RFI பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரெஹான் அஹமத் தயாரித்துள்ள திரைப்படம் ‘கெத்துல’.
இப்படத்தில் ஸ்ரீஜீத், ஈரீன் அதிகாரி, ஷாயாஜி ஷிண்டே, ரவி காலே, வீரேந்திர சக்சேனா, சலீம் பாண்டா, குரு சந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை-ஊடக நண்பர்கள் முன்னிலையில் கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராஜாளி பேசும்போது, “இந்தக் ‘கெத்துல’ மிகச் சிறப்பான படைப்பாக வந்துள்ளது. நடிகர் ஶ்ரீஜித் கே.ஜி.எப். யாஷ் போல் தோற்றமளிக்கிறார். படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர் ஶ்ரீஜித் பேசும்போது, “நான் பெங்களூரிலிருந்து வருகிறேன். இயக்குநர் தன் ரத்தத்தைக் கொட்டி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். நான் ஏற்கெனவே கன்னட படங்களில் நடித்துள்ளேன். தமிழில் இந்தப் படம் போல் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இந்தப் படத்தில் ஆக்ஷன், காமெடி செண்டிமெண்ட் என எல்லாமும் இருக்கிறது. இந்தப் படம் நன்றாக வந்துள்ளது. எங்களை வாழ்த்தி ஆதரவு தாருங்கள்.” என்றார்.
நாயகி ஈரின் பேசும்போது, “இந்தப் படம் ஒரு பான் இந்தியப் படம். எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் ஜீவா வர்ஷினி பேசும்போது, “இயக்குநர் என்னை ஒரு புரோகிராமில் பார்த்துவிட்டு என் படத்திற்கு நீங்கள்தான் மியூசிக் என்றார். இந்தப் படம் முழுதுமே டீம் ஒர்க்தான். மிக கடின உழைப்பை தந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இயக்குநர் மிக அழகாக படத்தை உருவாக்கியுள்ளார். நான் சங்கர் கணேஷ் அவர்களின் சிஷ்யை. அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு என் பாடல்கள் பிடிக்குமென நம்புகிறேன். இயக்குநர் V.R.R அவர்களுக்கு நன்றி.” என்றார்.
நடிகரும், ஸ்டண்ட் இயக்குநருமான பெப்சி விஜயன் பேசும்போது, “இந்தக் கெத்துல படத்தின் டிரெய்லரே கெத்தாக இருக்கிறது. நாயகன் ஶ்ரீஜித் கலக்கியிருக்கிறார். படம் பார்க்க நன்றாக வந்துள்ளது. சினிமாவில்தான் மொழிப் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் சினிமாவுக்கு தேசிய விருது தருகிறார்கள். இங்கு வந்துள்ளவர்கள் ரிஷி ராஜுக்காக வந்துள்ளார்கள். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். எல்லோருக்கும் வாழ்த்துகள்…” என்றார்.
தயாரிப்பாளர் அன்பு பேசும்போது, “இயக்குநர் V.R.R.-ஐ எனக்கு நெருக்கமாக தெரியும். கடுமையாக உழைக்க கூடியவர். இந்தக் குழு மிக கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்..” என்றார்.
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் பேசும்போது, “இயக்குநருக்கு மூன்று எழுத்து பெயர் V.R.R. சினிமாவில் மூன்றெழுத்து பெயரிருந்தால் பெரிய வெற்றி பெறுவார்கள். இசையமைப்பாளர் எனது சிஷ்யை. அவரை இசையமைப்பாளராக்கிய இயக்குநருக்கு நன்றி. இந்தக் குழு மிகப் பெரிய வெற்றியைப் பெற என் வாழ்த்துகள்…” என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “இந்தப் படத்தில் என் பங்களிப்பு இல்லாவிட்டாலும் நட்புக்காக அழைத்தமைக்கு நன்றி. திறமையிருந்தும், அங்கீகாரத்திற்காக முயற்சிப்பவர்களின் படம் இது. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். எல்லோரும் அங்கீகாரம் பெற வேண்டும். அண்ணன் ரிஷி ராஜ் உண்மையாய் சினிமாவை நேசிப்பவர். அவருக்கு சினிமாவைத் தவிர எதுவும் தெரியாது. இந்தப் படம் ஓடுவதற்கு ஆதரவு தாருங்கள்…” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்றால்தான் திரையுலகம் வளரும். தொழிலாளர்கள் வாழ்வார்கள். இந்தக் ‘கெத்துல’ படம் கெத்தாக இருக்கிறது. இந்தக் குழு வெற்றி பெற்றால் மீண்டும் படம்தான் எடுப்பார்கள். தயாரிப்பாளர் மிகுந்த நல்ல குணம் படைத்தவர். நல்லதொரு ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
தமிழ் சினிமாவில்தான் ஹீரோக்களுக்கு 60 சதவீதம் சம்பளம் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இது தீர வேண்டும். இப்படி எடுத்தால் எப்படி ஓடும்..? தயாரிப்பாளரை வாழ வைக்காவிட்டால் சினிமா வாழாது. இந்தப் படம் போல் சின்ன படங்கள் ஓட வேண்டும்..” என்றார்.
அனைத்து அம்சங்களும் நிரம்பிய ஆக்ஷன், கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.















