வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார்.
1957-ம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா – சைதன்யா- சரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,
”திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல்முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம்.
என்னுடைய சகோதரர்கள் சானுக்யா – சைதன்யா – சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக் குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை.
இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம்.
டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்.
படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.
சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,
”இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.
தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,
”இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம்.
இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950-களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்..” என்றார்.
நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,
”இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும்கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
இதில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி…” என்றார்.
நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,
”இப்படத்தின் கதையை நாங்கள் 2018-ம் ஆண்டில் விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025-ம் ஆண்டில்தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம்.
இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது.
இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தைவிட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.
நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.
இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்தக் காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம் பெறும்.
இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்தப் படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.
எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பதுதான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்தப் படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது.” என்றார்.









