ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘அழகிய லைலா’.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி நடிக்க, மேலும் தம்பி ராமையா, கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்கிறார்கள். சத்யா இசையமைக்க, நிர்வாகத் தயாரிப்பு எம்.சண்முகவேல்.
முழுக்க, முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னை அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள நாச்சியார் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில் இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது.
ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் டாக்டர் விக்ரம் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் இளைய திலகம் பிரபு கலந்து கொண்டு பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் எல்லோரும் கேரளாவில் இருந்து வந்திருக்கிறார்கள். மலையாளத்தில் படங்களை தயாரித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ரெஜித் மலையாளத்தில் முதல் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தமிழில் அவருக்கு முதல் படம். இந்தப் படத்தின் கதையை நான் கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே, இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதையை சொல்லி…. கதை அவருக்குப் பிடித்துப் போனது. அதன் பிறகுதான் என்னை அணுகினார்கள்.
நான் ஒன்றரை மணி நேரம் சிரித்துக் கொண்டே கதையை கேட்டேன். அதன் பிறகுதான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கதாநாயகியாக அப்சரா ராணி நடிக்கிறார். மேலும் நான்கு பசங்க நடிக்க இருக்கிறாங்க.
தம்பி ராமையா, கிங்ஸ்லி என்று கேரக்டர் ஆர்டிஸ்ட் நிறைய பேர் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகிறது. நான் ‘சின்ன மாப்ளே’, ‘தேடினேன் வந்தது’ என்று பல நகைச்சுவை படங்களில் நடித்திருக்கின்றேன். அந்த வரிசையில் இந்தப் படமும் மிகப் பெரிய நகைச்சுவை படமாக இருக்கும்.
என்னுடைய தந்தைக்கு எப்படி ஆதரவு அளித்தீர்களோ… அதுபோல எனக்கும் நீங்கள் ஆதரவளித்தீர்கள். அதுபோல் என் மகன் விக்ரம் பிரபுவுக்கும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த படக் குழுவுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு நல்ல கலைஞர்களை எப்போதும் வரவேற்று அவர்களை கொண்டாடி இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர்களை கொண்டாட வேண்டும்.
இந்தப் படம் தமிழில் மட்டும்தான் தயாராகிறது. கேரளாவிலும் இந்த படம் தமிழில்தான் வெளியாகும். கேரளாவில் உள்ள மக்கள் தமிழ் நன்கு அறிவார்கள். நான் நடித்த ‘சின்னத்தம்பி’ படம் 100 நாட்களுக்கு மேல் அங்கு ஓடியது.
அதேபோல தமிழ் நன்றாக பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தமிழ்ப் படங்கள் நேரடியாகவே அங்கு வெளியாகிறது. அங்கு மக்களிடம் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுபோல இந்த படமும் கேரளாவிலும் வெளியாகும்” என்றார்.
தயாரிப்பாளர் ஏ.ஆர்.மதியழகன் கூறும்போது, “இந்தப் படம் நகைச்சுவை கலந்த படம். எனக்கு ரொம்பவும் பிடித்த கதை. பிரபு சார் நடித்தால் நல்லா இருக்கும் என்று பேசினோம். அதன்படி பிரபு சார் அவர்களை அணுகி கதையைச் சொல்லி அவரை நடிக்க வைக்கிறோம்.
சினிமா உலகில் அவர் மிகப் பெரிய லெஜன்ட். நல்ல கலாச்சாரம், நல்ல பண்பாடு கொண்டவர். இந்த மாதிரி கதையில் அவர் நடிப்பது எங்களுக்கு பெரிய பெருமை. அவர் நடிப்பது எங்களுக்கு கிடைத்த வரம்” என்று கூறினார்.









