தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் 22-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர்.
‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’ என்கிற பெயரில் போட்டியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான அணியில் செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இவர், ஏற்கனவே சங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர். கடந்த 20 வருடங்களாக குறைந்த பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர். கடந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
இவருடன் ஒரு பேட்டி…
1. என்னென்ன வாக்குறுதிகளை முன் வைத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்…?
தமிழ்த் திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம்தான். அதைத் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் கட்ட மாட்டோம். அதற்குரிய மாற்று வழிமுறைகளைச் செய்வோம்.
நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களைச் சரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வோம்.
ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம்.
சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயற்சி எடுப்பது.
சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
2. ‘தொழில் நுட்பச் சிக்கல்’ என்று OTT-யை குறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் ‘சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயல்வோம்’ என்று சொல்கிறீர்களே..?
திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTT-யிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயல்வோம் என்றுதான் சொல்கிறோம்.
3. சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே..? ஆனால், இன்னமும் செயலுக்கு வந்தபாடில்லையே..?
கடந்த முறை விஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படித்தான் சொன்னார். ஆனால், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என இரண்டு பதவிகளில் இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
4. சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும் தேர்தல்களில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே..?
ஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள். சிறு படங்களை மட்டுமே தயாரித்துப் பெரிய வெற்றிகளைப் பெற்ற தேனாண்டாள் நிறுவனத்தின் முரளிக்கு அதன் வலி முழுமையாகத் தெரியும். அவர் கண்டிப்பாக செயல்படுத்துவார்.
5. எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே..?
டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத்தக்கது. ஏற்கெனவே விஷால் தலைவரானபோது இவரே இதே காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார். இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.
அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்..? அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக் கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள். இது, அவருக்குப் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்.
6. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா?
எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்து கொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான். எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான். இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.
7. இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்றொன்று அமைந்திருக்கிறதே..?
அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது. நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச் சங்கத்தில் இணைய வைப்போம்.
8. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே..?
கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்தோம். ஆனால், இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காக யாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை.
9. உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் அணிக்கு அவர்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?
நான் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுகிறவன். கடந்த 20 வருடங்களாக குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடி வருகின்றேன். யாருக்கு சிக்கல் என்றாலும் முதல் நபராக அங்கு இருப்பேன். என்னாலான உதவிகளை செய்வேன். அதனால் எல்லோரும் என்னிடம் பாசமாக இருப்பார்கள். இதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.
10. சங்கப் பொறுப்புக்குப் போட்டியிடும் தகுதி இல்லாமல் அவசர கதியில் ஒரு படத்தை ஓரிரு திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டுத்தான் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதாகப் புகார் எழுந்துள்ளதே..?
படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஒருவர் தயாரிப்பதும் அதை இன்னொருவர் வாங்கி வெளியிடுவதும் எப்போதும் உள்ள நடைமுறைதான். கொரோனா காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் கொழும்பு, புதுச்சேரி ஆகிய இடங்களில் திரையிட்டோம். தமிழகத்தில் திரையரங்குகள் திறந்திருந்தால் அதிக திரைகளில் வெளியிட்டிருப்போம்.
எனவே இந்தப் புகார் அர்த்தமற்றது. தேர்தல் அதிகாரி நாங்கள் விதிமுறைப்படி நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டு எங்கள் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்டார்.