full screen background image

போர் தொழில் – சினிமா விமர்சனம்

போர் தொழில் – சினிமா விமர்சனம்

இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

இதில் அசோக் செல்வன், ஆர்.சரத்குமார், நிகிலா விமல், பி.எல்.தேனப்பன், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத் தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். பத்திரிகை தொடர்பு – யுவராஜ். அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார்.

சரத்குமார் – அசோக் செல்வன் கூட்டணியில் ஒரு படம் என்ற அறிவிப்பே இப்படம் மீது ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது..அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்துள்ளதா ‘போர் தொழில்’?

படத்தின் துவக்க காட்சியிலே பெரும் எதிர்பார்ப்பை கொடுக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. படத்தின் ஆரம்பத்தில் திருச்சியில்  ஒரு காட்டில் ஒரு பெண்ணின் உடல் சிதைக்கப்பட்டு கிடக்கிறது. அதைத் தொடர்ந்து அதேபோல் மற்றொரு கொலையும் நடக்க வழக்கு கிரைம் டிப்பார்ட்மெண்டுக்கு மாற்றப்படுகிறது.

க்ரைம் டிப்பார்ட்மெண்ட் அதிகாரியாக சரத்குமார் வருகிறார். அவரின் அஸிஸ்டெண்ட் ஆக வருகிறார் அசோக்செல்வன். டெக்னிக்கல் அஸிஸ்டெண்டாக வருகிறார் நாயகி நிகிதா விமல். இவர்கள் மூவரின் கூட்டணியால் அந்தக் கொலைகளைச் செய்தவனை கண்டுபுடிக்க முடிந்ததா என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது.

அசோக் செல்வன் பயந்த சுபாவம் உள்ளவர் எனினும் புத்திக் கூர்மையுள்ளவர். சரத்குமார் சாதுர்யமும் கம்பீரமும் மிக்கவர். சரத்குமார், அசோக்செல்வனுக்குள் இருக்கும் ஒவ்வாமை எப்படிச் சரியாகிறது என்ற கோட்டிலும் சற்று நேரம்  கதை பயணிக்கிறது.

இந்தப் படத்தின் முதல் வெற்றியாக பார்க்க வேண்டியது நட்சத்திரத் தேர்வைத்தான். எந்த வேடத்திற்கு யார் நடித்தால் சரியாக இருக்கும் என்ற தேர்விலே அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா ஜெயித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

இரண்டு ஹீரோக்களில் முன்னால் ஹீரோ சரத்குமார் இனி தான் எந்நாளும் ஹீரோ என்று சொல்லும் அளவில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது வசன உச்சரிப்புகள், அசால்டான முகபாவனை, கம்பீரமான உடல்மொழி ஆகியவை அனைத்தும் இப்படத்தின் கதையை வேறோர் தளத்திற்கு எடுத்துச் செல்கிறது.

அசோக் செல்வன் மிகையற்ற நடிப்பால் நம் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார். குறிப்பாக சரத்குமாருக்கு அடங்கிப் போகும் இடங்களிலும், தன் ஆற்றாமையை அடக்க முடியாமல் நாயகி நிகிலா விமலிடம் சொல்லி Feel  பண்ணும் காட்சிகளிலும் பெரியளவில் ஸ்கோர் செய்கிறார்.

நாயகி நிகிலா விமல் திரையில் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். ஒரு காட்சியை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும்படி அவரது நடிப்பு அமைந்துள்ளது. க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பில் அருமையான ஆளுமை வெளிப்பட்டுள்ளது எனலாம்.

சரத்பாபு ஆச்சர்ய சர்ப்ரைஸ் கொடுத்து நடித்துள்ளார். ஒரு எளிமையான நடிகரை இழந்து விட்டோம் என்ற வருத்தம் அவர் வரும் காட்சிகளில் தோன்றுகிறது. வில்லனாக வரும் ஒரு கேரக்டரின் முகமொழிகள் கலங்க வைக்கிறது

ஜேக்ஸ் பிஜான் தன் இசை வழியே படத்தின் உணர்வுகளை அழகாக நமக்குள் கடத்துகிறார். க்ரைம் திரில்லர் படத்திற்கு பின்னணி இசை  எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து உழைத்துள்ளார். அந்த உழைப்பிற்கான பலன் திரையில் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி மிகச் சிறந்த ஷாட்களால் கண்களை கட்டிப் போடுகிறார். பதட்டம் ஏற்படுத்தும் பல காட்சிகளுக்கு மேலும் அதிக உயிர் கொடுத்திருப்பது அவரே..!

வெறும் சைக்கோ திரில்லர், க்ரைம் திரில்லர் என்பதோடு நிற்காமல் படத்தின் முடிவில் ஒரு நல்ல மெசேஜையும் வைத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

ஒரு திரைப்படத்தில் எழுத்தாளரின் பங்கு இருந்தால் அந்தப் படம் இன்னும் மேன்மை அடையும் என்பதை உணர்ந்து எழுத்தாளர் ஆல்ப்ரெட் பிரகாஷை தனக்குத் துணையாக்கி கொண்டுள்ளார் இயக்குநர். வசனங்களிலும் திரைக்கதையிலும் எழுத்தாளர் ஆல்ப்ரெட் பிரகாஷின் தனித்துவமான உழைப்பு தெரிகிறது.

காட்சி அமைப்புகளில் பெரிய அளவில் வன்முறை தெரியாவிட்டாலும் வன்முறையின் வீரியம் நம் மனக்கண்ணில் நிழலாடுகிறது. முன் பாதியில் மின்னலெனப் பாயும் படம் பின் பாதியில் சில இடங்களில் மெதுவாகக் கடக்கிறது. மேலும் சில முக்கியமான லாஜிக் கேள்விகளும் பின்பாதியில் எழுகிறது.

அதையெல்லாம் ஈடுகட்டும் விதமாக க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்து தானொரு புத்திசாலித்தனமான இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

தமிழில் நல்லதொரு திரில்லர் படம் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைக்கிறது இந்தப் போர் தொழில்’ திரைப்படம்..!

RATING : 4 / 5

Our Score