கிருஷ்ணா நடித்திருக்கும் ‘பண்டிகை’ திரைப்படம் வருகின்ற மார்ச் 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து இருக்கும் ‘பண்டிகை’ படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை வருகின்ற மார்ச் 9-ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
“கை ஓங்கினால்தான், தான் நினைத்தது கிடைக்கும் என்று நினைக்கும் ஒரு கோபக்கார அனாதை இளைஞன்(கிருஷ்ணா), ஒரு கட்டத்தில் தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான்.
இதன் பின்பு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அவன் தன் காதலிக்காக(ஆனந்தி) நிழல் உலக தாதாக்கள் நடத்தும் ஒரு சண்டையில் கலந்து கொள்ள நேரிடுகிறது. அதில் இருந்து எப்படி அவன் வெளியே வருகிறான் என்பதுதான் எங்களின் ‘பண்டிகை’ படத்தின் கதை.
திரைப்பட விநியோக துறையில் பிரபலமாக விளங்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் எங்கள் படத்தை உலகமெங்கும் வெளியிடுவது, அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.
படம் வெளியாகும் நாளான மார்ச் 9-ம் தேதி, எங்கள் அனைவருக்கும் பண்டிகை நாளாக இருக்கும்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குநர் பெரோஸ்.









