டீம் வொர்க் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் பா.ரஞ்சித் குமார் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பேய் இருக்கா இல்லையா’.
இந்தப் படத்தில் அமர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஜோதிஷா நடித்துள்ளார். மற்றும் விஜயகுமார், லிவிங்ஸ்டன், தாடி பாலாஜி, மதன் பாப், பொன்னம்பலம், அனு மோகன், மதுமிதா, ரேகா சுரேஷ், சுரேஷ், சதா, பிந்து ரோஷினி, கீர்த்தி கௌடா, பட்ஜெட் லோகநாதன், சுவாமிநாதன், கூல் சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – டி.மகிபாலன், இசை, பாடல்கள் – ஆர்.சம்பத், கலை – ராஜு, நடனம் -ராபர்ட், சுரேஷ், ஆன்டோ, சண்டை பயிற்சி – அமிதாப், படத் தொகுப்பு – ஆர்.ஜி.ஆனந்த், நிர்வாகத் தயாரிப்பு – ராஜேந்திரன், இணை தயாரிப்பு – எஸ்.சுப்பிரமணியம் வாத்தியார், ஆர்.எங்கல்ஸ், ஆர்.ராதாகிருஷ்ணன், எம்.ஜெகதாளன், எழுத்து, இயக்கம் – பா.ரஞ்சித்குமார்.
படம் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் குமார் பேசும்போது, “கடவுளை நேர்ல பார்த்தேன்’னு சொன்னால் நம்ப மறுக்கும் நாம், ‘பேயை பார்த்தேன்’னு சொன்ன உடனே ‘அப்படியா?’ என்று நம்பி விடுகிறோம்.
அப்படியென்றால் பேய் என்பது என்ன..? அது அமானுஷ்ய சக்தியா.. வாழ்ந்து இறந்தவர்களின் ஆத்மாவா… அல்லது மனிதர்களின் மூட நம்பிக்கையா… என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும்விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று மிகப் பெரிய தாதா ஒருவரின் தம்பியை அடித்து விடுகிறார்கள். கோபம் கொண்ட தாதா, அந்த நால்வரையும் கொல்வதற்காக தேடிக் கொண்டிருக்கிறான்.
அவனிடமிருந்து தப்பிக்க நினைத்த அவர்கள் ஓடி ஒளியும் இடம் ஒரு பங்களா. அங்கு போன பிறகுதான் தெரிகிறது அது அமானுஷ்யமான பங்களா என்பது. உள்ளே பேய்களின் நடமாட்டம் வெளியே ரவுடிகளின் நடமாட்டம். உள்ளே இருந்தால் பேய் கொன்று விடும். வெளியே வந்தால் ரவுடிகள் கொன்று விடுவார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை காமெடி, திகில் கலந்து படமாக்கி இருக்கிறோம்.
இதற்கு முன்பு நான் இயக்கி, நாயகனாக நடித்த ‘மண்டோதரி’ படம் எனக்கு இயக்குநராகவும், நடிகராகவும் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால் இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை.
படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அலங்காநல்லூர், காரைக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது…” என்றார் இயக்குநர் பா.ரஞ்சித் குமார்.