான கணவனின் சந்தேகப் புத்தியில் மாட்டிக் கொண்டு தவித்தபடியே இந்த வீட்டு வேலையையும் செய்து வருகிறார் வசுதா.
ராம்ஜிக்கு பிஸியோதெரபி கொடுப்பதற்காக அவ்வப்போது அந்த வீட்டிற்கு வந்து செல்கிறார் பிஸியோதெரபிஸ்ட் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் சாம்ஸ்.
இந்த நிலையில் படுத்தப் படுக்கையாக இருக்கும் ராம்ஜி திறமையான விஞ்ஞானி என்பது நாயகனுக்குத் தெரிய வருகிறது. ராம்ஜி வைத்திருக்கும் ஒரு மாத்திரை அபரிமிதான சக்தி வாய்ந்தது என்பதையறியும் நாயகன் அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் கொடுத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.
இந்த நிலையில் வசுதாவின் காம வலையிலும் சிக்கி அவருடன் உடல் ரீதியாகவும் ஐக்கியமாகுகிறார் நாயகன்.
நாயகன் ஸ்ரீ ரகசியமாக பெரும் பணம் சம்பாதிப்பதை தெரிந்து கொண்ட வசுதா, மொத்தப் பணத்தையும் நாயகனிடமிருந்து அபகரிக்க திட்டம் போடுகிறார். மறுபுறம் விஞ்ஞானி ராம்ஜியிடம் இருக்கும் அவர் கண்டறிந்த அந்த மருந்தின் பார்முலாவை கைப்பற்ற சாம்ஸ் திட்டமிடுகிறார்.
இந்தத் திட்டத்தில் முதல் படியாக நாயகன் ஸ்ரீ-யை வஞ்சமாக வலையில் வீழ்த்தும் வசுதா அவனை அடித்து உதைத்து பணம் எங்கே என்று விசாரிக்கிறாள். அந்த நேரத்தில் அங்கே வரும் சாம்ஸ் வசுதாவுடன் இணைந்து ஸ்ரீயிடம் அந்த பார்முலாவை மட்டும் தன்னிடம் தந்துவிடும்படி கேட்கிறார்.
உயிருக்கு பயந்த ஸ்ரீ பணம், பார்முலா இரண்டையுமே காட்டிக் கொடுக்கும் தருணத்தில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடக்கிறது.
எதிர்பாராத அந்த சம்பவத்தால் நடந்தது என்ன..? இவர்களிடமிருந்து ஸ்ரீ தப்பித்தாரா..? வசுதா கிருஷ்ணமூர்த்திக்கு பணம் கிடைத்ததா..? மருந்து பார்முலாவை சாம்ஸ் கைப்பற்றினாரா…? யாருமே எதிர்பார்க்காத அந்த சுவாரஸ்யமான சம்பவம்தான் என்ன..? என்பதற்கான விடைதான் இந்த ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ படம்.
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீ அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தோற்றத்துடன் இருப்பது ஒரு பிளஸ் பாயிண்ட். விரக்தியான மன நிலை கொண்ட இளைஞனாகவும், அதே நேரம் வாய்ப்பு கிடைத்தால் வசதியாக வாழ்வதற்கான வழியைக் கண்டறிந்து அதில் பயணிக்கும் திறன் கொண்ட தனது சாமர்த்திய குணத்தையும் படத்தில் காண்பித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் மிகப் பெரிய அட்ராக்சன் வசுதா கிருஷ்ணமூர்த்திதான். இதற்கு முன்பு ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரீஸில் நடித்திருந்த இவரது கவர்ச்சியான உடற்கட்டும், நடிப்பும்தான் இந்தப் படத்திற்குக் கூடுதல் கவனத்தைக் கொடுத்திருக்கிறது.
ஸ்ரீ-யை தன் பக்கம் கவர்வதற்காக இவர் தன்னைக் காட்டிக் கொள்ளும்விதமும், நெருக்கமான பின்பு கட்டிப்பிடி வைத்தியத்தில் காட்டியிருக்கும் நடிப்பிலும் ரசிகர்களை சூடேற்றுகிறார்.
கடைசியில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா கதையாக நாயகன் ஸ்ரீயை சுத்தியலால் அடித்து(அதுவும் அந்த இடத்தில்) பணத்தைப் பற்றி விசாரிக்கும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் வசுதா.
மருத்துவராக நடித்திருக்கும் சாம்ஸ், ராம்ஜியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற வரும் வில்லனாக நடித்திருந்தாலும் அறிமுகக் காட்சியில் தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு அவரும், நாயகனும் பேசும் ‘பஞ்ச்’ வசனங்கள் பெரிதும் ரசிக்கக் கூடியது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் விஞ்ஞானி ராம்ஜி தனது மாத்திரைகளை விற்று நாயகன் பணம் சம்பாதிப்பதை அறிந்து தடுக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு தனது கோபத்தைக் காட்டுவதிலும், க்ளைமாக்ஸில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டில் தான் யார் என்பதைக் காட்டும்போதும் ரசிக்க வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவாளர் சதீஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கு பொருத்தமாகவும், பட்ஜெட்டுக்கு தோதாகவும் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் சுகுமாரனின் பாடல் இசையைவிடவும் பின்னணி இசை கதையாடலுக்குப் பொருத்தமாகப் படம் முழுவதும் வந்திருக்கிறது. இவ்வளவு சின்னக் கதையை சுவாரஸ்யம் குறையாமல் கனெக்சன் விட்டுவிடாமல் தொகுத்திருக்கிறார் தொகுப்பாளர்.
இந்த இரண்டாம் பாகத்தைப் பார்க்கும் போது, முதல் பாகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நமக்குள் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான்..!
குறைந்த பட்ஜெட்டில், சுவாரஸ்யமான, அதேசமயம் விறுவிறுப்பு குறையாத திரைக்கதையுடன், வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் 2022-ம் வருடக் கடைசியில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் தரமான பொழுதுபோக்கு படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.
RATING : 4 / 5