2017-ம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் ‘மெரினா புரட்சி’ என்ற ஆவணத் திரைப்படமாக தயாரித்திருந்தனர். இ்யக்குநர் M.S.ராஜ் இயக்கியிருந்தார்.
கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற ‘மெரினா புரட்சி’ படம் நார்வே, கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.
தற்போது நாச்சியாள் பிலிம்ஸும், தருவை டாக்கீஸும் இணைந்து 2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை ‘PEARLCITY MASSACRE’(முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப் படமாக தயாரித்துள்ளனர். ‘மெரினா புரட்சி’யை இயக்கிய இயக்குநர் M.S.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் M.S.ராஜ் பேசுகையில், “PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவணத் திரைப்படம் உண்மையில் 2018-ம் ஆண்டு மே 22 & 23 தேதிகளில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக்கிறது. மேலும் அரச இயந்திரம் செய்த குற்றங்களை ஆதாரங்களுடன் படமாக்கியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப் படத்தை திரையிட்டோம். வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர்.
தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் 32 நாடுகளில் இந்தப் படத்தைத் திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக்களை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம். நீதி கோரும் எங்களின் இந்த முயற்சிக்கு, இந்தப் பயணத்திற்கு ஊடகவியலாளர்களின் ஆதரவை பணிவுடன் வேண்டுகிறோம்…” என கேட்டுக் கொண்டார்.









