‘பொங்கியெழு மனோகரா’ என்ற வார்த்தையை இத்தனையாண்டுகளாக நம்மூர் இயக்குநர்கள் எப்படி கோட்டைவிட்டார்கள் என்று தெரியவில்லை. இப்போது ரமேஷ் ரங்கசாமி என்பவர் கண்டறிந்து தான் இயக்கும் புதிய, முதல் படத்திற்கு டைட்டிலாக வைத்துவிட்டார்.
‘வெளுத்துக் கட்டு’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ ஆகிய படங்களில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் இந்தப் புதிய படத்தை இயக்கியுள்ளாராம் ரமேஷ். தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போனபோது தான் சிந்தித்து ராகத்துடன் சேமித்து வைத்திருந்த ஒரு பாடலை பாடிக் காட்ட.. தயாரிப்பாளருக்கு அந்தப் பாடலே பிடித்துப் போய் படம் ஓகே ஆனதாம்..
‘தாமரை பூ போல’ என்று துவங்கும் அந்தப் பாடலை நமக்காக பாடியும் காட்டினார். அக்கால இளையராஜாவை ஞாபகப்படுத்தியது அந்தப் பாடல். இந்தப் படம் 1990-களில் நடக்கிற கதையாம்.. இதனால் அந்தக் காலம்போல இருக்கும் கிராமத்தை தேடியலைந்து கடைசியாக வீரப்பன் கோட்டையான சத்தியமங்கலம் அருகே பிடித்திருக்கிறார். “இப்போவெல்லாம் கிராமத்துலேயே தார் ரோடு போட்டுட்டாங்க ஸார்.. மண் ரோடு இருக்குற மாதிரியான கிராமத்தை கண்டுபிடிக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிருச்சு…” என்றார்.
“90-கள் என்றால் சுப்ரமணியபுரம் மாதிரியா…?” என்று கேட்டதற்கு “இல்லை.. இது வேறு கதை.. ஒரு சாதாரண மனுஷன்.. காதலனுக்கு.. திடீர்ன்னு பொங்கி எழுற மாதிரியான ஒரு சிச்சுவேஷன் வருது. அதுல அவன் என்ன பண்றான்றதுதான் கதை..” என்கிறார். ஆனால் இளையராஜாவின் அந்தக் கால பாடல்களின் தாக்கம் படத்தில் இருக்குமாம்.. “ரீமிக்ஸ் பாடல்கள் வைக்கும் ஐடியாவே இல்லை..” என்றார். “இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தப் போவதால் டைட்டிலில் நிச்சயமாக அவருக்கு நன்றி கார்டு போடுவேன்…” என்றார். இதற்காகவே இவருக்கு நன்றி..!
“காதல் கதைதான்.. கொஞ்சம் காமெடி கலந்து இன்றைய ஜெனரேஷனும் பார்க்குற மாதிரி எடுத்திருக்கேன்…” என்றவர் கடைசியாக சொன்னது பகீர் ரகம்.. “என் படத்தோட ஷூட்டிங்ல கேரவன் வேன் பயன்படுத்தவே இல்லை ஸார்.. நான் ஆரம்பத்திலேயே ஆர்ட்டிஸ்ட்டுகள்கிட்ட சொல்லிட்டேன். கேரவன் வேன் தர மாட்டேன்னு.. அவங்களும் ஒத்துக்கிட்டாங்க.. அதுனால நிறைய செலவும் நேரமும் மிச்சம்..” என்றார்.
இது சின்ன படம்தானே..? சின்ன ஆர்ட்டிஸ்ட்டுகள்தானே…? ஒத்துக்கிட்டுத்தானே ஆவணும்..? இந்தப் படம் ஹிட்டாகி அடுத்தப் படத்துக்கு ஹன்ஸிகாவையோ, நயன்தாராவையோ புக் பண்ணிட்டு, கேரவன் தரலைன்னா நீங்களே இயக்குநரா இருக்க மாட்டீங்க பிரதர்..!