பிரபல வீடியோ செய்தி நிறுவனமான Behindwoods தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது.
இவர்களது முதல் தயாரிப்பில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
காமெடி நடிப்பில் உச்சம் தோட்ட யோகி பாபு ஒரு வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான(CEO) என்.எஸ்.மனோஜ் தயாரித்து, இயக்குகிறார்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் என்.எஸ்.மனோஜ் பேசும்போது, “இந்திய திரையிசை மற்றும் நடனத் துறையில் பேராற்றல்மிக்கவர்களான பிரபுதேவா-ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இரு பெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மூலமாக இணைந்துள்ளது.
இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இத்திரைப்படம் உருவாகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்..” என்றார்.
‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “சில நல்ல யோசனைகள் நம் மனதுக்கு வரும். அதை இப்போது செய்யலாம்.. பிறகு செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேயிருந்தால் வருடங்கள் ஓடிவிடும். இந்தப் படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது…” என்றார்.
‘நடனப் புயல்’ பிரபு தேவா பேசும்போது, “நடன இயக்குநர்களை ஊக்கப்படுத்திய இசைப் புயல் ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படத்திற்காக மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு சில மாதங்களில் தலைப்பை வெளியிடவுள்ளனர். தற்போதைக்கு தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானும், பிரபுதேவாவும் இணையும் 6-வது படம் இது என்பதால் அதைக் குறிக்கும் வகையில் #arrpd6 என பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது.
2025-ம் ஆண்டு பான் – இந்தியா படமாக இந்தப் படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்.