full screen background image

பொன்னியின் செல்வன்-2 – சினிமா விமர்சனம்

பொன்னியின் செல்வன்-2 – சினிமா விமர்சனம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்காக, இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெட்றாஸ் டாக்கீஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், மதுராந்தகனாக ரகுமான், சுந்தர் சோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன், பார்த்திபேந்திரனாக பிரபு, முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயராக மோகன்ராமன், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம், வீரபாண்டியனாக நாசர், ரவிதாசனாக கிஷோர், சேந்தன் அமுதனாக அஸ்வின் கக்கமானு, ராஷ்டிரகூட மன்னனாக பாபு ஆண்டனி, சம்புவரையராக நிழல்கள் ரவி, கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, லால், விஜய் யேசுதாஸ், அர்ஜூன் சிதம்பரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வானதியாக சோஷித துலிபலா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா, வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ரவிவர்மன், தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி, படத் தொகுப்பு – கர்பிரசாத், கதை – கல்கி, திரைக்கதை – மணிரத்னம், ஜெயமோகன், குமரவேல், வசனம் – ஜெயமோகன், பாடல்கள் – இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவ ஆனந்த், கிருத்திகா நெல்சன், சண்டை இயக்கம் – ஷாம் கெளஸல், திலீப் சுப்பராயன், கெச்சா கம்பாக்டீ, நடன  இயக்கம் – பிருந்தா, உடைகள் – ஏகோ லகானி, ஒப்பனை – விக்ரம் கெய்க்வாட், நகைகள் – கிரிஷ்ணதாஸ் அண்ட் கோ, விளம்பரம் – ராகுல் நந்தா, பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், யுவராஜ், VFX – NYVFXWALLAH, DI – Red Chillies Entertainment, தயாரிப்பு நிர்வாகம் – சிவ ஆனந்த், தயாரிப்பு – சுபாஷ்கரன், மணிரத்னம், இயக்கம் – மணிரத்னம்.

முதல் பாகத்தின் இறுதியில் இலங்கையில் இருந்து அருண்மொழி வர்மன் தாயகம் திரும்பும்போது பாண்டியனின் ஆபத்துதவிகளால் தாக்கப்படுகிறான். சண்டையில் கலம் உடைந்து விழ.. அருண் மொழி வர்மன் தண்ணீரில் விழுகிறான். அதே நேரம் தஞ்சையில் கீழ்வானத்தில் தூம கேது தோன்றி விசித்திரத்தைக் கொடுக்க ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை சோழர்களின் அரண்மனையில் இருப்பவர்களும், மக்களும் ஊகிக்கிறார்கள். இதோடு முதல் பாகம் நிறைவடைந்தது.

இந்த இரண்டாம் பாகத்தின் துவக்கத்திலேயே அருண் மொழி வர்மனைத் தொடாமல், நந்தினி-ஆதித்த கரிகாலன் காதல் எப்படி துவங்கியது என்பதை சொல்கிறார்கள். பின்பு அருண்மொழி வர்மனை வந்தியத்தேவனும், பூங்குழலியும் தமிழகத்திற்குக் கொண்டு வந்து நாகப்பட்டினத்தில் இருக்கும் சூடாமணி விகாரம் என்னும் புத்த மடாலயத்திற்கு ரகசியமாக அனுப்பி வைக்கிறார்கள்.

பூங்குழலி தஞ்சைக்கும், வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனை பார்ப்பதற்காக பழையாறைக்கும் செல்கிறார்கள். சோழ மண்டலம் முழுவதும் அருண்மொழி வர்மனுக்கு ஏதோ நடந்துவிட்டதாகவே மக்கள் நினைக்கிறார்கள். குழப்பங்கள் கூடியிருக்கின்றன.

ஆனால் பாண்டியனின் ஆபத்துதவிகளுக்கு அருண்மொழி வர்மன் உயிரோடு இருப்பது தெரிய வர.. அவனைக் கொல்ல நாகப்பட்டினத்திற்கே வந்துவிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் கொலை செய்யும் திட்டத்தோடு நந்தினி அவனுக்கு அழைப்பு விடுக்கிறாள். இதையறிந்த வந்தியத்தேவன், அருண்மொழி வர்மன், குந்தவை ஆகியோர் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு பயணமாகிறான்.

இன்னொரு பக்கம் தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழர் பழுவேட்டரையர்களால் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்று சிற்றரசர்களும், மக்களும் நினைக்க நாடே பெரும் குழப்பத்தில் ஆழந்திருக்கிறது.

இந்தக் குழப்பம் தீர கடம்பூர் அரண்மனையில் என்ன நடக்கிறது..? ஆதித்த கரிகாலன் நந்தினியிடமிருந்து தப்பித்தானா..? அருண்மொழி வர்மனின் கதி என்னவானது..? பாண்டியனின் ஆதரவாளர்களை அவன் வென்றானா..? வந்தியத்தேவன்-குந்தவை காதல் என்னவானது..? பூங்குழலி அருண்மொழி வர்மன் காதல் என்னவானது..? சுந்தர சோழருக்கு உண்மை தெரிந்ததா..? இதெல்லாம்தான் இந்த 2-ம் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதை..!

இந்த 2-ம் பாகத்தில் ஆதித்த கரிகாலன்-நந்தினி இடையேயான காதல், மோதலை மிகப் பிரதானமாக்கி படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

முதல் பாகத்தில் சிறிது நேரமே வந்திருந்தாலும் தனது வழக்கமான நடிப்பினால் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருந்த ஆதித்த கரிகாலனான விக்ரம், இந்த 2-ம் பாகத்தில் அதகளம் செய்திருக்கிறார்.

கடம்பூர் அரண்மனைக்குள் நுழைந்தவுடன் குதிரையில் அமர்ந்தபடியே பழுவேட்டரையர் உட்பட அனைத்து சிற்றரசர்களிடமும் கேலி, கிண்டலாக பேசும்விதத்தில் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார். மேலும் அதே அரண்மனையில் சோழ சாம்ராஜ்யத்தை 2-ஆக பிரிப்பதை எதிர்த்து கோபக் குரல் கொடுத்து அவர்களுக்கு சவால் விடும் காட்சிகளிலெல்லாம் பொறி பறக்கிறது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நந்தினியுடனான சந்திப்பில் சுவாரஸ்யமான வசனங்களின் உதவியுடன் தனது காதல் கதையை எடுத்துவிடுவதும், காதல் மயக்கத்தில் தனக்காகக் காத்திருக்கும் சோழ அரியணையைக்கூட நினைக்காமல் சாவிற்குத் தயாராகும் அந்த நடிப்பை விக்ரம் கொஞ்சமும் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

இவருக்கு ஈடு கொடுத்து தனது வருத்தம் தோய்ந்த முகத்தில் ஆயிரமாயிரம் விசனங்களை முன் வைத்து வசனங்களினால் காதல் காவியம் பேசி, உயிரோவியமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்.

தான் கடந்து வந்த கொடுமையான பாதையை அவ்வப்போது நினைத்துப் பார்த்துத் துயரம் கொள்வதும், தனது தாயாரைப் பற்றிய தகவலைக் கேட்டவுடன் அவளைப் பார்க்க வேண்டும் என்று துடிப்பதும், விக்ரமை பார்த்தவுடன் தனக்குள் மிச்சம், மீதியிருக்கும் அந்தக் காதலினால் அவரைக் கொல்ல முடியாமல் தவிப்பதுமாய் ஒரு பெரும் நடிப்புப் போராட்டத்தையே காண்பித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

ரவிதாசனிடம் “ஆதித்தன் கண்டிப்பாக வருவானா?” என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக வருவேன். ஏனென்றால் அழைத்திருப்பது நான்” என்று சொல்லுமிடத்திலும், “என்னால் முடியாத எதையும் உன்னால் செய்ய முடியாது” என்று சொல்லுமிடத்திலும் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஐஸ். அவருடைய தாயான ஊமை ராணி கதாப்பாத்திரத்தையும் அவரே செய்திருந்தாலும் அது அதிக நேரங்களும் இல்லாமல், குளோஸப் காட்சிகளும் இல்லாமல் இருந்ததினால் ரசிக்க முடியவில்லை.

வல்லவரையன் வந்தியத்தேவன் இந்தப் பாகத்திலும் தனது சாகஸங்களை தொடர்ந்து செய்திருக்கிறார். விசில் அடித்தபடியே பாண்டியனின் ஆதரவாளர்களை வம்பிக்கிழுத்து சண்டையிடுவதிலும், நந்தினியிடம் சாதூர்யமாகப் பேசி தப்பிப்பதும், அருண்மொழி வர்மனிடம் காட்டும் பாசமும், ஆதித்தனிடம் காட்டும் மரியாதை கலந்த நெருக்கமும் கார்த்திதான் நம்மை அந்த சோழ சாம்ராஜ்யத்திற்குள் அனைத்து இடங்களுக்குள்ளும் இழுத்துச் சென்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

நாலு பக்கமும் தண்ணீர் சூழ்ந்த ஏரிக்கு நடுவில் கண்களை கட்டிய நிலையில் தன் கழுத்தில் வாளை நீட்டியிருப்பது குந்தவைதான் என்பது தெரிந்து சாதூர்யமான வசனங்களை பேசி குந்தவையுடன் காதல் மொழி பேசும் அந்த ஒரு காட்சியில் மொத்தத் தியேட்டரும் ஆஃபாகிவிட்டது. மணிரத்னத்தின் சிறப்பான இயக்கத்திற்கு இந்தக் காட்சியும் ஒரு சான்றாகும்.

குந்தவையான த்ரிஷா முதல் பாகம் போலவே படம் பார்ப்போரை வசீகரித்திருக்கிறார். கார்த்தியுடனான காதல் போர்ஷனில் இளசுகளை கொள்ளை கொண்டுள்ளார் த்ரிஷா. அதேபோல் ஊமை ராணி பற்றிய சம்பாஷனையில் அப்பாவுடன் மனஸ்தாபப்பட்டு கோபத்துடன் எழுந்துபோய் தனது ஆளுமையைக் காட்டும் அந்தக் காட்சியிலும், குந்தவையை காட்டியிருக்கிறார் த்ரிஷா.

அருண்மொழி வர்மனான ஜெயம் ரவி சூடாமணி விகாரத்தில் தனது உடல் நலம் தேறியவுடன் இளவரசனாக கம்பீரமாக ஆடையணிந்து நடந்து வரும் தோரணையிலும் அந்தக் காட்சியில் எதிரிகளிடமிருந்து அவர் தப்பித்து செல்லும் நயமான காட்சிகளிலும் அதிகம் கஷ்டப்படாமல் தனது நடிப்பைக் காண்பித்து ஜெயித்திருக்கிறார்.

சோபிதாவுக்கு இந்தப் பாகத்தில் அவ்வப்போது ஜெயம் ரவியை காதல் பார்வை பார்ப்பது மட்டுமே இவரது வேலையாகியிருக்கிறது. ஆனாலும், கதையின் முக்கியமான ஒரு வசனத்தைப் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பூங்குழலியால் நமக்கு மிகப் பெரிய ஏமாற்றம். இந்த 2-ம் பாகத்தில் இவரது நடிப்புக்கான ஸ்கோப்பே இல்லை. ஆழ்வார்க்கடியான் நம்பியான ஜெயராமின் துள்ளலான பேச்சும், நடத்தையும் இன்னொரு பக்கம் கதையை நகர்த்த உதவியிருக்கிறது.

ரவிதாசனாக நடித்திருக்கும் கிஷோரின் பழி வாங்கும் வெறி இந்தப் பாகத்திலும் அப்படியே குறைவின்றி தொடர்ந்திருக்கிறது. முதல் பாகத்தில் தலையைக் காட்டிய சேந்தன் அமுதன் இந்தப் படத்திலும் அதையேதான் செய்திருக்கிறார். நேரம் இல்லாத காரணத்தினால் கல்கி எழுதிய கதையில் இருந்த முக்கியக் கதாப்பாத்திரங்கள் பலவும் இந்தப் படத்தில் காணப்படவில்லை.

தொழில் நுட்பத்திலும் அசத்தியிருக்கிறார்கள் அத்தனை கலைஞர்களும்..! படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒவ்வொரு காட்சியிலும் கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகியோரின் கூட்டணி உழைப்பு நன்கு வெளிப்படுகிறது.

டைட்டில் துவங்கி கடைசிவரையிலும் பின்னணி இசையில் ஒரு கவன ஈர்ப்பைக் கொடுத்திருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். முதற் பாகத்தில் இருந்த வழமையான பிரம்மாண்டத்தைக் குறிக்கும் பின்னணி இசைக் கோர்வைகளில் இன்னும் கொஞ்சம் புதுமை சேர்த்து ஒவ்வொரு காட்சியிலும் தனது இருப்பைக் காண்பித்திருக்கிறார் ரஹ்மான்.  

‘அக நக’, ‘வீரா ராஜா வீர’ பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை என்பது சோகம்தான். ஆனாலும் அனைத்து பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளும், ரசிகர்களின் கண்களை அக்கம்பக்கம் நோட்டம்விடாமல் தடுக்கின்றன.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு கவிதை வடிவத்தில் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருக்கிறது. குந்தவை-வந்தியத்தேவன் சந்திப்பு, நந்தினி – ஆதித்த கரிகாலனுக்கு இடையிலான காதல் காட்சிகள், கடம்பூர் மாளிகையில் அவர்கள் தனியே சந்தித்துக் கொள்ளும் காட்சிகள், போர்க்களக் காட்சிகள் என்று அத்தனையிலும் தனது பங்களிப்பை நூறு சதவிதிகம் செய்திருக்கிறார் ரவிவர்மன். படத்தின் அனைத்து பிரேம்களையும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது.

தோட்டா தரணியின் கலை இயக்கம் சூடாமணி விகாரத்தை பிரம்மாண்டமாகக் காட்டுவதுடன் அந்த இடத்தையே புதுமையான வடிவத்தில் காட்டியிருக்கிறது. மேலும் அரசரின் தர்பார் அமைப்பும் ரசிக்க வைக்கிறது. அரண்மனையின் உட்புறத் தோற்றத்தையெல்லாம் திரைக்கதைக்கு ஏற்றபடி வடிவமைத்திருப்பதெல்லாம் தோட்டாவின் திறமைக்குச் சான்று.

ஒப்பனையிலும் ஒரு ஒய்யாரத்தை செய்திருக்கிறார்கள் ஒப்பனை கலைஞர்கள். த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா ஆகிய மூவரும் காட்சிக்குக் காட்சி கலர்புல்லாக வந்து பிரேமை ரசிக்க வைத்திருக்கிறார்கள். இவர்கள் அணிந்திருக்கும் கலர், கலரான உடைகள்கூட நம் கண்ணைக் கவர்ந்திழுக்கின்றன. மேலும் பழையாறையில் இருந்து கடம்பூர்வரையிலும் பயணிக்கும் விக்ரமின் உடையும், அணிகலன்களும்கூட நமக்கு ரசிப்பாக அமைந்திருக்கிறது.

ஜெயமோகனின் வசனங்கள் படத்தின் பல இடங்களில் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. நந்தினியிடம் வந்தியத்தேவன் நைச்சியமாகப் பேசி தப்பிப்பதும், குந்தவையிடம் பேசும் காதல் வசனங்களும், நந்தினி-ஆதித்த கரிகாலனின் காதல் பேச்சுக்களும், ஆதித்த கரிகாலன் பழுவேட்டறையர் மற்றும் சிற்றரசர்களிடம் பேசும் வீராவேச வசனங்களும் இந்தப் படம் என்ன மாதிரியான கதையைக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது.

மேலும், நந்தினி தனது மயக்கும் விழிகளாலும், தடுமாற வைக்கும் குரலாலும் பல்லவேந்திர பார்த்திபனை ஒரு கணத்தில் மயக்கிவிட, “நீ அவளை பார்த்தாயா…?” என்ற ஒரேயொரு கேள்வி மூலமாக நந்தினியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை விக்ரம் உடைத்துக் காட்டுவதும் அட்டகாசம்..!

முதல் பாகத்திலேயே அனைத்துக் கதாப்பாத்திரங்களின் அறிமுகமும் முடிந்துவிட்டதால் இந்தப் பாகத்தில் அடுத்தடுத்து கதையை நகர்த்தும்விதமாகவே திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

சில இடங்களில் திரைக்கதை மெதுவாக ஆனால் அதே சமயம் அழகாகவும், அடுத்தடுத்து பறக்கும் வேகத்திலும் சென்றிருப்பதால் முதல் பாகத்தைவிடவும் இந்த 2-ம் பாகமே பெருவாரியான ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக அமைந்திருக்கிறது.

இலங்கை கடல் பகுதி, கோடியக்கரை கடற்கரை பகுதி, இதன் அருகில் இருக்கும் ஓடைப் பகுதிகள், இருண்ட காட்டுப் பகுதிகள், நாகப்பட்டினத்தின் சந்தை, புத்த விஹாரம், அரண்மனைகள், கொற்றவை கோவில், ஏரி பகுதி என்று வெவ்வேறு இடங்களில் பல காட்சிகள் மாறி, மாறி படமாக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதீத சுவாரஸ்யத்தைத் தருகிறது.

நந்தினி-ஆதித்த கரிகாலன் காதல் கதையை மிகக் குறைவான வசனங்களுடன், அழகான ஒளிப்பதிவு கொண்ட காட்சியமைப்புகளுடன் ஒரு கவிதை வடிவத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

5 பாகங்கள் கொண்ட படத்தை 2 பாகமாக சுருக்கிக் கொடுத்தால் என்ன விளைவைக் கொடுக்குமோ அதுதான் இந்தப் படத்திலும் நிகழ்ந்திருக்கிறது. சில காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. பல காட்சிகள் காட்டப்படவே இல்லை. சில காட்சிகள் தனித்துத் தெரியும்படி அமைந்துவிட்டது. திரைக்கதையின் ஓட்டத்தில் சில  காட்சிகள் அடுத்தடுத்து தாவிச் சென்று கொண்டேயிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

குறையாகப் பார்க்கப் போனால் ஆதித்த கரிகாலனின் மரணத்திற்குப் பின்பு அரச குடும்பத்தினரிடம் அதற்குக் கிடைக்கும் மரியாதையும், துக்கமும் சரிவர படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதுதான்.

மேலும் இது சினிமா.. மாஸ் மீடியா.. தியேட்டருக்கு வரும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் கதையில் இல்லாத சம்பவமாக ராஷ்டிரகூட மன்னருடன் போர் செய்யும் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

இது வியாபார கேந்திரமாகிவிட்ட சினிமா துறையில் ஒரு மிகப் பெரிய கலைஞன் செய்து கொண்ட நேர்மையான சமரசமாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் பொருட்டே பார்த்திபேந்திர பல்லவன், மதுராந்தகன் ஆகியோரின் மன மாற்றங்களுக்குரிய அழுத்தமான காட்சிகளும் படத்தில் இல்லை.  ஆனாலும், அதனால் எந்தவொரு லாஜிக் எல்லை மீறலும் இல்லாமல் எளிய முறையில் நம்மால் இதைக் கடந்து போக முடிகிறது.

அரச குடும்பத்து சர்ச்சைகள், குடும்ப ஒற்றுமை.. எதிரிகளை பார்த்தவுடன் ஒன்று சேரும் குடும்ப உணர்வு என்று பயணிக்கும் இந்தக் கிளைமாக்ஸ் கடைசியாக முடி சூட்டும் விழாவின்போது அமரர் கல்கி சொன்ன கடைசி கதையை மட்டும் உண்மையாக்கியிருக்கிறது. ஆனால், அரியணை ஏறும் மதுராந்தகன் நிஜக் கதையில் வேறு ஆள் என்பதும் உண்மைதான்.

இந்தக் கதையை யாராவது திரைப்படமாக எடுக்க மாட்டார்களா என்று கடந்த 60 ஆண்டுகளாக ஒட்டு மொத்தத் தமிழர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணத்தில், தனது சிறப்பான படைப்புத் திறனால் “இதைவிட யார் அழகாக எடுத்துவிட முடியும்..?” என்ற கேள்வியை ரசிகர்களுக்குள் எழுப்பிய இயக்குநர் மணிரத்னத்திற்கும், இந்தக் கதையை நம்பி படமாக்கத் துணிந்து முன் வந்த தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கும், லைகா நிறுவனத்திற்கும் நமது கோடானு கோடி நன்றிகள் உரித்தாகட்டும்..!!!

பொன்னியின் செல்வன்-2 – பார்த்தே ஆக வேண்டிய திரைப்படம்..!

RATING :  4 / 5

Our Score